Tuesday, 25 August 2009

சரி... யார் நிறுத்துவது...



ஒருமுறை ஊழல் தடுப்பு உயர் அதிகாரியிடம் பேசும் போது அவர் சொன்ன செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. 18 மாதங்களில் வெறும் 3 புகார்கள் மட்டுமே வந்ததாகவும், அதற்காக ஊழலோ, கையூட்டோ இல்லாமல் இல்லை, யாரும் புகார் கொடுக்க முன் வருவதில்லை என்று வருத்தப்பட்டார்.
மேல் மட்டத்தில் கொடுப்பவனும், பெறுபவனும் அந்த வியாபாரத்தின் அடிப்படையில் சதவிகிதம் பிரித்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். அது அவர்கள் ஏழைகளுக்கு வகுக்கும் திட்டத்தில் நஞ்சாக கலக்கிறது அல்லது கட்டும் பாலம், போடும் தார்சாலையின் ஆயுளை குறைக்கிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் மேற்கு மண்டல ஊழல் தடுப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசும் போது அவர் பகிர்ந்து கொண்ட சம்பவம், ஒரு கிராம நிர்வாக அதிகாரி ஒரு கூலித் தொழிலாளியிடம் சான்றிதழ் வழங்குவதற்கு 300 ரூபாய் கையூட்டு கேட்கிறார். தொழிலாளிடம் அந்த 300 ரூபாய் கொடுக்க முடியாத அளவு வறுமை. யார் மூலமோ புகார் வருகிறது. குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு ஊழல் தடுப்பு அணி அந்த தொழிலாளியிடம் பணம் கொடுத்து அந்த கிராம நிர்வாக அதிகாரியை பிடிக்க முயன்று முதல் நாள் முடியாமல் இரண்டாவது நாள் கைது செய்கின்றனர். ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு இரண்டு நாள் சென்று வந்த எரிபொருள் செலவு மட்டும் ரூ.1200 ஆகிறது.

300 ரூபாய் கையூட்டை பிடிக்க 1200 ரூபாய் செலவா என்று என்னிடம் ஒரு குறுநகை வந்தது. “புகார் கொடுக்கும் ஒரு குடிமகனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற பெரிய நம்பிக்கையை கொடுப்பதுதான் எங்கள் கடமை. கையூட்டு என்பது பணத்தின் அளவில் இல்லை, 300 ரூபாய் என்பது கையூட்டாக வாங்குபவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கான பணமாக இருக்கலாம், ஆனால் அந்த கூலித் தொழிலாளிக்கு பத்து நாள் சாப்பாடு, அதாவது அவனுடைய பத்து நாள் உணவையே இன்னொருவன் திருடுகிறான்” என்று அவர் சொன்னது தான் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.

இதை பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய காரணம்...
சமீப காலமாக தமிழக காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடியாக செயல்பட்டு, தினமும் குறைந்தது முக்கியப் பொறுப்பில் இருக்கும் இரண்டு மூன்று அதிகாரிகளை கைது செய்வது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

இந்த கைதுகள் பற்றிய நிறைய இடுகைகள் வச்சுட்டான்யா ஆப்பு என்ற வலைப்பூவில் இருக்கிறது. ஊழல் தடுப்பு காவல்துறை அலுவலகங்கள் பற்றிய விபரமும் இதில் இருக்கிறது. ஒருமுறை வாசித்துப் பாருங்கள். யாருக்காவது கையூட்டு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் வச்சுட்டான்யா ஆப்பு வலைப்பூவில் உள்ள தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி கையூட்டை யார் நிறுத்துவது?
கொடுப்பவனா? வாங்குபவனா?

கொடுப்பவன் குறுக்க ஆரம்பித்தால்,
வாங்குபவன் கைகள் சுருங்கிப்போகும்.
முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

26 comments:

  1. //கொடுப்பவன் குறுக்க ஆரம்பித்தால்,
    வாங்குபவன் கைகள் சுருங்கிப்போகும்//

    இது சாத்தியமா ஐயா?
    ஒரு சர்டிபிகேட் கேட்டு போறப்ப லஞ்சம் கொடுக்கலன்னா, அவன் தரமாட்டேன்னு இழுத்தடிப்பான். அப்ப பாதிக்கப்படுறவன் எப்டியோ வேலை முடிஞ்சா சரின்னு காசு குடுக்கத்தானே பார்ப்பான்? காசுகுடுக்கலன்னா இழுத்தடிச்சு வேலை நடக்காம போனா நஷ்டம் வாங்குறவனுக்கு இல்ல. எப்டியோ அவனுக்கு மாச சம்பளம் வந்துரும், அந்த சர்டிபிகேட்ட வைச்சு கடன் வாங்குறவன், தொழில் செய்ய நினைக்கிறவனுக்கு???

    தண்டணை பத்தாது ஐயா. இப்பல்லாம் அடிக்கடி அரசு அலுவலகங்களில் ரெய்டு எல்லாம் நடக்குதுல்ல, அதுல கைதெல்லாம் நடக்குது, ஆனா அதுக்கு அப்பறம் என்ன நடவடிக்கை எடுக்குறாங்க? யாரும் கடுமையான தண்டணை வாங்குனமாதிரி தெரியலையே ?

    ReplyDelete
  2. //நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது. //

    லஞ்சம் வாங்குபவர்களுக்கு அது லட்டு சாப்பிடுவது போல

    கொடுப்பவன் நிறுத்த வேண்டும்

    ReplyDelete
  3. நல்ல பதிவு கதிர். லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒவ்வொரு தனி மனிதனும் முடிவெடுத்தால் போதுமானது, ஒருமுறை குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்யவேண்டி அந்த அலுவலகத்துக்குச் சென்றேன்.லஞ்சம் கொடுக்காமல் அந்த வேலையைச் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு.சொன்னால் நம்புவதே கஷ்டம்,கிட்டத்தட்ட அறுபத்தியிரண்டு முறை (3 மாதம்) அந்த அலுவலக அதிகாரியிடம் சென்று வந்த பின் வேலை முடிந்தது. அவருக்கு வழக்கமாக எல்லோரும் இந்த வேலைக்குக் கொடுக்கும் தொகை 50 ரூபாய்.ஆனால் அத்தனை முறை அலைந்ததில் எனக்கு ஆன செலவு கண்டிப்பாக பல மடங்குதான் .லஞ்சம் கொடுத்தால் இரண்டு நாளில் முடிய வேண்டிய வேலை அது.ஆனால் நான் லஞ்சம் கொடுப்பதில்லை என்று முடிவுடன் இருந்தேன்.எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது இங்கே.

    ReplyDelete
  4. கொடி வாங்க சொல்லுவாங்களே? இஃகிஃகி....

    வாங்காட்டி இழுத்து அடிப்பாங்க மாப்பிள்ளை.... அதுக்கு ஆட்பட வேண்டாமுன்னு சாமனியருங்க அஞ்சு பத்துன்னு கொடுக்கப் போயி அது ஆலமரமாயிடுச்சி....

    அடுத்தவன் உரிமையை தட்டிப் பறிக்க லஞ்சம் கொடுத்திருந்தா, கொடுத்தவனையும் உள்ள போடணும். அப்பதான் இது சரி வரும்.

    ReplyDelete
  5. ஸ்ரீமதி சொல்வதுபோல் மக்களுக்கு பொறுமை இல்லை. வேலை முடிந்தால் போதும் என்று நீட்டிவிடுகிறார்கள். ஆக, பொறுமைசாலிகளால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். எத்தனை பேர் இதுக்கு தயார் என்பதுதான் கேள்வி. உங்கள் பாணியில் சொல்லப் போனால் நான் தயார் என்று முதலில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  6. கதிர். நல்ல பதிவு. என்ன செய்ய? கனுக்கால் அளவு மலத்திற்கு முழங்கால் அளவு சக்கரை போட்டு சாப்பிடுவார்கள் போல..

    ReplyDelete
  7. சொல்ல வருத்தமாக இருக்கிறது கதிர். இவர்கள் பிடிப்பதும் தண்டனை அடைவதும் எலிகள். போட்டியில் போட்டுக் கொடுத்து புலிகளை எலியாக்குவதோடு நின்றுவிடும். ஒரு அரசு ஊழியனாக என் கருத்து லஞ்சம் வாங்குவதை ஒழிக்க வழி, வாங்குகிறான இல்லையா என்பதல்ல. அதிரடி சோதனையில் தகுந்த காரணமின்றி கிடப்பில் போடும் கேஸ்களைத் தூக்கி கொண்டு வந்து தாமதத்துக்கு தண்டனை என்று வந்து விட்டாலே போதும். மக்களுக்கும் நம்பிக்கை வரும். இவர்களும் தாமதிக்க மாட்டார்கள். சந்திரபாபு நாயுடு ஆந்திரத்தில் நிலப்பதிவு அலுவலகம், பிறப்பு இறப்பு அலுவலகம், திருமணப் பதிவு அலுவலகங்களில் நாட்கள் குறிப்பிட்டு கணினி மயமாக்கி அந்த நாட்களுக்குள் ஆவணம் தரப்படாவிட்டால், ஊழியரின் சம்பளத்தில் நாளொன்றுக்கு இவ்வளவு தண்டனை எனப் பிடித்தம் செய்ய ஆணை பிறப்பித்த போது லஞ்சத்தோடு அவர் பதவியும் காணாமல் போனது.

    ReplyDelete
  8. கதிர் அவர்களே!!!

    லஞ்சம் என்பது இந்தியாவில் மிகவும் ஆழமாக வேரூன்றி விட்ட ஒன்று.சில அதிகாரிகள் இவ்வளவு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று மிரட்டுவதும், அதிகாரிகள் சரியாக இருக்கும் போது மக்கள் பணத்தை நீட்டுவதும் சகஜமாகி விட்டது. லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவனும் சொல்லும் காரணம் - "எனக்கு மேல இருக்குற ஆபீசர் கேப்பான்"

    எனவே, அடிமட்டத்தில் லஞ்சம் என்பது நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் இது சாத்தியமா என்றால், சந்தேகமே...

    ReplyDelete
  9. //நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.//

    சரியான சாட்டையடி வரிகள்...

    //சரி கையூட்டை யார் நிறுத்துவது?கொடுப்பவனா? வாங்குபவனா?//

    இது ஒன்றுக்கொன்று முரணானது...முதலில் வாங்குவது நிறுத்தப்பட்டால், கொடுப்பவர்கள் தேடிச்சென்று கொடுப்பார்கள். கொடுப்பவர்கள் நிறுத்திக்கொண்டால் கேட்பவர்கள் வலிய வாங்குவார்கள்.

    இது ஒவ்வொரு மனிதனுடைய தேவையை சார்ந்தே அமைகிறது. இது அரசாங்கம் தனியார் என்றில்லை. எல்லா இடங்களிலும் கையூட்டு என்பது விபச்சாரத்திற்கு ஒப்பாக வளர்கிறது...

    இப்போது யாரைக் நிறுத்தச் சொல்வது விபசாரியையா? அல்லது அவளிடம் செல்பவனையா?

    //கொடுப்பவன் குறுக்க ஆரம்பித்தால்,
    வாங்குபவன் கைகள் சுருங்கிப்போகும்.//

    உண்மைதான். ஆனால் இருவரின் தேவைகளும் அதிகமாகுமே...

    ReplyDelete
  10. //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

    ReplyDelete
  11. நம் சோம்பேறித்தனமும் தைரியமில்லமையும் தான் இதன் அபரீத வளர்ச்சிக்கு முக்கிய காரணம்....பசி மாதிரி இதுவும் ஒரு அத்தியாவசியாகி போய்விட்டது...இதற்கு ஏழை பணக்காரன் இல்லை.. நல்ல பதிவு பயன் பெற்றால் சுகமே...

    ReplyDelete
  12. //நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.//

    நச்

    சரியான கவன ஈர்ப்பு பதிவு

    வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete
  13. நல்ல உபயோகமான பதிவு

    சவுக்கடியாய்

    ReplyDelete
  14. கொடுப்பவன் தான் நிறுத்த வேண்டும்

    நேர்மை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்

    சும்மா வாங்குபவனையே சொல்லிக்கிட்டு இருந்தா என்று தான் நிறுத்துறது ...

    ReplyDelete
  15. நம்ம நாடு நாசமா போறதுக்கே லஞ்சம் தான் காரணம்!
    இந்தியன் படத்துல சொல்ற மாதிரி மத்த நாட்டிலயும் லஞ்சம் இருக்கு! ஆனா அங்கெல்லாம் கடமையை மீறுறதுக்கு தான் லஞ்சம், ஆனா இங்க கடமைய செய்யுறதுக்கே லஞ்சம்!

    மாறணும், எல்லாம் மாறணும்

    ReplyDelete
  16. நன்றி கதிர்....

    ReplyDelete
  17. Hi,

    If some one needs to be punished for this, then our CM and his family need to be punished for life. Can any one show me an example other than him who made their family as one of the richest in asia?

    TSN, The Netherland

    ReplyDelete
  18. //நியாயமாக செய்ய வேண்டிய ஒரு அடிப்படை வேலைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், சின்ன விவசாயிடம், அனாதை ஊதியம் வாங்கும் வயசானவர்களிடம் அரித்து பிடுங்கும் பணம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.//

    சரியா சொன்னீங்க

    ReplyDelete
  19. //கொடுப்பவன் குறுக்க ஆரம்பித்தால்,
    வாங்குபவன் கைகள் சுருங்கிப்போகும்.//

    இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை... வாங்கிறவனுக்கு தண்டனை அதிக படுத்தினால் நல்லது என்று படுகின்றது. தன் கடமை செய்ய காசு வாங்குவது பெரும் குற்றம்,.. இதுதான் பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்றது.

    ReplyDelete
  20. good officers catch ok but who is taking against politicians. any robinhoot? i hope it will happen, then only they will change.

    ReplyDelete
  21. நம்ம மக்களின் மனநிலைலேயே லஞ்சம் கொடுப்பது வழக்கமான ஒன்று பதிந்துவிட்டது, தவறான தகவல்களை மெய்ப்பிக்கவோ...........முறைகேடான ஒன்றை முறைப்படுத்தவோ, குறுக்கு வழியில் தேவைகளை பூர்த்தி செய்யவோ லஞ்சம் கொடுத்தால் போதும் என்று நாமே மனதளவில் தயாராகிவிட்டோம்................இன்றைய கால ஓட்டத்திட்க்கு ஒவ்வாத சட்டங்களும், நுகர்வோரிடம் நிலவும் ஒற்றுமை இன்மையுமே லஞ்ச ஊழலுக்கு அடிப்படை காரணங்கள்..............

    ReplyDelete
  22. //ஜோசப் பால்ராஜ் said...
    இது சாத்தியமா ஐயா?
    ஒரு சர்டிபிகேட் கேட்டு போறப்ப லஞ்சம் கொடுக்கலன்னா, அவன் தரமாட்டேன்னு இழுத்தடிப்பான்.//

    சரிதான் ஜோசப், ஆனால் கொடுக்க முடியாதவன்

    கீழே ஸ்ரீ செய்திருப்பதை மதிக்கத்தானே வேண்டும்.

    நல்ல கருத்திற்கு நன்றி @@ ஜோசப்


    //இரும்புத்திரை அரவிந்த் said...
    லஞ்சம் வாங்குபவர்களுக்கு அது லட்டு சாப்பிடுவது போல
    கொடுப்பவன் நிறுத்த வேண்டும்//

    நன்றி @@ அரவிந்த்

    //ஸ்ரீ said...
    //லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒவ்வொரு தனி மனிதனும் முடிவெடுத்தால் போதுமானது//

    //கிட்டத்தட்ட அறுபத்தியிரண்டு முறை (3 மாதம்) அந்த அலுவலக அதிகாரியிடம் சென்று வந்த பின் வேலை முடிந்தது. அவருக்கு வழக்கமாக எல்லோரும் இந்த வேலைக்குக் கொடுக்கும் தொகை 50 ரூபாய்.//

    சொல்ல வார்த்தைகள் இல்லை... தலை வணங்குகிறேன்

    நன்றி @@ ஸ்ரீ

    //பழமைபேசி said...
    வாங்காட்டி இழுத்து அடிப்பாங்க மாப்பிள்ளை.... அதுக்கு ஆட்பட வேண்டாமுன்னு சாமனியருங்க அஞ்சு பத்துன்னு கொடுக்கப் போயி அது ஆலமரமாயிடுச்சி....//

    சிறுக சிறுக வெட்டினால் ஆலமரமும் ஒருநாள் வீழும்...

    இது ஒரு நம்பிக்கைக்கான சின்னஞ் சிறிய விதை

    நன்றி மாப்பு

    //குடந்தை அன்புமணி said...
    //ஸ்ரீமதி சொல்வதுபோல் மக்களுக்கு பொறுமை இல்லை.//

    அன்பு மணி அவர் ஸ்ரீ மதுரைப் பதிவர்

    //பொறுமைசாலிகளால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். //
    பொறுமைசாலி இனி புதிதாய் பிறக்க வேண்டியதில்லை

    நன்றி @@ அன்புமணி

    //ச.செந்தில்வேலன் said...
    கனுக்கால் அளவு மலத்திற்கு முழங்கால் அளவு சக்கரை போட்டு சாப்பிடுவார்கள் போல..//

    மனதை சுடும் உதாரணம் செந்தில்

    நன்றி @@ செந்தில்

    //வானம்பாடிகள் said...

    //அரசு ஊழியனாக என் கருத்து லஞ்சம் வாங்குவதை ஒழிக்க வழி, வாங்குகிறான இல்லையா என்பதல்ல. அதிரடி சோதனையில் தகுந்த காரணமின்றி கிடப்பில் போடும் கேஸ்களைத் தூக்கி கொண்டு வந்து தாமதத்துக்கு தண்டனை என்று வந்து விட்டாலே போதும்.//

    சரிதான் அய்யா

    //ஆந்திரத்தில் நிலப்பதிவு அலுவலகம், பிறப்பு இறப்பு அலுவலகம், திருமணப் பதிவு அலுவலகங்களில் நாட்கள் குறிப்பிட்டு கணினி மயமாக்கி அந்த நாட்களுக்குள் ஆவணம் தரப்படாவிட்டால், ஊழியரின் சம்பளத்தில் நாளொன்றுக்கு இவ்வளவு தண்டனை எனப் பிடித்தம் செய்ய ஆணை பிறப்பித்த போது லஞ்சத்தோடு அவர் பதவியும் காணாமல் போனது.//

    கொடுமைதான்

    நன்றி @@ அய்யா

    //குரு said...
    எனவே, அடிமட்டத்தில் லஞ்சம் என்பது நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் இது சாத்தியமா என்றால், சந்தேகமே...//

    ஆனால் முடியாதது இல்லை

    நன்றி @@ குரு

    //க. பாலாஜி said...
    //இது ஒன்றுக்கொன்று முரணானது...//

    மிகச் சரியான அலசல்

    //கையூட்டு என்பது விபச்சாரத்திற்கு ஒப்பாக வளர்கிறது... //

    ம்ம்ம்ம்

    //இப்போது யாரைக் நிறுத்தச் சொல்வது விபசாரியையா? அல்லது அவளிடம் செல்பவனையா?//

    செல்பவன் கட்டுப்பாடோடு இருந்தால் அவள் எப்படி கடை விரிக்க முடியும்

    //ஆனால் இருவரின் தேவைகளும் அதிகமாகுமே...//

    எப்படி பாலாஜி

    நன்றி @@ பாலாஜி

    ReplyDelete
  23. //பிரபா said...
    //எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

    பார்த்து யாராவது திருடிட்டு போய்ட போறாங்க

    //தமிழரசி said...
    நம் சோம்பேறித்தனமும் தைரியமில்லமையும் தான் இதன் அபரீத வளர்ச்சிக்கு முக்கிய காரணம்//

    ஆமாம்

    நன்றி @@ தமிழ்

    //பிரியமுடன்...வசந்த் said...
    சரியான கவன ஈர்ப்பு பதிவு//

    நன்றி @@ வசந்த்

    //sakthi said...
    சவுக்கடியாய்//

    நன்றி @@ சக்தி

    //நட்புடன் ஜமால் said...
    கொடுப்பவன் தான் நிறுத்த வேண்டும்
    நேர்மை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்//

    நன்றி @@ ஜமால்

    //வால்பையன் said...
    //ஆனா இங்க கடமைய செய்யுறதுக்கே லஞ்சம்!
    மாறணும், எல்லாம் மாறணும்//

    ஆசையாத்தான் இருக்கு

    நன்றி @@ அருண்

    //மௌனி said...
    நன்றி கதிர்....//

    வணக்கம் உங்கள் பணிக்கு பாராட்டுகள்

    //tshankar89 said...
    If some one needs to be punished for this, then our CM and his family need to be punished for life. Can any one show me an example other than him who made their family as one of the richest in asia?//

    அது பற்றி விரிவாக ஒரு இடுகை எழுதுங்களேன் சங்கர்

    //ஆ.ஞானசேகரன் said...
    சரியா சொன்னீங்க
    இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை... வாங்கிறவனுக்கு தண்டனை அதிக படுத்தினால் நல்லது என்று படுகின்றது.//

    கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் தான் வாங்குபவன் குற்றவாளியென்ற எண்ணம் வரும்

    நன்றி @@ ஞான்சேகரன்

    //PITTHAN said...
    good officers catch ok but who is taking against politicians. any robinhoot? i hope it will happen, then only they will change//

    ராபின்ஹூட்டுக்கு எங்கே போவது

    நன்றி @@ பித்தன்

    ReplyDelete
  24. மிக நல்ல பதிவு. மக்கள் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கமாட்டோம் என்றும் அவரவர் குல தெய்வத்தின் முன்பு சத்தியம் செய்தால் (செய்வார்களா?) மட்டுமே இது சாத்தியம்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  25. //REKHA RAGHAVAN said...
    அவரவர் குல தெய்வத்தின் முன்பு சத்தியம் செய்தால் (செய்வார்களா?) மட்டுமே இது சாத்தியம்.//

    நல்ல யோசனைதான்

    நன்றி ரேகா ராகவன்

    ReplyDelete
  26. இதற்கு என்ன தான் தீர்வு.

    லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் அவசர தேவைகளுக்கு ஆப்பு வைத்து விடுகிறார்களே.

    ReplyDelete

இது படிச்சீங்களா?