Monday, 17 August 2009

தொலைந்தவன் வரைந்த கோலம்






வழக்கம் போல் அந்த மாலை நேரத்தில் நானும், நண்பர் தனபாலனும் நடந்து கொண்டிருந்தோம். தார் சாலையில் நடப்பதை தவிர்த்து, அந்த மண் பாதையில் பெரும்பாலும் நடப்போம். மாலை நேரத்தில் அதுவும் வெளிச்சத்தின் மேல் இருள் கசியும் அந்த இனிய மென்மையான பொழுதில் நடப்பது சுகம். நாங்கள் சற்று வேகமாக நடக்கும் இயல்பு கொண்டிருப்பதால், தொடர்ச்சியான பேச்சு இல்லாமல். சீரான இடைவெளி விட்டு பேச்சு, இருவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் வந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் தொலைவிலிருந்தே கவனித்தேன், ஒரு ஆள் அந்த மண் சாலையின் மையத்தில் அமர்ந்திருந்ததை. என் பார்வைக்கு முதுகு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் நெருங்கி வரும் போது கவனித்தேன் அது ஒரு வயதான மனிதன், சுமார் 60 வயது இருக்கலாம். மேல்சட்டை எதுவும் இல்லை, உற்றுக் கவனிக்கும் முன்பே, உடையையும், தலையையும் வைத்து உள் மனது அடையாளப்படுத்தியது அது ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனெற்று.

வழக்கமாக இதுபோன்ற மனிதர்களை கடந்து போக மனது மிக எளிதாக பழகிப் போய் விட்டது. முன்தினம் தான் புத்தகத் திருவிழாவில் பெரியார்தாசன் “மனம் அது செம்மையானால்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் மனப்பிறழ்வு, மனநோய் பற்றியும், அதற்கான எளிய சிகிச்சை பற்றியும் அற்புதமாக உரை நிகழ்த்தியிருந்தார். இந்த மனிதனை பார்த்த விநாடி சட்டென நண்பர் பெரியார்தாசன் சொன்ன ஒரு வாசகத்தை நினைவு கூர்ந்தார்.

நடக்கும் வேகத்தைக் குறைக்காமல், சற்று ஒதுங்கி அந்த மனிதனை கடந்தோம். கடக்கும் போது அந்த மனிதன் ஏதோ தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பது கேட்டது அதில் “அப்படியே பண்ணு” என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது. அதற்கு முன், பின் பேசிய வாசகங்கள் புரியவில்லை, என்னவாக இருக்கும் என்று ஒரு விநாடி கூர்ந்து யோசித்தேன். அந்த மனிதன் பரபரப்பாக அந்த மண் தடத்தில் தன் விரலால் எதோ செய்து கொண்டிருந்தார். ஏதாவது எழுதுகிறாரா என ஒரு ஆர்வத்தோடு பார்த்தேன். எழுத்துகள் இல்லை, வெறும் கோடுகள் வளைவுகளும், நெளிவுகளுமாக இருந்தது. தலையை சற்றே சிலுப்பிக்கொண்டு மீண்டும் நடையில் கவனமானேன்.

எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன். 25 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நீள் சுற்று வட்டத்தில் நடந்து, அந்த இடத்தை நெருங்கும்போது தெரிந்தது, அந்த மனிதன் இன்னும் அதே இடத்தில் பரபரப்பாக அந்த மண் தடத்தில், தன் விரல்கள் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது. நண்பரிடம் கேட்டேன் “இந்த மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும் தானே” அவர் ஒற்றை வார்த்தையில் அழுத்தமாக சொன்னார் “கண்டிப்பாக”. மீண்டும் இருவரிடமும் மவுனம் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டது.

நெருங்கிய போது கவனித்தேன் அந்த மனிதன் முதல் தடவை பார்த்தபோது இருந்த இடத்தைவிட சில அடி தூரம் தள்ளி அமர்ந்து கிறுக்கிக் கொண்டிருந்தார். என்ன கிறுக்கியிருக்கிறார் என்று உற்றுப்பார்த்தேன். மனம் அதிர்ந்தது, அந்த புழுதி மண்ணில் வெறும் கோடுகளும், வளைவுகளும் கொண்டு பூ மாதிரியான ஒரு படத்தை பல முறை அச்சு எடுத்தது போல் ஒரு கோலத்தை மிக அழகாக வரைந்திருந்தார். மிக நுட்பமான கோலம் போன்று அது தெரிந்தது. நண்பரிடம் “கோலத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.

சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது. எது என்னை அந்த இடத்தில் நிற்காமல் என்னை விரட்டியது என மனது குறுக்கும் நெடுக்குமாக பரபரத்தது. அடுத்த சில நிமிடங்களில் மனது முழுக்க அந்த மனிதன் பற்றிய சிந்தனை என்னை கவ்வியது.

யாராக இருக்கும் இந்த மனிதன், இந்த மனிதனின் பெற்றவர்கள் நாம் நம் குழந்தையை வளர்ப்பது போல்தானே வளர்த்திருப்பார்கள். படித்திருப்பாரா? திருமணம் ஆகியிருக்குமா? எதன் காரணமாய் மனநிலை பிறழ்ந்திருக்கும். எந்தக் விநாடியில் இந்த மனிதன் மனிதனிலிருந்து பைத்தியகாரனாக தடம் புரண்டிருப்பான். அது சினிமாவில் காட்டுவது போல் சட்டென ஒரு விநாடியில், மின்னல் போல் நிகழ்ந்திருக்குமா? அல்லது தொடர்ச்சியான பற்பல தோல்விகள், இழப்புகளில் சிறிது சிறிதாக மனது விரிசல் விட்டு சிதறிப் போயிருக்குமோ? அந்த மனப்பிறழ்வு அணைக்கட்டில் கசியும் நீர்போல் மெலிதாக, சீரான இடைவெளியில் நிகழ்ந்திருக்குமா?. எல்லோரிடமும் இருக்கும் இயல்பான காதல், காமம், கோபம், பாசம், ஆசை போன்ற ஏதாவது உணர்வுகள் இவருக்கு இப்போதும் இருக்குமா?

மனநிலை பிறழும் நிலை வரை அவர்களை அவர் என்றொ, அவன் என்றொ அல்லது அவள் என்றொ அழைத்த நாம், மனநிலை பிறழ்ந்த தருணத்திலிருந்து “அது” என்றே அழைக்கிறோமே, ஏன் அவர்களை மனிதனாக பார்க்க முடிவதில்லை. எதன்பொருட்டு சகமனிதனிடமிருந்து இவர்கள் தொலைந்து போகிறார்கள்?.

பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளின் ஓரத்திலும், உணவு விடுதிகளின் அருகிலும் தவறாமல் அவர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனாலும் நம்மால் அவர்களை ஒரு சக மனிதனாக பார்க்க முடிவதில்லையே, அது எதனால்?

எத்தனையோ முறை அவர்களைப் பார்த்திருந்தாலும், அன்று அந்த மனிதனை பார்த்த பின் கேள்விகள் சுனாமியாய் மனதினுள் அடித்தது. எந்தச் சுயநலம் நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கிறது. விடைதேட மனது வெட்கப்பட்டது.

அந்த மண் சாலையில் இவ்வளவு நுணுக்கமாக கிறுக்கப்பட்ட இந்த கோலத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆயுள் இருக்கப் போகிறது. அநேகமாக அந்த மண் தடத்தில் அடுத்து வரப்போகும் நாலு சக்கர வாகனம் வரை தானே!!!???

வாழ்க்கையும் ஒரு கோலம் போலத்தானோ?

குறிப்பு: மனநிலை பிறழ்ந்த மனிதர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை இளைஞர் கிருஷ்ணனின் அக்சயா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு என்னால் முடிந்த ஒரு தொகையை அனுப்பி வைத்தேன். அவ்வப்போது தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அக்சயா அறக்கட்டளை இணைய தளத்தில் உள்ள விபரங்களை ஒரு முறை முழுதும் படியுங்கள், குறிப்பாக கிருஷ்ணன் அவர்களின் பேட்டியின் காணொளியைப் பாருங்கள். நீங்களும் அதற்கு உதவலாமே!.





பகுதியில் இடம் பிடித்த கட்டுரை


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

40 comments:

  1. மனநிலை பாதிக்கப் பட்டவர்களைப் பார்க்கும் போது எனக்கும் உங்களுக்குள் எழும் கேள்விகளே எழும்.

    நல்ல இடுகை கதிர்.முடிந்ததை செய்வோம்.

    ReplyDelete
  2. அக்சயா ட்ரஸ்ட்டிற்கு முடிந்த்தைச் செய்கின்றேன் கதிர்.

    ReplyDelete
  3. கதிர் அழுத்தமான ஒரு பதிவு உங்களிடமிருந்து. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். எப்போதெல்லாம் இது போன்றோரை சந்திக்கின்றேனோ, அப்போதே எனது அத்தனை சந்தோசம் அல்லது கவலைகளை மறந்து அவர்களை பற்றிய எண்ணச்சுமையை உள்ளேற்றி நாள் முழுதும் நினைவாயிருப்பேன், மனம் கனத்து.

    கடவுளை நான் திட்டுவதும் அந்த தருணத்தில் தான்.

    நாமும் அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் எனும் எண்ணம் எழுந்தாலும் சூழலின் காரணமாக இயலாத போது என் மேலே வெறுப்பும் வரும் தருணமும் அதுதான்.

    நன்றி நண்பா, என்னால் இயன்றதை செய்கிறேன்.

    நீங்கள் சந்தித்த அந்த மனிதர் வாழ்க்கையே நான் கிறுக்கும் இந்த கோலம் போன்றது என்பதைத்தான் சொல்லியிருப்பாரோ?

    கனத்த மனத்துடன்,
    பிரபாகர்.

    ReplyDelete
  4. //எப்படி அந்த துர்நாற்றத்தின் அருகே, புழுதியில் அந்த மனிதன் உட்கார முடிகிறது. துர்நாற்றம் சிரமமாக இருக்காதா என மனம் நினைத்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனிதனை மறந்தும் போனேன்.//

    Ithai pondra tharunangalai naanum santhithu irukkiren.

    Naanum muyalkiren mudinthathai seiya.

    Nalla pagirvu.

    ReplyDelete
  5. உருக்கமான ஒரு பதிவிது.
    உணர்வு மனதை பிசைகிறது.
    உம்மிடம் ஏதொ இருக்கிறது - நீர்
    உயர்ந்திட நெஞ்சம் விழைகிறது.

    ReplyDelete
  6. சிறப்பான பதிவு கதிர்!! கண்டிப்பாக முடிந்த வரை உதவுவோம்.

    ReplyDelete
  7. மனம் நெகிழ வைத்த பதிவு கதிர்.

    கண்டிப்பாக இயன்ற உதவிகளை

    செய்வோம்

    ReplyDelete
  8. மாப்புளை... கண் கலங்குது.... இங்க எங்க சங்கத்துல அவரோட தொலைபேசி எண் கேட்டாங்க... தர முடியுமா?

    ReplyDelete
  9. அந்த சுட்டியிலயே இருக்கு....நன்றி!

    ReplyDelete
  10. இப்படியான கட்டுரைகள்-சம்பவங்கள் மனதைச் சொல்லமுடியா வேதனையில் அழுத்திப் போகிறது.

    ReplyDelete
  11. Really makes me feel bad about the people 's life and we should always thank god for life Whatwe have.we all should difenetly help those people in anyother ways

    ReplyDelete
  12. படித்து முடித்ததும் மனம் கனத்தது. இவர்களை போன்றவர்களை பார்த்து பரிதாப படுவதை விடுத்து அவர்களை கிண்டல் செய்தும் துன்புறித்தியும் அலையும் கும்பல்களை கண்டால் அவர்களை நாயடி பேயடி அடித்து விரட்ட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்கு ஒன்று நாம் ரௌடி ஆக இருக்க வேண்டும் அல்லது போலீஸ் ஆக இருக்க வேண்டும். கனத்த மனதுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாலும் அந்த காட்சி மனதில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். மனதை பிழிய வைத்த பதிவு.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  13. தினமும் காணும் நிகழ்வு என்றாலும்.உள்ளத்தை தொடும் விதமாய் பதிந்து விடீர்கள்.மன நிலை ப்பிரழ்வுக்கு ஒரு காரணம் வாழ்கை படி நிலையில் ஏற்படும் உள்ளத்தின் அதிர்ச்சி ..உங்கள் சிந்தனை வாசகர் உள்ளத்தையும் தொட்டது, நன்றியும் பாராடுக்களும். ...

    ReplyDelete
  14. நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
    நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
    வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லும் மனிதர் வெகுகாலமாக ஈரோட்டில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன்!

    ஈரோட்டில் பல இடங்களில் அவர் ஓவியம் வரைவதை பார்த்திருக்கிறேன்!
    கரித்துண்டுகள், பச்சை இலைகள், செங்கல் வைத்தே ஓவியம் வரைவார் அவர்!

    ReplyDelete
  16. உருக்கமான இடுகை ஊர்க்காரரே..
    மனதை மிகவும் பாதித்தது..
    வாழ்க்கையே ஒரு புள்ளியில்லா மணல் கோலாந்தானுங்களே..

    ReplyDelete
  17. நன்றி.

    உங்களைப் போலவே நானும் நேற்று தனியாக சிரித்துக் கொண்டிருந்த ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனை பார்த்தேன்!

    கூட வந்த மனைவி கேட்டார். "ஏன் இப்படி இருக்கிறார்" என்று.

    நான் பதிலுக்கு கேட்டேன். நம் பார்வையில் அவர் பைத்தியம். ஆனால் அவர் பார்வையில் நாம்?"

    எனக்கு பல முறை இந்த கேள்வி தோன்றி இருக்கிறது. "பைத்தியம் போல் தெரிபவர்கள் உண்மையில் பைத்தியமா? அல்லது அவர்களுக்கு பைத்தியம் பட்டம் சூட்டும் மக்கள் பைத்தியங்களா?"

    கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

    ஒரு நல்ல பதிவுக்கு அழைப்பு விடுத்ததற்கு இன்னுமொரு நன்றி.

    ReplyDelete
  18. மனதை ஏதோ செய்கிறது...
    அழுத்தமான ஒரு பதிவு ...

    ReplyDelete
  19. Nalla pathivu nanba,plz visit my previous post Atchayaa trustum Ramaiyavum for your thought's continuation.

    ReplyDelete
  20. கதிர் நல்ல இடுகை...

    பாராட்டுகளும்...கைதட்டல்களும்....

    ReplyDelete
  21. //நாடோடி இலக்கியன் said...
    முடிந்ததை செய்வோம்.//

    நன்றி இலக்கியன்

    //டக்ளஸ்... said...
    அக்சயா ட்ரஸ்ட்டிற்கு முடிந்த்தைச் செய்கின்றேன் கதிர்.//

    நன்றி டக்ளஸ்

    //பிரபாகர் said...
    கடவுளை நான் திட்டுவதும் அந்த தருணத்தில் தான்.//

    கடவுளைத் திட்டுவதா? சக மனிதனைத் திட்டுவதா?

    //சூழலின் காரணமாக இயலாத போது//

    இயல்பு தானே

    //என்னால் இயன்றதை செய்கிறேன்.//

    நல்லது நண்பா

    //இந்த கோலம் போன்றது என்பதைத்தான் சொல்லியிருப்பாரோ?//
    ம்ம்ம்


    பிரபாகர், என் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் இடும் பின்னூட்டம் எனக்கு பெரிதும் ஊக்கம் கொடுக்கிறது

    //க. பாலாஜி said...
    Naanum muyalkiren mudinthathai seiya. //

    நல்லது பாலாசி


    //Sampathkumar said...
    உருக்கமான ஒரு பதிவிது.
    உணர்வு மனதை பிசைகிறது.//

    நன்றி சம்பத்குமார்

    //ச.செந்தில்வேலன் said...
    கண்டிப்பாக முடிந்த வரை உதவுவோம்.//

    செந்தில், தங்களின் தொலைபேசி அழைப்பும் பாராட்டும் நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

    தங்கள் நட்பிற்கு தலை வணங்குகிறேன்

    //சந்தனமுல்லை said...
    :( very touchy!//

    நன்றி சந்தனமுல்லை

    //sakthi said...
    கண்டிப்பாக இயன்ற உதவிகளை
    செய்வோம்//

    நன்றி சக்தி

    //பழமைபேசி said...
    மாப்புளை... கண் கலங்குது....//

    உணர்வு பகிர்விற்கு நன்றி மாப்ள

    //ஹேமா said...
    இப்படியான கட்டுரைகள்-சம்பவங்கள் மனதைச் சொல்லமுடியா வேதனையில் அழுத்திப் போகிறது.//

    உணர்வு பகிர்விற்கு நன்றி ஹேமா

    //AMITT.R.LULLA said...
    we all should difenetly help those people in anyother ways//

    நன்றி நண்பனே...

    //REKHA RAGHAVAN said...
    அவர்களை கிண்டல் செய்தும் துன்புறித்தியும் அலையும் கும்பல்களை கண்டால் அவர்களை நாயடி பேயடி அடித்து விரட்ட வேண்டும் என்று நினைப்பதுண்டு. //

    உணர்வு பகிர்விற்கு நன்றி ரேகா ராகவன்

    //நிலாமதி said...
    மன நிலை ப்பிரழ்வுக்கு ஒரு காரணம் வாழ்கை படி நிலையில் ஏற்படும் உள்ளத்தின் அதிர்ச்சி//

    வணக்கம் நிலாமதி


    //பிரபா said...
    நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....//

    என்ன இது பொறுந்தாத பின்னூட்டம்


    //August 18, 2009 5:55 PM
    வால்பையன் said...
    நீங்கள் சொல்லும் மனிதர் வெகுகாலமாக ஈரோட்டில் தான் இருக்கிறார் என நினைக்கிறேன்!//

    நான் அன்றுதான் கவனித்தேன், அதன்பின் தான் அவர்களை கவனித்து வருகிறேன்

    //சூர்யா said...
    உருக்கமான இடுகை ஊர்க்காரரே..//

    நன்றி மக்கா

    //Maximum India said...
    . "பைத்தியம் போல் தெரிபவர்கள் உண்மையில் பைத்தியமா? அல்லது அவர்களுக்கு பைத்தியம் பட்டம் சூட்டும் மக்கள் பைத்தியங்களா?"

    கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.//

    இரண்டு மாதிரியும் இருக்கலாம்

    //ஒரு நல்ல பதிவுக்கு அழைப்பு விடுத்ததற்கு இன்னுமொரு நன்றி.//

    தங்கள் மனப் பகிர்வுக்கு மிக்க நன்றி

    //seemangani said...
    மனதை ஏதோ செய்கிறது...
    அழுத்தமான ஒரு பதிவு ...//

    நன்றி சீமாங்கனி

    //Muniappan Pakkangal said...
    Nalla pathivu nanba,plz visit my previous post Atchayaa trustum Ramaiyavum for your thought's continuation.//

    உங்கள் இடுகையை படித்தேன். அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்

    //பிரியமுடன்...வசந்த் said...
    பாராட்டுகளும்...கைதட்டல்களும்....//

    நன்றி வசந்த்

    ReplyDelete
  22. அழுத்தமான ஒரு இடுகை..அக்சயா ட்ரஸ்ட்டிற்கு முடிந்ததைச் செய்கின்றேன் கதிர்.

    ReplyDelete
  23. //கார்த்திகைப் பாண்டியன் said...
    //அக்சயா ட்ரஸ்ட்டிற்கு முடிந்ததைச் செய்கின்றேன்//

    நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    அக்சயா ட்ரஸ்ட் குறித்த மேலதிக தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா

    ReplyDelete
  24. சில அடிகள் தூரம் நடந்திருப்போம். மனம் பட படவன துடித்தது, திரும்ப ஓடிப்போய் அந்த மனிதனைப் பாராட்டலாமா என மனது தவித்தது. கொஞ்சம் செயற்கையாக இருக்குமோவென்று முட்டாள் தனமாக எண்ணம் தடைபோட்டது.

    Unga Nermai pitichu eruku

    Kathir Sir

    Mikaa mikaa aaluthamana aalamana 'pathivu' Sir

    ReplyDelete
  25. ரொம்ப ஒரு நல்ல இடுகைங்க கதிர். எல்லோர் மனத்திலும் உங்களை மாதிரி எண்ணம் ஏற்பட்டால் இவர்களின் வாழ்வில் ஒரு விடிவு பிறக்கும் என்பது திண்ணம்...

    ReplyDelete
  26. //Sathish radi said...
    Unga Nermai pitichu eruku
    Mikaa mikaa aaluthamana aalamana 'pathivu'//

    Thank u very much Sathish

    //ராசுக்குட்டி said...
    இவர்களின் வாழ்வில் ஒரு விடிவு பிறக்கும் என்பது திண்ணம்...//

    முயற்சிப்போம் ராசுக்குட்டி

    நன்றி ராசுக்குட்டி

    ReplyDelete
  27. நாடோடி‍‍‍‍‍‍.....20 August 2009 at 23:55

    கதிர்
    இவ்வாறு எழுத ஆரம்பித்த பிறகு அனறாடம் கடந்து போகின்ற விஷயங்களில் நீங்கள் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  28. //நாடோடி‍‍‍‍‍‍..... said...
    அனறாடம் கடந்து போகின்ற விஷயங்களில் நீங்கள் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.//

    எப்போதும் இருக்கும் ஆர்வம்தான், எழுதத்துவங்கிய பின் கவனித்தல் அதிகமாகிறது

    நன்றி நண்பா

    ReplyDelete
  29. IT IS OK TO HELP THRU Akshaya or any similar trust (my son does to AKSHAYA from the time we saw his story in the HINDU)but i think they need to be helped for treatments and get a permanant solution 4 may be some of them may be treated and get well?
    u r right that at any cost our attitudes shd change..

    ReplyDelete
  30. //sulochana said...
    at any cost our attitudes shd change..//

    இதுதான் உடனடித் தேவை

    தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  31. இந்த மாத்ரி மனிதர்களைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போகிறது,என் கணவர் எங்கள் ஊரில் ஒரு பெண்ணுக்கு என்னிடம் பாகெட் செய்து தரச்சொல்லி கொண்டுபோய்க் கொடுப்பார். வீதியோரம் வாழ்ந்த அந்தபெண் மீது இரவில் ஏதோ வாகனம் மோதி இறந்த்துவிட்டார்.முடிந்த உதவியைச் செய்கிறோம் கதிர்.

    ReplyDelete
  32. Sorry if I hurt anybody by this post. This is not intend to hurt. Take this as just my thoughts.

    I am just a reader of blogs and I dont want to leave my marks there. But today I thought of saying something after reading this.

    I feel now a days it is becoming a symbol of fashion to talk about the disabled people and write about them.. Are we seeking a positive publicity about us by doing this.

    You have some home's details and you saw a disabled person in the roadside. If you contacted that center and informed about him and put him there, I should appreciate you.

    But you behaved like a trespasser and left the guy as it is in the same state. Sorry I am not able to appreciate this..

    ReplyDelete
  33. வாங்க அனானி...

    பெங்களூரிலிந்து எழுதினாலும் கூட எப்படி உங்கள் அடையாளம் சொல்ல ஏதோ ஒன்று தடுப்பதுபோல்...

    நினைத்த நேரத்தில் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் திடம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    அதே சமயம் அந்த விளிம்பு நிலை மனிதனை வைத்து, எழுத்தை நான் வியாபாரம் செய்யவோ அல்லது விளம்பரத்தின் அடையாளமாகவோ எதுவும் அடையும் எண்ணமும் என்னிடம் இல்லை.

    அந்த மனிதனைப் பார்த்து எழுதிய பின் கீழ் குறிப்பிட்டுள்ள அறக்கட்டளைக்கு உதவி செய்திருக்கிறேன், இன்னும் சிலரை உதவிசெய்யத் தூண்டியிருக்கிறேன்.. அதே சமயம், அது மட்டுமே போதாமல் கூட இருக்கலாம்

    முடிந்தால் நீங்களும் உதவுங்கள்...

    தயவுசெய்து இனி உங்கள் அடையாளத்தோடு வாருங்கள்.

    ஆரோக்கியாக பகிர்ந்துகொள்வோம்

    ReplyDelete
  34. Hi Kadir,
    Hot reply :-)
    I am sorry if i made you feel bad by my comment.

    As I told you in the begining, my previous comment is not intended to criticize you or your thoughts. I just told how we are now a days. I can call this as our middle class mentality.

    We want to do something, but not doing that because of something. To overcome the guiltiness, later we do some pariharam.

    I really appreciate your thinking and the impact that you have created in your circle. Sending money to the home is really a gr8 thing. It will helpful to many. But will it help to the person whom you saw in the road side.

    Generally I feel you guys have a good circle. You can do a lot by that.

    Instead of leaving that place, if you have did something to put the person in that home, that may create some other impact. Just my thought.

    Here I want to refer one more blog
    http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/10/blog-post.html

    It is just a call to that home and informing them about this person. We can wait till they come or we leave the place. Even there is no need of going near to that person incase we are scared by him or some other thing.

    Kadir,

    Now I came out and welcome your thoughts on this.

    Selvi.

    P.S.: Yet to create a google account.. :-)

    ReplyDelete
  35. Dear Selvi.

    Just i read
    http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/10/blog-post.html

    It is very useful one.

    Thank u very much for ur kind response.

    ReplyDelete
  36. Kadir,

    Thanks for Accepting my thoughts :-)

    Selvi.

    ReplyDelete
  37. மிக நெகிழ்வான,ஈரமான பதிவு கதிர்.பலகீன படுத்துகிறது புரட்டியடிக்கிற இவ்வாழ்வு...தொடருங்கள் மக்கா.

    ReplyDelete
  38. தங்களின் வீச்சரிவாள் வினாக்களுக்கு விடை கூறுபவர் யார்?எல்லோரும் பார்க்கிறோம் நமக்கென்ன?என்று போவதாலே இந்த நிலை தொடர்கின்றன,மாற வேண்டும்,மனித மனங்கள் மாற வேண்டும்.அற்புதமான பதிவு.

    ReplyDelete

இது படிச்சீங்களா?