Tuesday, 15 September 2009

கூடுகட்டாத பறவைகளுக்காக


-------------------------------------------------------------------------


இந்தத் தையோடு நாற்பது நிறைகிறது
இல்லத்தரசியாக யாருமில்லை
உடன் பிறந்தோர் ஒதுங்கிவிட
ஒத்தையாய் நிற்கிறான் முதிர்ந்தவன்

பின்னிரவில் வீசிவிடும் குளிரில்
உழைத்த களைப்போடு கடக்கும் வீதியில்
தார் சாலை வெதுவெதுப்பில் துயிலும் நாய்களில்
ஒன்று உற்று குலைக்கிறது அவன் போலவே

துணையில்லாத படுக்கையில்
உறக்கம் கலையும் மைய இரவில்
அண்டை வீட்டு கொலுசு சப்தத்தில்
அதிருகிறது மனது

புண்ணுக்குள் ஜனித்த புழுவாய்
நெளியும் காமம் இறுகிக் குழைந்து
எங்கோ ஒரு வலியை வைத்திருக்கிறது
கெட்டித்துப்போன வெற்று மௌனமாகவே

நரம்பை அறுக்கும் மதுவில்
பேசிச் சலிக்கும் நாவில்
பார்த்து ஓய்ந்த கண்ணில்
தீர்வதில்லை அந்த அடர் வெறுமை

தோப்புகளிலிருந்து தொலை தூரத்தில்
பொட்டலில் முளைத்த விதையாய்
தனியே வெயிலில் தவிக்கிறான்
தன்னில் கூடுகட்டாத பறவைகளுக்காக



-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

36 comments:

  1. அட, போட வைத்த அழகிய கவிதை. வார்த்தைகளும் சொல்லும் வேதனை. அருமை.

    ReplyDelete
  2. அருமை அருமை.

    //நரம்பை அறுக்கும் மதுவில்
    பேசிச் சளிக்கும் நாவில்
    பார்த்து ஓய்ந்த கண்ணில்
    தீர்வதில்லை அந்த அடர் வெறுமை//

    எக்ஸ்ஸலண்ட்.

    ReplyDelete
  3. //
    துணையில்லாத படுக்கையில்
    உறக்கம் கலையும் மைய இரவில்
    அண்டை வீட்டு கொலுசு சப்தத்தில்
    அதிருகிறது மனது
    //

    Very nice

    ReplyDelete
  4. வெறுமையும், தனிமையும் நிழலாடுகிறது வரிகளில்....

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு கதிர்

    ReplyDelete
  6. /பேசிச் சளிக்கும் நாவில்/

    சலிக்கும்.

    பேச்சற்று உணர்கிறேன் தனிமையின் வலிகள்.

    ReplyDelete
  7. //பேசிச் சளிக்கும் நாவில்//

    சளிக்கும் சரிதானா!?

    சலிப்பு என்று தானே பயன்படுத்துவோம்!

    சின்ன டவுட்டு அதான் கேட்டேன்!

    ReplyDelete
  8. அற்புதம் கதிர்.

    ஒவ்வொரு வரியையும் பாராட்டலாம் போலிருக்கிறது. அசத்துங்கள்...

    பிரபாகர்.

    ReplyDelete
  9. //நரம்பை அறுக்கும் மதுவில்
    பேசிச் சளிக்கும் நாவில்
    பார்த்து ஓய்ந்த கண்ணில்
    தீர்வதில்லை அந்த அடர் வெறுமை//

    அருமையான வார்த்தைக் கோர்வை...

    ReplyDelete
  10. //வெ.இராதாகிருஷ்ணன் said...
    அட, போட வைத்த அழகிய கவிதை. வார்த்தைகளும் சொல்லும் வேதனை. அருமை.//

    நன்றி @@ இராதாகிருஷ்ணன்

    //நாடோடி இலக்கியன் said...
    அருமை அருமை.

    //நரம்பை அறுக்கும் மதுவில்
    பேசிச் சளிக்கும் நாவில்
    பார்த்து ஓய்ந்த கண்ணில்
    தீர்வதில்லை அந்த அடர் வெறுமை//

    எக்ஸ்ஸலண்ட்.//

    நன்றி @@ பாரி...



    // குரு said...
    //
    துணையில்லாத படுக்கையில்
    உறக்கம் கலையும் மைய இரவில்
    அண்டை வீட்டு கொலுசு சப்தத்தில்
    அதிருகிறது மனது
    //

    Very nice//

    நன்றி @@ குரு

    // மாதவராஜ் said...
    வெறுமையும், தனிமையும் நிழலாடுகிறது வரிகளில்....//

    நன்றி @@ மாதவ்


    //தண்டோரா ...... said...
    நல்லாயிருக்கு கதிர்//

    நன்றி @@ தண்டோரா


    // வானம்பாடிகள் said...
    /பேசிச் சளிக்கும் நாவில்/
    சலிக்கும்.
    பேச்சற்று உணர்கிறேன் தனிமையின் வலிகள்.

    வால்பையன் said...
    //பேசிச் சளிக்கும் நாவில்//

    சளிக்கும் சரிதானா!?//

    மாற்றிவிட்டேன் நண்பர்களே

    நன்றி @@ பாலா
    நன்றி @@ அருண்


    // பிரபாகர் said...
    அற்புதம் கதிர்.
    ஒவ்வொரு வரியையும் பாராட்டலாம் போலிருக்கிறது. அசத்துங்கள்...//

    நன்றி @@ பிரபா

    //அகல் விளக்கு said...
    //நரம்பை அறுக்கும் மதுவில்
    பேசிச் சளிக்கும் நாவில்
    பார்த்து ஓய்ந்த கண்ணில்
    தீர்வதில்லை அந்த அடர் வெறுமை//

    அருமையான வார்த்தைக் கோர்வை...//

    நன்றி @@ அகல்

    ReplyDelete
  11. அழகிய கவிதை...தனிமைச் சுடும் கவிதை!

    ReplyDelete
  12. வாழ்வின் அனுபவம் சொல்லும் கவிதை தரமாக் உள்ளது

    ReplyDelete
  13. //புண்ணுக்குள் ஜனித்த புழுவாய்
    நெளியும் காமம் இறுகிக் குழைந்து
    எங்கோ ஒரு வலியை வைத்திருக்கிறது//

    ப்ச்....சூப்பர்...நாற்பது வயதை கடந்த பிரம்மசச்சாரியின் வலிகளை (காம) சொன்னவிதம் அருமை....

    //கெட்டித்துப்போன வெற்று மௌனமாகவே//

    பொருள் தருக...(மௌனமே வெற்று ஒலிதானே)

    //பொட்டலில் முளைத்த விதையாய்
    தனியே வெயிலில் தவிக்கிறான்
    தன்னில் கூடுகட்டாத பறவைகளுக்கா//

    வலிகளுடன் கூடிய உவமை அழகு....

    ReplyDelete
  14. ஒவ்வொரு வரியிலும் வலியின் அளவு கூடிக் கொண்டே போகிறது.

    மிக அழுத்தமான பதிவு

    இப்படி என்னுடைய நண்பர்களும் சிலர் இருக்கின்றனர். இதைப் படித்தவுடன் அவர்கள் நினைவு வருகிறது.

    அற்புதம்

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  15. //ஒத்தையாய் நிற்கிறான் முதிர்ந்தவன்//

    எத்தனை பேர் இப்படி!

    //தோப்புகளிலிருந்து தொலை தூரத்தில்
    பொட்டலில் முளைத்த விதையாய்
    தனியே வெயிலில் தவிக்கிறான்
    தன்னில் கூடுகட்டாத பறவைகளுக்காக//

    வலி.

    நல்ல கவிதை கதிர்.

    ReplyDelete
  16. கதிர். மனதைத் தொடுகிறது உங்கள் கவிதை. நீங்கள் கொண்டு வர நினைக்கும் உணர்வை (வலி) சிறப்பாகக் கொடுக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. //சந்தனமுல்லை said...
    அழகிய கவிதை...தனிமைச் சுடும் கவிதை!//

    நன்றி @@ சந்தன்முல்லை

    //தியாவின் பேனா said...
    வாழ்வின் அனுபவம் சொல்லும் கவிதை தரமாக் உள்ளது//

    நன்றி @@ தியா

    //க.பாலாஜி said...
    ப்ச்....சூப்பர்...நாற்பது வயதை கடந்த பிரம்மசச்சாரியின் வலிகளை காம) சொன்னவிதம் அருமை....//

    //பொருள் தருக...(மௌனமே வெற்று ஒலிதானே)//

    மௌனம் என்பதில் ஒலி இருக்காது, ஆனால் சிந்தனை ஓட்டம் இருக்கும்தானே, இங்கே அதுவும் அற்றுப்போய் இருப்பது

    //வலிகளுடன் கூடிய உவமை அழகு....//

    நன்றி @@ பாலாஜி

    ReplyDelete
  18. ஆழமான தனிமை வெறுமை .. உணர்வை உணர்த்தும் வரிகள். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி ...

    ReplyDelete
  19. //ஆரூரன் விசுவநாதன் said...
    ஒவ்வொரு வரியிலும் வலியின் அளவு கூடிக் கொண்டே போகிறது.

    மிக அழுத்தமான பதிவு

    இப்படி என்னுடைய நண்பர்களும் சிலர் இருக்கின்றனர். இதைப் படித்தவுடன் அவர்கள் நினைவு வருகிறது.//

    நிறைய நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள்...

    நன்றி @@ ஆரூரன்


    //குடந்தை அன்புமணி said...
    அருமையான கவிதைங்க...//

    நன்றி @@ அன்புமணி

    // ராமலக்ஷ்மி said...
    எத்தனை பேர் இப்படி!
    வலி.

    நல்ல கவிதை கதிர்.//

    ரொம்ப நாளாச்சு... நல்லா இருக்கீங்களா?

    நன்றி @@ ராமலக்ஷ்மி


    //ச.செந்தில்வேலன்said...
    கதிர். மனதைத் தொடுகிறது உங்கள் கவிதை. நீங்கள் கொண்டு வர நினைக்கும் உணர்வை (வலி) சிறப்பாகக் கொடுக்கிறீர்கள்.//

    தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஊக்கம் குறித்து மிக்க மகிழ்ச்சி.

    நன்றி @@ செந்தில்

    ReplyDelete
  20. //நிலாமதி said...
    ஆழமான தனிமை வெறுமை .. உணர்வை உணர்த்தும் வரிகள். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி ...//

    நன்றி @@ நிலா

    ReplyDelete
  21. வழக்கம் போல், வலிகளும் அருமையாய்..

    ReplyDelete
  22. //துணையில்லாத படுக்கையில்
    உறக்கம் கலையும் மைய இரவில்
    அண்டை வீட்டு கொலுசு சப்தத்தில்
    அதிருகிறது மனது//

    நெகிழ்ந்தேன்....

    ReplyDelete
  23. //நாகா said...
    வழக்கம் போல், வலிகளும் அருமையாய்..//

    வாங்க நாகா, நலமா?

    நன்றி @@ நாகா

    //கலகலப்ரியா said...
    v.good...!//

    நன்றி @@ பிரியா

    //பிரியமுடன்...வசந்த் said...
    நெகிழ்ந்தேன்....//

    நன்றி @@ வசந்த்

    ReplyDelete
  24. இது முழுவதும் எனக்காக எழுதப்பட்ட கவிதையா? அனால் ஒரு சின்ன திருத்தம்

    புன்னுக்குள் புகுந்த புழுவாய் வந்த காமம்
    வடிய வழி இல்லை என்பதால் வலிகொடுத்து
    மறைகின்றது,
    என்பது சரியாக இருக்கும். துனை இல்லாமல் இருப்பவர்கள் எல்லாம் காமம் கொட்டித்து அதில் இருப்பார்கள் என கூறமுடியாது, காமம் சலித்து போயும் இருக்காலாம்(சீ இந்த பழம் புளிக்கும்). மத்தபடி தனிமை கொடுமை என்பது அருமை.

    ReplyDelete
  25. //PITTHAN said...
    இது முழுவதும் எனக்காக எழுதப்பட்ட கவிதையா? அனால் ஒரு சின்ன திருத்தம் //

    அப்படியா

    //புன்னுக்குள் புகுந்த புழுவாய் வந்த காமம்
    வடிய வழி இல்லை என்பதால் வலிகொடுத்து
    மறைகின்றது, //

    புண்ணுக்குள் பிறக்கும் புழுதான் அது, உட்புகுவதில்லை

    //துனை இல்லாமல் இருப்பவர்கள் எல்லாம் காமம் கொட்டித்து அதில் இருப்பார்கள் என கூறமுடியாது, காமம் சலித்து போயும் இருக்காலாம்(சீ இந்த பழம் புளிக்கும்). மத்தபடி தனிமை கொடுமை என்பது அருமை.//

    எந்தப் படைப்பும் எல்லோருக்கும் பொருந்தாது

    அருமையான பகிர்விற்கு நன்றி @@ பித்தன்

    ReplyDelete
  26. //ஒத்தையாய் நிற்கிறான் முதிர்ந்தவன்//


    ஆமாம் கதிர்
    வாழ்க்கையை ஏதோ ஒரு காரணத்தினால் துலைத்தவன்
    நிறைய பேர் இருக்காங்க :((


    அழகிய செதுக்கிய கவிதை,

    தனிமை தரும் வேதனையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அருமையான வரிகள்.

    ReplyDelete
  27. // RAMYA said...
    ஆமாம் கதிர்
    வாழ்க்கையை ஏதோ ஒரு காரணத்தினால் துலைத்தவன்
    நிறைய பேர் இருக்காங்க :((


    அழகிய செதுக்கிய கவிதை,

    தனிமை தரும் வேதனையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அருமையான வரிகள்.//

    நன்றி @@ ரம்யா


    //பட்டிக்காட்டான்.. said...
    அருமை..//

    நன்றி @@ பட்டிக்காட்டான்

    ReplyDelete
  28. கதிர், உங்கள் அக்கரைப்பச்சை கதை அருமை. பொன வாரம் ஆனந்த விகடனில் ராமகிருச்ன்ன் பார்வை வெளீச்சம் படீத்தீர்களா? கன்னீயாகுமரி சென்று வந்த பெண் படித்திர்களா? ஆண்கள் இதற்கு என்ன சொல்கிறிர்கள்? என் கண்வரின் கேள்வி ??? அவன் எப்படி அவளை உள்ளே விட்டான்?

    ReplyDelete
  29. வார்த்தைகளின் வெம்மை மனதைச் சுடுகிறது. அருமையான கவிதை.

    ReplyDelete
  30. நன்றி @@ வாத்துகோழி

    //அவன் எப்படி அவளை உள்ளே விட்டான்?//

    எங்கே

    நன்றி @@ தீபா

    ReplyDelete
  31. அருமையான கவிதை. எதையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டா வண்ணம், எல்லாம் துள்ளுகிறது அருமையான கவிதையாய்.

    ReplyDelete
  32. அருமை அண்ணா !
    அனைத்து கவிதைகளும் ,
    பிடித்த வரிகள் அண்ணா ...............
    என்னை வலித்த வரிகள் !

    நரம்பை அறுக்கும் மதுவில்
    பேசிச் சலிக்கும் நாவில்
    பார்த்து ஓய்ந்த கண்ணில்
    தீர்வதில்லை அந்த அடர் வெறுமை.............

    தேடி வேர்பாய்ச்சி
    நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
    காற்று ஆடிய நடனத்திற்கு
    காதலோடு இசைந்தாடி........................

    வெற்றிடத்தைக் குடித்த குடுவை சிரிக்க
    போதையை ஊட்டிய திரவம் சிரிக்க
    போதை தளும்பும் அக்கம்பக்கமும் சிரிக்க
    ஓங்காரமாய் அவனும் சிரிக்கின்றான்
    உலகமும் அவனைப் பார்த்து சிரிக்கின்றது!

    தாத்தன் காலத்தில் கூடாரம்போட்டு
    அப்பன் காலத்தில் குடிசைகள்கட்டி
    கடைசியாய் காசு சேர்த்து கடனோடு
    கான்கிரீட்டில் வீடுகட்டி நிமிர்ந்தபோது
    ஏதோ தாது இருக்குன்னு
    இன்னொரு நாட்டு பல(ண)சாலிக்கு
    இளிச்சிக்கிட்டே கொடுத்துச்சு அரசாங்கம்

    ReplyDelete

இது படிச்சீங்களா?