Wednesday, 5 August 2009

நான் நிறுத்த வேண்டும்.

மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்வதை மூன்று வருடங்களாக தவிர்த்து வருகிறேன். கடந்த வாரம் நான் சார்ந்திருக்கும் சங்கத்தின் கூட்டம் ஒன்றினை சாக்காக வைத்து, நீண்ட யோசனைக்குப்பிறகு, நண்பர்களோடு தவிர்க்க முடியாமல் உதகைக்கு சென்றேன். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், உதகைக்கான சாலை மிக நன்றாக விரிவு படுத்தப்பட்டு சிறப்பான சாலையாக இருந்தது, ஆச்சரியமாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதிர்ச்சிக்கு வலுவான காரணம் இருக்கிறது.

பத்து வருடங்களில் அடிக்கடி சென்று வந்த உதகைதான் என்றாலும், இதுவரை பார்த்தது என்னவோ, ஏரி, பூங்கா, தொட்டபெட்டா, பைகாரா அணை, முதுமலை செல்லும் சாலை, கோத்தகிரி செல்லும் சாலை என பழக்கப்பட்ட இடங்களை மட்டுமே, இந்த முறை இரண்டு நாட்கள் தங்கவேண்டியிருந்தாலும் ஏற்கனவே பார்த்த அதே இடங்களை பார்க்க விருப்பமில்லாமலும், அறையிலே அடங்கி, ஓய்ந்து கிடக்கலாமென மனம் விரும்பியது. ஆனால் உடன் வந்த நண்பர்கள் “புது லொக்கேஷன் ஒன்னு சொல்றாங்க, போய் பார்க்கலாம்” என அழைக்க, அரை மனதோடு அவர்களோடு புறப்பட்டேன், அது குந்தா தாண்டியிருக்கும் ஒரு பவர் ஹவுஸின் தங்கும் விடுதி. அங்கு சென்று அங்கேயே சமைக்க ஏற்பாடு செய்து சாப்பிட்டுவிட்டு, திரும்பி வரும் போது குந்தாவிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலை வழியே, எமரால்டு நீர்த்தேக்கம் வழியாக உதகைக்கு திரும்பினோம்.

வரும் போது பார்த்த காட்சிகள் மனதை வலிக்கச் செய்தது. காடுகளும், வனங்களும் முற்று முழுதாக மொட்டையடிக்கப்பட்டு, சதுரமாக, செவ்வகமாக விவசாய பூமியாக முற்றிலும் மாறிவிட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரமும், காடுகளும் இல்லை. வெறும் சமவெளிப்பிரதேசமாக காட்சியளித்தது.

உதகை போன்ற மலைகளுக்கான பயணத்தை திட்டமிடாததிற்கு ஒரு வலுவான காரணம் மனதில் அலையாய் அடித்துக் கொண்டேயிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவையைச் சார்ந்த ‘ஓசை’ சுற்றுச்சூழல் காக்கும் அமைப்பின் நிர்வாகி திரு. காளிதாசன் அவர்களின் உரையைக்கேட்ட பிறகு காடுகளுக்கும், மலைகளுக்கும் சுற்றுலா என்ற பெயரில் செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முடிவு செய்தேன். திரு.காளிதாசன் அவர்கள் கேட்டது “மழை அதற்கான பருவங்களில் மட்டுமே பெய்கிறது, ஆனாலும் அருவிகளிலும், ஆறுகளிலும் மழை பெய்யாத காலங்களிலும் கூட தண்ணீர் வருவது எப்படி?” இதற்கான விடைதான் சோலைக்காடுகள். மிக அடர்த்தியாக பலநூறு வருடங்களாக காடுகளில் விழுந்த இலை, தழை, மரம், குச்சிகளின் பல அடுக்குகள் நிறைந்த வனமே சோலைக்காடுகள் என அழைக்கப்படுகிறது. காடுகளின் உண்மையான ஆத்மா இந்த சோலைக் காடுகள்.

சோலைக்காடுகள் தன்னுள் பெய்யும் மழையை எங்கும் ஓட விடாமல் தன்னுள்ளே முழுவதுமாக உள்வாங்கி தேக்கி வைத்துக்கொண்டு, மெதுவாக சிறிது, சிறிதாக மழை இல்லாத காலங்களில் தண்ணீரை கசிந்தொழுக விடும். சிறிது சிறிதாக கசியும் துளிகள்தான் சிறு சிறு நீர்க்கோடுகளாக கிளம்பி, ஓடையாக மாறி, அருவியாக கொட்டி, காட்டாறாக உருவெடுத்து ஒரு கட்டத்தில் அணையில் தேங்கி பின்னர் ஆறுகளில் பயணப் படுகிறது. சோலைக்காடுகள் என்று ஒன்றில்லாமலிருந்தால் பெய்யும் மழை நீரனைத்தும் உடனே மலைகளிலிருந்து வழிந்தோடிவிடும், அப்படி வழிந்தோடிவிட்டால் மழை பெய்யாத காலங்களில் வெறும் வறட்சி மட்டுமே எஞ்சியிருக்கும்.

இன்றைய மிகப்பெரிய வேதனை இந்த சோலைக்காடுகள் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டு வருவதுதான். பூமியின் உயிர் நாடியான சோலைக்காடுகள் பல காரணங்களை முன்னிறுத்தி பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. இது சிதையும் பின்னணி மிகவும் குரூரமானது, கூடவே அருவெருப்பானதும் கூட. மனிதன் தன்னுடைய தற்காலிக சுகத்திற்காக குளிர்பிரதேசங்களை தேடிச்செல்ல ஆரம்பித்தான். சென்று வர சாலைகளை விரிவுபடுத்தினான், தங்குவதற்கு இருப்பிடங்களை உருவாக்கினான். இதற்காக பெருமளவில் மரங்களை வெட்டினான், அங்கு வாழ்ந்த விலங்குகள் துரத்தப்பட்டன. வீரமோ, வெங்காயமோ விலங்குகளை மறைந்திருந்து மனிதன் வேட்டையாடினான். அது மட்டுமில்லாமல் காட்டாறுகளை கட்டுப்படுத்தி அணைதேக்கி மின்சாரம் தயாரிக்கிறேன் என விஞ்ஞானமும் கூடவே கும்மியடித்தது. காடுகளைத் திருத்தி(!!!) காபியும், தேயிலையையும் நடவு செய்து அடிமையாகிப் போனான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் கட்டிய மர்மமான ஓய்வு மாளிகைகளும், பணத்தை அள்ளி வீசும் பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்விச்சாலைகளும் என எல்லாமே இயற்கையை மனசாட்சி இல்லாமல் சீரழித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதன் தன் சுயநலத்திற்காக எதைச் செய்தாலும் அது உடனடியாக காடுகளின் கர்ப்பப்பையை காயப்படுத்தியது, காலம் கடந்து மனித சமுதாயம் சந்திக்கப்போகும் அவலங்கள் எதுவும், புதுமை, சுகம் என்ற போதையிலிருந்த மனிதனின் மண்டையில் ஏறவேயில்லை.

நான் மேலே குறிப்பிட்ட இடங்கள் ஒரு காலத்தில் சோலைக்காடுகளாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் அவை சிறிது சிறிதாக சூரையாடப்பட்டு, மரங்கள் வெட்டி எறியப்பட்டு சரிவான விவசாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டன. கட்டாயமாக பால் மாற்றம் செய்வதைப்போல். விளைவு மழை பெய்யும் பொழுது ஒரு துளி நீர் கூட நிலத்தில் தங்காமல், பள்ளம் நோக்கி பாய்கிறது. மழை நீரின் வேகத்தை தடுத்தாட்கொள்ளும் மரங்கள் இன்றி மண்சரிவு சர்வசாதரணமாக நிகழ்கிறது.

இன்று மிக வேகமாக மலைகள் பணம் கொழிக்கும் பயிர்களை விளைவிக்கும் பூமியாக, சுற்றுலா பகுதியாக மாற்றம் அடைந்து வருகின்றன, எவர் ஒருவருக்கும் மலையை, அதில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணம் இல்லை, வெறும் விளம்பர யுக்தியாகவும் சில சமயம் மாறிவிடுகிறது, உதாரணத்திற்கு 5 வருடங்களுக்கு முன் உதகையில் கின்னஸ் சாதனைக்காக மரக்கன்றுகள் நடவு செய்தது எல்லோருக்கும் நினைவிருக்கும், அதில் எத்தனை கன்றுகள் இன்று மரங்களாக வளர்ந்திருக்கின்றது? மிக மிக சொற்பமே!

மனித சமுதாயம் இயற்கையோடு வன்மையாக மோதிக்கொண்டிருக்கிறது, இயற்கை வஞ்சிக்க ஆரம்பித்தால் என்ன செய்யமுடியும் மனித சமூகத்தால். ஏற்கனவே ஆங்காங்கே இயற்கை சின்ன சின்ன சீற்றங்களின் மூலம் எச்சரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறது “மனித சமூகமே நிறுத்து உன் அக்கிரமங்களை” என்று.


கொஞ்சம் குற்ற உணர்வு கொண்ட மனதோடு, உதகையிலிருந்து திரும்பும் போது கவனித்தேன். சாலையோரம் இருந்த பலகையில் நகராட்சியால் எழுதப்பட்டிருந்த “தங்கள் வருகைக்கு நன்றி, மீண்டும் வருக” என்ற வாசகம் ஒரு கணம், என் மனதில் கற்பழிக்கப்பட்ட பெண், காமுகனைப் பார்த்துச் சொல்வது போன்று தெரிந்தது.

சரி... இதற்காக நாம் என்ன பெரிதாக செய்யமுடியும்?
நாம்... என்பதற்குமுன் நான் மிக எளிதாக நான் செய்ய வேண்டிய காரியம்

குறைந்த பட்சம் இனிமேல் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் சுயநலத்தை முதலில்
நான் நிறுத்த வேண்டும்.

நிறுத்துவேன்..


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

32 comments:

  1. Dear Kathir,
    Very nice article. What a greate surprise. now only in our family members discussed about the " eyarkkai siralivu" U also write article to that. My child asks "what way we serve our world" and We are ready to follow if any one give tips but our parents and grand parents are taking that instructions lightly.

    Please give suggestion to younger generation " how to save world"

    Yours
    ....

    ReplyDelete
  2. மாப்பு, நீங்க நீங்கதான்... தொடரவும்... வலைச்சரத்துல உங்களுக்கு அறிமுகம் கொடுத்து இருக்கேன்!

    ReplyDelete
  3. பூமியின் உயிர் நாடியான சோலைக்காடுகள் பல காரணங்களை முன்னிறுத்தி பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன.

    மிகவும் வேதனைக்குரிய விஷயம்

    ReplyDelete
  4. ஆம் எல்லாவற்றிலும் முதல்ல நாம் திருந்தனும்..முற்றிலும் யோசிக்க வைத்த பதிவு...மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்..அரசியல் வாதிகளே பணமுதலைகளே கொஞ்சம் திருந்துங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  5. கதிர்,

    மனசுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது உங்களின் பதிவினை படித்து. சுய லாபத்துக்காக காட்டினை அழிக்கும் மனிதன் எதிர்கால சந்ததியினரின் வாழ்வையே கேள்விக்குறியாக்குகிறான்.

    இதை தடுக்கும் நிலையில் இருப்போர்தான் இது போன்ற மாபாதகத்தை செய்கிறார்கள் அல்லது உடந்தை என்பதுதான் வேதனையான உண்மை.

    என்று நாம் இயற்கையினின்று தனித்து வாழ ஆரம்பித்தோமோ அப்போதே நம்மை சுற்றி அழிவு எனும் மாய வலை பின்னப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    நானும் உங்களின் கருத்தான
    "குறைந்த பட்சம் இனிமேல் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் சுயநலத்தை முதலில் நான் நிறுத்த வேண்டும்.

    நிறுத்துவேன்.." என்பதை ஏற்று முடிவெடுத்து உங்களை பின்பற்றுகிறேன்.

    சமூக சிந்தனையுடன் அசத்தலான பதிவு.

    நன்றி கதிர்.

    பிரபாகர்.

    ReplyDelete
  6. கதிர் சபாஷ்

    கைய குடுங்க

    அவசியம் எல்லா `நல்ல` மனசுக்காரர்களும் வாசிச்சு உணரனும்

    ReplyDelete
  7. நாம ஓட்ட போட்டு
    பொலம்பவெந்டியதுதா.
    டூர் போக மாட்டேன்னு
    அவங்க அங்க எஸ்டேட்
    வாங்கி போட்டுட்டே
    இருப்பாங்க. கருத்து அருமை
    அனால் முடிவு சரியில்லை

    ReplyDelete
  8. கதிர், அருமையான பதிவு!

    நானும் பல முறை சென்றிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறைசெல்லும் போதும் உதகையின் அழகு குறைந்து கொண்டே வருவது வருத்தத்திற்குரியது. இது உதகைக்கு மட்டுமல்ல, வால்பாறை, கோடை, டாப் ஸ்லிப், மூணாறு என எல்லா ஊர்களுக்கும் பொருந்தும்.

    சில சமயம், எதற்கு வெளியூர்ல இருந்து இத்தன பேர் நம்ம ஊருக்கு வர்றாங்கனு ஒரு சுயநலமான எண்ணமும் வரத்தான் செய்கிறது :(

    ReplyDelete
  9. Anonymous said...
    Dear Kathir,
    Very nice article.
    Please give suggestion to younger generation " how to save world"
    //
    Thank u anony.
    Send me a mail or contact my mobil number, i will give the details about "Oosai", u can get enough to save nature

    //பழமைபேசி said...
    மாப்பு, நீங்க நீங்கதான்... தொடரவும்... வலைச்சரத்துல உங்களுக்கு அறிமுகம் கொடுத்து இருக்கேன்!//

    என்னை மிக அழுத்தமாக அடையாளப் படுத்தியிருக்கிறீர்கள்...

    உங்கள் பாராட்டும் மனதும், வளர்த்து விடும் உள்ளமும், வளரும் வலைப்பதிவர்களுக்கு மிகப்பெரிய கொடை

    நன்றி பழமை


    //sakthi said...
    மிகவும் வேதனைக்குரிய விஷயம்//

    ஆமாம் சக்தி

    //தமிழரசி said...
    ஆம் எல்லாவற்றிலும் முதல்ல நாம் திருந்தனும்..//

    இதுதான் முக்கியம்

    //Prabhagar said...
    மனசுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது உங்களின் பதிவினை படித்து.
    சமூக சிந்தனையுடன் அசத்தலான பதிவு.//

    நன்றி பிரபாகர், நம்மால் முடிந்ததை செய்வோம்

    //பிரியமுடன்.........வசந்த் said...
    அவசியம் எல்லா `நல்ல` மனசுக்காரர்களும் வாசிச்சு உணரனும்//

    ஆமாம் வசந்த்

    //krishna said...
    கருத்து அருமை
    அனால் முடிவு சரியில்லை//

    நன்றி கிருஷ்ணா

    //ச.செந்தில்வேலன் said...
    சில சமயம், எதற்கு வெளியூர்ல இருந்து இத்தன பேர் நம்ம ஊருக்கு வர்றாங்கனு ஒரு சுயநலமான எண்ணமும் வரத்தான் செய்கிறது//

    ஆமாம் செந்தில்

    ReplyDelete
  10. அறிவியலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால், மனசாட்சி இருக்ககூடாது.

    அப்படி மனசாட்சி உள்ளவன்...

    ReplyDelete
  11. Very nice and useful article. Thanks a lot .

    Please write more on this topic.

    ReplyDelete
  12. உண்மை. வியாபாரமயமாக்குதலின் விஷவாயுவிலிருந்து நமது இயற்கைச்சூழைலைப் பாதுகாக்க இதுவே நம்மால் ஆகக்கூடியது என்று நானும் நம்புகிறேன். நல்ல பதிவு!

    ReplyDelete
  13. //அப்பாவி முரு said...
    அப்படி மனசாட்சி உள்ளவன்...//

    மகிழ்ச்சி அப்பாவி முரு

    /குப்பன்_யாஹூ said...
    Please write more on this topic.//

    Thank u for the same குப்பன்_யாஹூ

    Also u can read
    மூன்றாம் உலகப் போர்-1
    http://maaruthal.blogspot.com/2009/07/1.html

    ReplyDelete
  14. why we cannot achive eco friendly tourism?

    Try this all over world now people try eco friendly tourism

    ReplyDelete
  15. நல்ல இடுகை! வாசித்ததும் வேதனையோடு நீண்டதொரு பெருமூச்சு..ஹ்ம்ம்ம்!

    ReplyDelete
  16. சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள், சதுப்பு நில காடுகள், இதெல்லாம் படித்த ஞாபகங்கள். சோலைக்காடுகள் பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க

    மிகவும் வேதனைக்குரிய விஷயம்

    ஆம் எல்லாவற்றிலும் முதல்ல நாம் திருந்தனும்..முற்றிலும் யோசிக்க வைத்த பதிவு.

    ReplyDelete
  17. // சோலைக்காடுகள். //

    புதிதாக இந்த வார்த்தையை கேள்விப்படுகிறேன். இதற்கான தங்களின் விளக்கம் மிகவும் அருமை. புதுமுறையில் சிந்திக்கதக்க தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    அடிபடுகிற வரையில் வலிதெரியாது. ஆனால் அடிபடாமல் இருக்க வழிதெரியும். முயற்சிப்போம் முடிந்தவரையில்.

    ReplyDelete
  18. Romba arumaiyaana pathivu.
    Nichhayam Kadaipidikka vaendiya ondru.
    -Hidha

    ReplyDelete
  19. //யாசவி said...
    why we cannot achive eco friendly tourism?
    Try this all over world now people try eco friendly tourism//

    can u tell me abt eco friendly tourism.... i don't have any idea about this

    //சந்தனமுல்லை said...
    நல்ல இடுகை! வாசித்ததும் வேதனையோடு நீண்டதொரு பெருமூச்சு..ஹ்ம்ம்ம்!//

    நன்றி சந்தனமுல்லை

    //நாஞ்சில் நாதம் said...
    மிகவும் வேதனைக்குரிய விஷயம்
    ஆம் எல்லாவற்றிலும் முதல்ல நாம் திருந்தனும்..//

    திரும்ப திரும்ப சொல்வோம், ஒருநாள் மாறும்

    //பாலாஜி said...
    அடிபடுகிற வரையில் வலிதெரியாது. ஆனால் அடிபடாமல் இருக்க வழிதெரியும். முயற்சிப்போம் முடிந்தவரையில்.//

    கண்டிப்பாக முயற்சித்தே ஆக வேண்டும்.
    நன்றி பாலாஜி

    //Anonymous said...
    Romba arumaiyaana pathivu.
    Nichhayam Kadaipidikka vaendiya ondru.
    -Hidha
    //
    நன்றி ஹிதா

    ReplyDelete
  20. நானும் உங்களின் கருத்தான
    "குறைந்த பட்சம் இனிமேல் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் சுயநலத்தை முதலில் நான் நிறுத்த வேண்டும்.

    நிறுத்துவேன்.." என்பதை ஏற்று முடிவெடுத்து உங்களை பின்பற்றுகிறேன்.

    சமூக சிந்தனையுடன் அசத்தலான பதிவு

    (thanks to prabakar)

    ReplyDelete
  21. அருமையான பதிவு கதிர்.
    இயற்கையை ரசிப்பதும் இயற்கையான விஷயம்தானே.
    ஆனாலும் சுற்றுலா செல்வதனால் அம்மலைப் பிரதேசங்கள் வணிகமயமாகி இயல்பை தொலைத்து வருவதற்கு நாம் தான் பொறுப்பு.

    ReplyDelete
  22. //jaffer-erode said...
    (thanks to prabakar)//

    Thanks Jaffer

    //நாடோடி இலக்கியன் said...
    மலைப் பிரதேசங்கள் வணிகமயமாகி இயல்பை தொலைத்து வருவதற்கு நாம் தான் பொறுப்பு.//

    ஆமாம் இலக்கியன். ஆனால் நாம் அதை முழுமையாக உணரவில்லை
    கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  23. நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையை குறை சொல்வதாக நினைக்கக்கூடாது...

    தங்கள் எண்ணம் சரிதான், நாம் திருந்த வேண்டும் என்று நினைப்பதைவிட நான் முதலில் திருந்துவேன் என்பது சரிதான்.

    இயற்னை படைத்த அழகை கண்டு மகிழ வேண்டாமா... வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாமா... ஒருமுறைக்கு மேல் செல்லமாட்டேன் என்று... ஏன்னா நான் இதுவரை ஊட்டிக்கு வந்ததில்லையே...

    ReplyDelete
  24. //குடந்தை அன்புமணி said...
    நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையை குறை சொல்வதாக நினைக்கக்கூடாது...//

    உங்கள் கருத்தை கண்டிப்பாக மதிப்பேன்

    //நான் முதலில் திருந்துவேன் என்பது சரிதான்.//

    நன்றி

    //இயற்னை படைத்த அழகை கண்டு மகிழ வேண்டாமா... வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாமா... ஒருமுறைக்கு மேல் செல்லமாட்டேன் என்று... ஏன்னா நான் இதுவரை ஊட்டிக்கு வந்ததில்லையே...//

    மேலோட்டமாக பார்த்தால் இது சரிதான். ஆழமாக பார்த்தால் காடு என்பது விலங்குகளுக்கும், பறவைகளுக்குமான வசிப்பிடம். ஒரு கற்பனை செய்து பாருங்கள். ஒரு புலி மனிதன் நகரத்தை எப்படி அதிசயமான ஒன்றாக நிர்மாணித்திருக்கிறான் என்று கூட்டமாக, நகரங்களுக்கு டூர் வந்து விட்டு வரும் வழியில் டிபனுக்கு 2 சிறுவர்கள், லன்ச்க்கு இரண்டு இளைஞர்கள் என சாப்பிட ஆரம்பித்தால் எப்படியிருக்கும் (இது அதீதமான கற்பனைதான்) அதுபோன்ற ஆசைதான் இயற்கை அழகை சுற்றிப்பார்க்க நினைப்பதுவும்.

    ReplyDelete
  25. இயற்கைமேல் அக்கறை மற்றும் அன்பு கொண்டு எழுதப்பட்ட நல்ல பதிவு!


    ///சரி... இதற்காக நாம் என்ன பெரிதாக செய்யமுடியும்?
    நாம்... என்பதற்குமுன் நான் மிக எளிதாக நான் செய்ய வேண்டிய காரியம்

    குறைந்த பட்சம் இனிமேல் சுற்றுலா என்ற பெயரில் மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் சுயநலத்தை முதலில் நான் நிறுத்த வேண்டும்.

    நிறுத்துவேன்..///

    இந்த கருத்தில் கொஞ்சம் மாறு பட வேண்டி இருக்கிறது!

    இயற்கை வளங்களின் மேல் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த அவலங்களை அம்பல படுத்த வேண்டும்! அதற்காகவே அடிக்கடி செல்ல வேண்டும்! இல்லாவிட்டால் இந்த வளங்களை முழுமையாக இழக்க நேரிடும்!!!

    ReplyDelete
  26. //ஜீவன் said...
    இயற்கைமேல் அக்கறை மற்றும் அன்பு கொண்டு எழுதப்பட்ட நல்ல பதிவு!//

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஜீவன்

    //இந்த கருத்தில் கொஞ்சம் மாறு பட வேண்டி இருக்கிறது!

    இயற்கை வளங்களின் மேல் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த அவலங்களை அம்பல படுத்த வேண்டும்! அதற்காகவே அடிக்கடி செல்ல வேண்டும்! இல்லாவிட்டால் இந்த வளங்களை முழுமையாக இழக்க நேரிடும்!!!//

    ஏற்றுக்கொள்கிறேன்... சுற்றுலா என்ற காரணத்திற்காகத்தான் செல்ல வேண்டாம் என நினைக்கிறேன்

    ReplyDelete
  27. தூங்கும் குழந்தையை,
    ஓடும் அருவியை,
    தலையாட்டும் இயற்கையை
    சலனப்படுத்தாத உள்ளம் மிக உயர்ந்தது.
    நல்ல பதிவு கதிர்.

    ஓசை களிதாசின் பேட்டி
    ஒன்று தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம்.
    சில குறிப்புகள் கூட எடுத்துவைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  28. //காமராஜ் said...
    தூங்கும் குழந்தையை,
    ஓடும் அருவியை,
    தலையாட்டும் இயற்கையை
    சலனப்படுத்தாத உள்ளம் மிக உயர்ந்தது.//

    ஆமாம் நண்பரே

    //ஓசை களிதாசின் பேட்டி
    ஒன்று தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். சில குறிப்புகள் கூட எடுத்துவைத்திருக்கிறேன்.//

    அது பற்றி எழுதுங்களேன்.

    கவிதையாக கருத்துரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  29. kathir, read the article it was a different thinking on the ordinary tour. stopping of going to ooty should not be the decision but starting to make an awareness to some more people might be a solution. keep writing such articles.

    ReplyDelete
  30. //prabhu bharathi said...
    keep writing such articles.//

    Thank u Prabhu

    ReplyDelete
  31. புதிய சிந்தனையாக இருக்கிறது. யோசிக்க வைக்கிறது.

    //கொஞ்சம் குற்ற உணர்வு கொண்ட மனதோடு, உதகையிலிருந்து திரும்பும் போது கவனித்தேன். சாலையோரம் இருந்த பலகையில் நகராட்சியால் எழுதப்பட்டிருந்த “தங்கள் வருகைக்கு நன்றி, மீண்டும் வருக” என்ற வாசகம் ஒரு கணம், என் மனதில் கற்பழிக்கப்பட்ட பெண், காமுகனைப் பார்த்துச் சொல்வது போன்று தெரிந்தது.//

    இந்த வரிகள் வெகுவாகத் தாக்கிவிட்டன. நானும் நிறுத்த முடிவெடுத்திருக்கிறேன்..

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  32. "The earth provides enough to satisfy every man's needs,but not every man's greed. "
    Mahatma Gandhi

    இந்த வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன
    உங்களின் இந்த articleயைப் படித்தபோது.

    ReplyDelete

இது படிச்சீங்களா?