Saturday, 12 December 2009

கண் தானம்

சமீபத்தில் நான் சந்திக்கும் அல்லது பேசும் நண்பர்களிடம் ஒரு சிறிய மாற்றத்தைக் கண்கூடாக அறியமுடிகிறது. கண் தானத்திற்காக நான் எங்கள் அரிமா சங்கம் மூலம் முயற்சிப்பதை அறிந்து பெரும்பாலான நண்பர்கள் தாங்கள் கண் தானம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மிக மகிழ்ச்சியாக இருந்தாலும் புன்னகையோடு சொல்வேன் “இப்போ ஒன்னும் உங்க கண்ணுக்கு அவசரமில்லை, ஒரு முப்பது நாற்பது வருசம் கழிச்சு எடுத்துக்கலாம், உங்களுக்கு தெரிஞ்சு யாராவது செத்துப்போனால் அவங்க கண்ணை தானமா வாங்கிக்கொடுங்க” என்பேன்.

அவர்களின் விருப்பம் நியாயமாக இருந்தபோதிலும் அதை விட சாத்தியமாக இருப்பது தினம் தினம் நம்மைச் சுற்றியும் நிகழும் மரணங்களில் இருந்து பெறும் கண் தானங்கள்தான்.

நாமாக முன்வந்து நமது கண்களைத் தானமாக கொடுக்க விரும்பினால், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்து, அந்த விபரத்தை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு, கண் வங்கி பற்றிய விபரங்களை நிரந்தரமாக வீட்டில் மற்றவர்கள் கண்ணில் படும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். சில தன்னார்வ அமைப்புகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கண் வங்கியுடன் இணைந்து, தானம் செய்ய விரும்புபவரிடம் கண் தான ஒப்புதல் சான்றிதழை சட்டமிட்டு கொடுக்கின்றனர். இதில் கண் தானத்திற்கான ஒப்புதலும், கண் வங்கியின் விபரங்களும் இருக்கும்

மிக முக்கியமான, சாத்தியமான மற்றொன்று, நமக்குத் தெரிந்து நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் மரணம் நிகழும் போது, இறந்தவர்களின் கண்களை தானமாக கொடுக்க ஊக்குவிப்பது....

மரணம் நிகழ்ந்த வீட்டில் முடிவெடுக்கும் நபரை அணுகி, கண் தானம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, எப்படியாவது அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். இதில் அவர்கள் என்ன சொல்வார்களோ என்று கூச்சப்பட ஒன்றுமேயில்லை. ஒன்று சரி அல்லது இல்லையென்று சொல்வார்கள் அவ்வளவே, வேறு எந்த நஷ்டமும் இல்லவே இல்லை. ஒரு வேளை நாம் கேட்காமல் போனால் நிச்சயம் கண்கள் தானம் செய்ய வாய்ப்பில்லாமல் சில மணி நேரங்களில் அந்த கண்கள் அழிந்து போகலாம், ஒருவேளை நாம் கேட்டதால் அவர்கள் ஒப்புக்கொண்டால் கண்கள் தானமாக பெற்று அதன் மூலம் இரண்டு நபர்களுக்கு பார்வையளிக்க முடியும்.

கண்களை தானம் அளிக்க அந்த குடும்பம் ஒப்புக்கொண்டால், உடனடியாக அருகில் உள்ள கண் வங்கி அல்லது அரிமா சங்க (லயன்ஸ் கிளப்) அல்லது ஏதாவது ஒரு சேவைச் சங்க உறுப்பினர்களை அணுகினால் அவர்கள் நிச்சயம் கண்களை தானமாக எடுத்துச் சென்று விடுவர்.

கண்களை எடுத்து இன்னொரு நபருக்கு பொருத்துவது என்பது முழுக்கண்களையும் பொருத்துவதில்லை. கண்ணில் இருக்கும் விழித்திரை (Cornea) மட்டுமே எடுத்துப் பொருத்தப் படுகிறது. இதுபோல் பார்வையில்லாமல் விழித்திரை வேண்டி காத்திருப்போர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 840000 பேர் இருக்கிறார்கள். ஆனால், கண் தானம் மூலம் அவர்கள் தேவையை வெறும் பத்து சதவிகிதமே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்சமயம் ஒருவரிடமிருந்து இருந்து எடுக்கப்படும் இரண்டு கண்கள், இரண்டு பார்வையற்ற நபர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

யார் யார் கண் தானம் செய்யலாம்?
கண் தானம் செய்ய வயது வரம்பு தடையில்லை. எந்த வயதானாலும் எடுக்கலாம்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆகியோரின் கண்களை தானமாக எடுக்கலாம்.

கண்களை இறந்த 6 மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும்.

இறந்த பின் கண்கள் மேல் ஈரமான பஞ்சு அல்லது துணியால் மூடி வைக்கவும், இறந்தவர் உடலுக்கு மேலாக காற்றாடி (ஃபேன்) ஓடாமல் பார்த்துக்கொள்ளவும்.

கண்களை எடுக்க பத்து நிமிடங்கள்தான் தேவைப்படும்.

கண்களை எடுத்த பின் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியாது.


யார் கண்களை எடுக்க முடியாது?
விஷக்கடி, விஷம், புற்றுநோய், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் நோயால் இறந்தவர்கள் கண்களை மட்டும் தானமாகப் பெறுவதில்லை.

யாரோ ஆங்காங்கே செய்யும் தியாகங்களில்தான் உலகம் வளம்பெறுகிறது...
மரணம் என்பது தவிர்க்க முடியாது, எனினும் ஒரு மரணம் இரண்டு பார்வையற்ற நபர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கிறது அந்த ஒளியேற்றும் புண்ணிய காரியம் நம் கைகளில் மட்டுமே உள்ளது.
இனியொரு மரணம் நிகழுமாயின், கண் தானம் நம் முன் பிரதானமாய் நிற்கட்டும்.
______________________________________________

40 comments:

  1. ஒரு வித மெய்சிலிர்ப்பு உணர்ந்தேன் படிக்கும் போதே,,,,இதை செய்ய நானும் நினைத்திருக்கிறேன் இப்போது மேலும் பல தகவல் விளக்கம் இதில் அறிந்துக் கொண்டேன் நல்ல பயனுள்ள பதிவு கதிர்...

    ReplyDelete
  2. //ஒருவேளை நாம் கேட்டதால் அவர்கள் ஒப்புக்கொண்டால் கண்கள் தானமாக பெற்று அதன் மூலம் இரண்டு நபர்களுக்கு பார்வையளிக்க முடியும்.//

    இதுவரை இப்படி யோசித்ததில்லை. யாருக்கோ என்னவோ ஆகிவிட்டுப்போகிறது என்ற எண்ணத்துடனே இருந்திருக்கிறேன். இனிமேலாவது இதுபோல் செய்யவேண்டும்...

    நல்ல பயன்தரும்வகையிலான இடுகை.

    ReplyDelete
  3. மிக உபயோகமான பதிவு கதிர். எனக்கு தெரிந்த relatives -மரணங்களில் கண் தானம் பற்றி பேசி பார்த்து தோற்றேன். எனினும் தொடர்வேன்

    ReplyDelete
  4. /இதில் அவர்கள் என்ன சொல்வார்களோ என்று கூச்சப்பட ஒன்றுமேயில்லை. ஒன்று சரி அல்லது இல்லையென்று சொல்வார்கள் அவ்வளவே, வேறு எந்த நஷ்டமும் இல்லவே இல்லை.//

    அட திட்டுனா திட்டீட்டு போகட்டுமே. இனி இதைக் கடைப்பிடிப்பேன்.

    மிகத் தெளிவான விளக்கம் கதிர்.

    ReplyDelete
  5. இதுக்கும் ஒரு மைனஸ் போட்டிருக்கு. இதுக்கு ஒரு கண்ணு ஒதுக்கி வைக்கலாமோ. கபோதிக்கு எந்த கட்டைவிரல் அமுக்கணும்னு தெரியல போல.

    ReplyDelete
  6. நல்ல விஷயம் சொன்னீர்கள் கதிர்.நானும் கடைபிடிக்கிறேன்.

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு அருமையான அவசியமான பதிவு. கண் தானம் பற்றிய நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அழகான விளக்கங்கள்....அருமையான பதிவு.......வாவ்....

    ReplyDelete
  9. படிப்பதோடில்லாமல் செயலிலும் செய்வோம் அண்ணா

    ReplyDelete
  10. மிகவும் சமூகப் பொறுப்புள்ள இடுகை கதிர். உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  11. தொடரட்டும் உங்கள் நற்சேவை.!

    ReplyDelete
  12. ஓட்டு போட்டாச்சு... வந்து படிச்சுக்கறேன்... (அப்டி பண்ணலைன்னா என்னிய திட்டோ திட்டுன்னு திட்டி ஒரு இடுகை போடலாம் நீங்க.. ஹிஹி.)

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு .வாசகர்களை விழி ப்படைய வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. நல்லெண்ண பதிவு..நிச்சயம் என்னால் முடிந்த முயற்சி செய்கிறேன்...நன்றி.

    ReplyDelete
  15. முதலில் ஓட்டு, அப்புறம்தான் ஓட்டு,

    இது பற்றி முன்னரே அறிந்திருந்தாலும்
    \\இறந்தவர் உடலுக்கு மேலாக காற்றாடி (ஃபேன்) ஓடாமல் பார்த்துக்கொள்ளவும்.\\ இந்த தகவல் என் மன அடுக்குகளில் இல்லாமல் போய்விட்டது.

    தெளிவான விளக்கங்களுடன், மனதிற்கு ஒரு உத்வேகத்தை தந்துவிட்டது தங்களின் இடுகை..

    வாழ்த்துகள் கதிர்..

    ReplyDelete
  16. இறந்தபின்னும் வாழ ஒரு வழி.

    ReplyDelete
  17. அருமையான இடுகை நண்பரே..

    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பதிவு அண்ணே...கண்தானம் பற்றி அழகாய் விளக்கிவிட்டிர்கள்...நிறைய அறியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன்...நன்றி...உங்கள் சேவைக்கு பாராட்டுகள்...வாழ்க வளமுடன்..வணக்கம்

    ReplyDelete
  19. நல்ல பதிவு, நன்றி நண்பரே

    ReplyDelete
  20. பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட இடுகை கதிர். நானும் என் கண்களை தானம் செய்திருக்கிறேன்.

    விவரம் அறியாதவர்களும் உங்கள் இடுகை படித்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.

    நன்றி நண்பா!!

    ReplyDelete
  21. கண்ணான பதிவு கதிர்... !

    ReplyDelete
  22. //இனியொரு மரணம் நிகழுமாயின், கண் தானம் நம் முன் பிரதானமாய் நிற்கட்டும்.//

    சரியான பகிர்வு நண்பா

    ReplyDelete
  23. கண்தானம் பற்றி நிறைய படித்திருக்கிறேன், ஆனால் யோசித்தது இல்லை
    உங்கள் பதிவை படித்தவுடன் ஏன் இதை நாமும் செய்தால் என்ன என என் மனது கேட்கிறது...

    நல்ல பயனுள்ள இடுக்கை, அழகான விளக்கம் நன்றி கதிர் சார்..............

    ReplyDelete
  24. சமூகத்துக்கு நல்ல பயனுள்ள இடுகை. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. Some Info on Eye Donation:
    http://rammohan1985.wordpress.com/2009/09/06/national-eye-donation-day/

    ReplyDelete
  26. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  27. அருமையான பகிர்வு! நானும் வாய்ப்பு கிடைத்தால் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  28. நல்ல பதிவு.

    நானும் பதிவு செய்து வைக்கனும்

    கண்களை கொடுக்கும் பாக்கியம் இந்த உடலுக்கும் கிட்ட வேண்டும்.

    ReplyDelete
  29. உபயோகமான ஒரு விஷயத்தைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  30. உலகம் ஒளி பெற ஓர் உன்னதப் பதிவு.
    வாழ்க ஒளிக் கதிர் வளமோடு .

    ReplyDelete
  31. பகிர்தலுக்கு நன்றி தல.

    ReplyDelete
  32. உங்களின் பகிர்வு எனக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்குங்க.... இனி என் முயற்சியும் இதை சார்ந்து இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  33. விழிப்புணர்ச்சிக்காகச் சொல்கிறேன் .என் கண்கள் எனக்குப் பின்னும் ,இவ்வுலகைப் பார்க்கும்

    ReplyDelete
  34. பயனுள்ள அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete
  35. கதிர் ஒரு நல்ல கண் தான விழிப்புணர்வு பிரச்சரம் மேற்கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. கதிர் ஒரு நல்ல கண் தான விழிப்புணர்வு பிரச்சரம் மேற்கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. nice explanation and doubts has been clarified..

    ReplyDelete

இது படிச்சீங்களா?