Tuesday, 14 July 2009

இடைவிடா இருமல்





நாள் முழுதும் வந்துபோன
மனிதர்களால் கசங்கிப்போன
நகரம் களைப்போடு
கண் அயர்ந்து கிடக்கிறது...

அடைக்கப்பட்ட கடைகளில்
நடந்த வரவு-செலவு கணக்கு
மணல் துகள்களாக சிதறிக்கிடக்கின்றன
வாசற்படிகளில் ...

மாநகராட்சி குழாய்களில்
சாக்கடை கலந்து குறுகுறுவெனவரும்
கொஞ்சம் தண்ணீருக்கு
காத்திருக்கின்றன காலிக்குடங்கள்...

புதிதாக ஒட்டிய போஸ்டரை
பசையின் வாசனையோடு தின்னும்
மாட்டின் சுருங்கிப்போன காம்பை
சப்பியிழுக்கிறது கன்றுக்குட்டி...

சளசளத்து ஒடும் சாக்கடையோரம்
அசந்து தூங்கும் பிச்சைக்காரனின்
அலுமினியப் பாத்திரத்தை சுரண்டுகிறது
கொழுத்த பெருச்சாளி...


இவர்களோடு...

பிரமாண்ட நுழைவு வாயிலருகே
மப்ளர் சுத்திய வயதான காவல்காரர்
இடைவிடாது இருமிக்கொண்டிருக்கிறார்
புறந்தள்ளிய மகனை நினைத்து...

~

16 comments:

  1. //பிரமாண்ட நுழைவு வாயிலருகே
    மப்ளர் சுத்திய வயதான காவல்காரர்
    இடைவிடாது இருமிக்கொண்டிருக்கிறார்
    புறந்தள்ளிய மகனை நினைத்து...//

    எதிர்பார்க்கவில்லை முடிவில் இவ்வரிகளை. சுடுகிறது நிஜங்கள்.

    ReplyDelete
  2. //சளசளத்து ஒடும் சாக்கடையோரம்
    அசந்து தூங்கும் பிச்சைக்காரனின்
    அலுமினியப் பாத்திரத்தை சுரண்டுகிறது
    கொழுத்த பெருச்சாளி...//

    அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுபவர்களை நினைத்துப் பார்க்கிறேன்..

    ReplyDelete
  3. நல்லதொரு காட்சிபதிவு, கவிதை அழகு. உங்க குங்குமம் அனுபவம் எப்படி? என்னோட அனுபவத்தை நான் ஒரு பதிவா போட்ருக்கேன் :)

    ReplyDelete
  4. இவையெல்லாம் ம(றைத்)றந்து மலர்ச்சியுடன் காளைமாட்டு சிலையருகே அரசியல் விளம்பர தட்டிகள்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு காட்சியும்..

    யதார்த்தமும் உண்மையும்
    அறையும் முகங்கள்!

    அற்புதமான படைப்பு!
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. //சுடுகிறது நிஜங்கள்//
    ஆமாம் ராமலக்ஷ்மி

    //அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுபவர்களை நினைத்துப் பார்க்கிறேன்//
    உண்மைதான் நாகா

    //உங்க குங்குமம் அனுபவம் எப்படி?//
    உங்கள மாதிரியேதான்

    //காளைமாட்டு சிலையருகே அரசியல் விளம்பர தட்டிகள்.//

    எது.. அஞ்சாநெஞ்சன் கட் அவுட்டா???

    //ப்ச்//
    வாங்க பழமை

    //யதார்த்தமும் உண்மையும்
    அறையும் முகங்கள்!//
    ஆமாம் சுரேகா...
    வருகைக்கு நன்றி சுரேகா...

    ReplyDelete
  7. //புதிதாக ஒட்டிய போஸ்டரை
    பசையின் வாசனையோடு தின்னும்
    மாட்டின் சோர்ந்து சுருங்கிப்போன
    காம்பை சப்பியிழுக்கிறது கன்றுக்குட்டி...//

    கதிர் அடுத்தடுத்து
    அற்புதமாய் கவிதைகள் நல்ல கவிதை..
    கருத்துகளுடன்.......

    ReplyDelete
  8. //பிரியமுடன்.........வசந்த் said...
    கதிர் அடுத்தடுத்து
    அற்புதமாய் கவிதைகள் நல்ல கவிதை..
    கருத்துகளுடன்.......//

    நன்றி வசந்த்

    ReplyDelete
  9. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  10. யதார்த்த கவிதை!

    ReplyDelete
  11. அவலத்தைச் சுட்டும் வரிச்சுடர்கள்..!

    ReplyDelete
  12. எப்படி கதிர்...இது எப்படி சாத்தியம்....? சரேலென்று இரவு 11 மணிக்கான நகரத்தை பெயர்தெடுத்து கண் முன் கொண்டு வந்து நிறுத்திகிறதே.. இந்த மாயா ஜால வார்த்தைகள்...! அசத்தல் கதிர்....ஒரு வலியோடு இந்தக்காட்சிகளை தினம் பார்த்துக் கொண்டு நாம் சென்றாலும்...அவற்றின் பின் புலத்தில் இருக்கும் அவலம்....இப்போது உணர முடிகிறது.

    எதார்த்தமான வாழ்வில் இயலாமையாய் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில்...ஒளிந்திருக்கிறது...ஓராயிரம் உண்மைகள்...! நமஸ்காரங்கள் கதிர்!

    ReplyDelete
  13. ரொம்ப அவலமும் கொடுமையும்தான் கதிர்..முதுமையைவிட..புறக்கணிப்பு

    ReplyDelete
  14. இயல்பை வெளிப்படுத்துதல் நன்று;

    ஆனா, அந்த வெட்டி, மடக்கிப் போடுறது இடிக்குதுங்க மாப்பு!

    ReplyDelete
  15. // இவையெல்லாம் ம(றைத்)றந்து மலர்ச்சியுடன் காளைமாட்டு சிலையருகே அரசியல் விளம்பர தட்டிகள்.//

    அதுதான் இன்றைய நிலை..

    :(

    ReplyDelete

இது படிச்சீங்களா?