Monday, 3 May 2010

பகிர்தல் (03.05.2010)


விவசாயம்:
வெயில் வெளுத்துக் கொண்டிருந்தாலும் கிராமங்களும் அதைச் சார்ந்த விவசாய பூமிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. கிணறுகள் இல்லா விவசாய பூமிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், கிணறுகளைக் கொண்ட நிலங்கள் கொண்ட விவசாயிகள் கரும்பு, மஞ்சள் என மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். கரும்பு டன் ரூபாய் ஆயிரத்து எழுநூற்றம்பது, மஞ்சள் மூட்டை பதினான்காயிரம் என சற்றே நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சுவாரஸ்யமான தகவல் ஆங்காங்கே விவசாய பூமிகள் வீட்டு மனையாக்கப்பட்டு வரும் நிலையிலும், விவசாயம் சார்ந்த மக்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சொந்த நிலமில்லாதவர்கள் மற்றவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயம் செய்ய குத்தகைக்கு நிலம் கிடைக்கவில்லை என்பதுதான் எங்கள் ஊர் பகுதியில் பலருக்கு வருத்தம்

தலைக்கவசம்:
விபத்தில் அடிபட்ட நண்பனை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன். கல்லூரிகால நட்பு, இன்றும் நெருங்கிய நண்பன், சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்குள் விளையாட்டும் சண்டையுமாகவே இருக்கும், பார்ப்பவரெல்லாம் எங்களை கிண்டலடிப்பார்கள். இரவு பத்தரை மணிக்கு பெருந்துறை சாலையில் ஈஸ்வரமூர்த்தி மஹாலில் இருந்து கிளம்பி சாலையை கடந்திருக்கிறான், ஏதோ வாகனத்தின் வெளிச்சம் தன் மேல் அதிகம் படுவதாக உணர்ந்த விநாடி ஒரு பேருந்து அடித்து தூக்கியிருக்கிறது. இவன் தூக்கி எறியப்பட்டிருக்கிறான். சுமார் இருநூறு அடி பைக்கை இழுத்துச்சென்ற பேருந்தின் ஒரு வழியாக நின்ற போது, பேருந்தின் ஒரு சக்கரம் பைக்மேல் ஏறி நின்றிருந்திருக்கிறது. உடலில் ஆங்காங்கே நிறைய காயம், தலையின் பின்பக்கம் 12 தையல் முன்பக்கம் 7 தையல் என என் நண்பனைப் பார்க்க வேதனையாக இருந்தது. மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும். கிளம்பும் போது சீக்கிரம் வாடா எனக்கு சண்டைபோட ஆள் வேணும் என்றபோது அவனுடைய மனைவி அத்தனை வருத்தத்திலும் சிரித்தார்கள். இந்த பாழாய்போன சட்டம் கடுமையாக இருந்திருந்தால் கட்டாயத்தின் பேரிலாவது இவன் தலைக்கவசத்தை அணிந்திருந்திருப்பானோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

சலிப்பு :
தமிழகத்திற்கு தரவேண்டிய அரிசியின் அளவைக் கூட்டவும், மாநாட்டுக்கு அழைக்கவும் என முதல்வரின் டெல்லிப் பயணம் புளித்துப்போன ஆச்சர்யம். தலை போகும் அவசரங்களுக்குக்கூட தந்தியும், கடிதமும் அனுப்புபவர், தன் கட்சி மந்திரிகளைக் காக்க, மேலும் ஒருமுறை டெல்லி விரைந்திருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. மொழியின் சாவும், அதையொட்டிய இன உணர்வின்  சாவும் ஆள்பவர்களுக்கு காலம் காலமாய் வசதியாகவே இருக்கின்றது.

ஆச்சர்யம்:
நேற்று ஊரில், உறவினர் வீட்டில் சாப்பிடும் போது, கொஞ்சம் தயக்கத்தோடு அந்த சோற்றினை இலையில் வைத்தார்கள். சோறு கேரளாவில் பயன்படுத்தும் அரிசி போல் கொஞ்சம் குண்டாக இருந்தது, அதே நேரம் பொன்னி அரிசி சோற்றைவிட சுவையாக இருந்தது. என்ன அரிசியென்று கேட்டேன் கொஞ்சம் வெட்கத்தோடு சொன்னார்கள், ஒரு ரூபாய் ரேசன் அரிசியென்று. ஆச்சர்யமாக இருந்தது, இவ்வளவு நல்ல அரிசியா என்று. இதனால்தான் ரேசன் அரிசியை இவ்வளவு தூரம் கடத்துகிறார்களா எனவும் தோன்றியது. அங்கிருந்த புறப்பட்டு வரும்போது அரிசிக்கடை நண்பரை அழைத்து பொன்னி அரிசி என்ன விலை கேட்டேன் கிலோ 38 ரூபாயாம்.

____________________________

35 comments:

  1. ஆச்சர்யம்...நிஜமாவே ஆச்சர்யம்!

    ReplyDelete
  2. //இந்த பாழாய்போன சட்டம் கடுமையாக இருந்திருந்தால் கட்டாயத்தின் பேரிலாவது இவன் தலைக்கவசத்தை அணிந்திருந்திருப்பானோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை//
    -I did not expect this from u , little upsetting,
    do government order the public to do all the other things
    IN LIFE LIK
    EARNING,RECREATION,REPRODUCTION,.
    if we care for our family and ourselves we sud take measures to save yourself, y sud we blame the govt for not enforcing laws ,its ridiculous.
    when WE dont give a damn for our life or family, why should others care for the shit?

    REGARDING OTHER TOPICS,GOOD VIEW,THANKS FOR SHARING KATHIR .

    (xcuse my language,its just an emotional outbur)st

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றி கதிர்... வேற என்ன சொல்றதுன்னு தெரியல..

    ReplyDelete
  4. நியாயமா 1 ரூபாய் அரிசி ஏழைங்க வயித்துக்கு போனா சரிதான் கதிர்....! நிஜாமாவே ஆச்சர்யம்தான் நல்ல பதிவு!

    ReplyDelete
  5. நல்ல விஷயம். ஆனால் எங்கள் ஊரில் தண்ணீர் வசதியும் இல்லை வேலைக்கு ஆட்களும் வருவதில்லை sir ...

    ReplyDelete
  6. ம்...விவசாயத்தைப் பற்றிய ஒரு நல்ல செய்தி

    உங்கள் நண்பர் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனைகள்

    முதல்வர் பயணம் :‍(

    ரேசன் அரிசியைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன்

    ReplyDelete
  7. \\ இந்த பாழாய்போன சட்டம் கடுமையாக இருந்திருந்தால் கட்டாயத்தின் பேரிலாவது இவன் தலைக்கவசத்தை அணிந்திருந்திருப்பானோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை//

    கரெக்ட் அண்ணே .

    ReplyDelete
  8. //இந்த பாழாய்போன சட்டம் கடுமையாக இருந்திருந்தால் கட்டாயத்தின் பேரிலாவது இவன் தலைக்கவசத்தை அணிந்திருந்திருப்பானோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.//

    உண்மைங்க... இவங்க ஒரு நேரத்துல மட்டும் அந்த சட்டத்த தூக்கிப்பிடிக்குறதும், பிறகு எனக்கென்னன்னு விட்டுடுறதையும் பாத்தா இதுல வேற ஏதோ உள்நோக்கம் இருக்குறமாதிரியே இருக்குங்க...

    //ஒரு ரூபாய் ரேசன் அரிசியென்று.//

    ம்ம்... ஒரு ரூபாய் அரிசி நல்லாயிருக்குன்னு சொல்றத இப்பதான் கேட்குறேன். நல்ல விசயம்...

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு.

    //சுவாரஸ்யமான தகவல் ஆங்காங்கே விவசாய பூமிகள் வீட்டு மனையாக்கப்பட்டு வரும் நிலையிலும், விவசாயம் சார்ந்த மக்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சொந்த நிலமில்லாதவர்கள் மற்றவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயம் செய்ய குத்தகைக்கு நிலம் கிடைக்கவில்லை என்பதுதான் எங்கள் ஊர் பகுதியில் பலருக்கு வருத்தம்//

    நல்ல விஷயம்!

    ReplyDelete
  10. கதிர், நண்பருக்கு நேர்ந்தது இடுகையைப் படிப்பவர்க்குப் பாடமாக இருக்கட்டும். நம்ம அரசாங்கத்த நம்பியா நம்ம நடவடிக்கைகள் இருக்கு?

    விவசாயம், அரிசி பற்றிய செய்திகள்.. :))

    சலிப்பப் பத்தி பேசி என்னங்க பயன்?

    ReplyDelete
  11. விவசாயம் - ம‌கிழ்ச்சி

    தலைக்கவசம் - வ‌ருத்த‌ம்

    சலிப்பு - த‌லையெழுத்து

    ஆச்சர்யம் - உண்மை

    ப‌கிர்த‌ல் - தொட‌ர்க‌

    ReplyDelete
  12. அரவமே இல்லாம போட்டுத் தாக்கிட்டீங்க. பெருசு டெல்லிக்கு போய்ட்டு பார்வதியம்மாவை அனுமதிக்கணும்னு கடுதாசு போட்டிருக்காராம். பாராட்டப்படாதா:))

    ReplyDelete
  13. முதல் செய்தி ரொம்ப சந்தோஷமா இருக்கு .
    மற்ற பகிர்வுக்கும் நன்றி .கூடிய வரை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நல்லது தானே .அதும் வெலையை கேட்டதும் .இங்க நல்ல சன்ன பொன்னி 50 ரூவா ங்க

    ReplyDelete
  14. உங்கள் நண்பர் விரைவில் பூரண நலம் பெற, பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. அரிசி!!! உண்மையிலயே ஆச்சர்யம் தான் கதிர்

    ReplyDelete
  16. ”சீக்கிரம் வாடா எனக்கு சண்டைபோட ஆள் வேணும்”
    உருக்கமாய் ...
    அரிசி!!! உண்மையிலயே ஆச்சர்யம் தான் கதிர் அண்ணே...வழக்கம்போல அசத்தல் பகிர்வு...

    ReplyDelete
  17. பகிர்ந்தமைக்கு நன்றி கதிர்

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு கதிர்.....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  20. அண்ணா உங்கள் நண்பர் விரைவில் நலமுடன் வருவார்...அரிசி நல்லா இருக்கா..??? ஆச்சர்யம் தான்..

    ReplyDelete
  21. பகிர்தலுக்கு நன்றி கதிர்..


    //வானம்பாடிகள் said...
    அரவமே இல்லாம போட்டுத் தாக்கிட்டீங்க. பெருசு டெல்லிக்கு போய்ட்டு பார்வதியம்மாவை அனுமதிக்கணும்னு கடுதாசு போட்டிருக்காராம். பாராட்டப்படாதா:))//

    டெல்லியில போயி போஸ்ட் பண்ணாராமா?

    ReplyDelete
  22. பகிர்ந்தமைக்கு நன்றி... வேற என்ன சொல்றதுன்னு தெரியல..

    ReplyDelete
  23. //கரும்பு டன் ரூபாய் ஆயிரத்து எழுநூற்றம்பது,//

    வாகன வாடகையும் சேர்த்து அதிக பட்சமாக ரூ.1550 மட்டுமே வழங்கப் படுகிறது என நினைக்கிறேன். அதுவும் கூட அதிகபட்ச சர்க்கரைக் கட்டுமானம் உள்ள கரும்புக்குத்தான். சராசரியான சர்க்கரைக் கட்டுமானம் உள்ள கரும்புக்கு 1100 ரூபாய் என்ற அளவில் தான் விலை கிடைக்கிறது. தனியாருக்கு விற்கும் போது 1200 ரூபாய் வரை கிடைக்கிறது. அரசுக்கு விற்கும் போது வெட்டுக் கூலி நாம் தான் கொடுக்க வேண்டும். ஆகவே டன்னுக்கு 1000 ரூபாய் தான் கிடைக்கும்.

    ReplyDelete
  24. சஞ்சய்..

    வெல்லத்திற்கு வாங்குவோர் தற்சமயம் ரூ.1770க்கு அவர்களே வெட்டி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.

    சக்தி சர்க்கரை ஆலை ரூ.1750க்கு எடுத்துக்கொள்கிறார்கள். வெட்டுக்கூலி ரூ.300 போக ரூ.1450 கைக்கு கிடைக்கிறது..

    ReplyDelete
  25. நன்றி @@ நிஜமா நல்லவன்
    நன்றி @@ கலகலப்ரியா

    நன்றி @@ ரோகிணிசிவா
    நன்றி @@ dheva

    நன்றி @@ இராமசாமி கண்ணண்

    நன்றி @@ ஸ்ரீ.கிருஷ்ணா
    (எங்கள் பகுதியிலும் ஆட்கள் இல்லாத பிரச்சனைதான்)

    நன்றி @@ *இயற்கை ராஜி*

    நன்றி @@ ~~Romeo~~
    நன்றி @@ ராமலக்ஷ்மி
    நன்றி @@ க.பாலாசி

    நன்றி @@ செந்தில்வேலன்

    நன்றி @@ க‌ரிச‌ல்கார‌ன்

    நன்றி @@ வானம்பாடிகள்
    (பாராட்டுவிழாதான் நடத்தனும்)


    நன்றி @@ padma

    நன்றி @@ Chitra

    நன்றி @@ நான் ஆதவன்

    நன்றி @@ seemangani

    நன்றி @@ நேசமித்ரன்

    நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்

    நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்

    நன்றி @@ புலவன் புலிகேசி

    நன்றி @@ முகிலன்

    நன்றி @@ சே.குமார்

    நன்றி @@ SanjaiGandhi™

    ReplyDelete
  26. கருணாந்தைக்கு அதை விட வேறென்ன வேலை இருக்கு சொல்லுங்க ? இதுல மாநாடு இல்லைன்னா அரிசி அளவை கூட்டச் சொல்லி நம்மள எல்லாம் டெல்லிக்கு தந்தி குடுக்கச் சொல்லிருப்பாரு... தப்பிச்சோம்டா சாமி

    ReplyDelete
  27. முதலும் கடைசியும் மிகவும் மகிழ்ச்சியைத்தந்த சேதிகள்.! நல்ல பதிவு.

    ReplyDelete
  28. SUPERB SIR
    VISIT MY BLOG
    www.vaalpaiyyan.blogspot.com
    junior vaalpaiyyan

    ReplyDelete
  29. //விவசாயம் சார்ந்த மக்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சொந்த நிலமில்லாதவர்கள் மற்றவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    //

    உண்மையிலேயே கேட்க இனிமையான சந்தோஷமான விஷயம்

    தகவலுக்கு நன்றி கதிர்

    ReplyDelete
  30. நிதர்சனமான இடுகை!

    விவசாயம் - மகிழ்ச்சி.

    உங்கள் நண்பரை அடித்தது ப்ரைவேட் பஸ்ஸாகத்தானிருக்க வேண்டும். அவனுங்க போகற வேகத்துக்கு உடம்பு பூரா ஹெல்மெட் போட்டாலும் பத்தாது. உங்க ஊரில் அவங்க அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே போதும்.

    --

    ஆச்சர்யம் என்னங்க கதிர்? :) நானும் ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறேன். நன்றாகவே இருக்கிறது. மேலும் எங்கள் மருத்துவரின் அட்வைஸும் அதுதான். பாலீஷ் செய்யப்பட்ட விலை உயர்வான அரிசியில் சத்து ஒன்றுமில்லை என்பது அவர் கருத்து. சாப்பிட்ட பின்பு எனது கருத்தும் இதுவே. இங்கு சென்னையில் அரிசியின் தரம் நன்றாகவே இருக்கிறது. மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை. நண்பர்கள் வாங்கி பரிசோதித்து சொன்னால் நலம். மற்றபடி டிவியில் காண்பிப்பதுபோல இதுவரை நான் பார்த்ததில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  31. i like that rice kathir.,whenever i am in kerala, i like to eat that rice mostly..
    :)

    ReplyDelete
  32. உண்மை கதிர் எளிய மக்களுக்கு கிடைக்கும் நல்ல பொருட்களும் இருக்கின்றன...

    மேலும் தலைக் கவசம் பற்றி அருமையாக சொன்னாலும் உங்கள் வம்பை அங்கேயும் வைத்துக் கொள்ளணுமா..?

    ReplyDelete
  33. //ஈரோடு கதிர் said...

    சஞ்சய்..

    வெல்லத்திற்கு வாங்குவோர் தற்சமயம் ரூ.1770க்கு அவர்களே வெட்டி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.

    சக்தி சர்க்கரை ஆலை ரூ.1750க்கு எடுத்துக்கொள்கிறார்கள். வெட்டுக்கூலி ரூ.300 போக ரூ.1450 கைக்கு கிடைக்கிறது..
    //

    கரும்பு விலையை நீங்கள் பொதுவாக சொல்லி இருந்ததால் மற்றொரு தரப்பையும் சொன்னேன் கதிர். எல்லாராலும் சக்தி சுகர்ஸ்க்கு கரும்பு அனுப்ப முடியாதே. ஒப்பந்தம் செய்துக் கொண்ட உங்கள் பகுதி விவசாயிகளால் மட்டும் தான் முடியும். இவர்கள் லாரி வாடகை தான் தருகிறார்களாம். வெட்டுக் கூலி தருவதில்லையாம். பவானியில் சக்தி சுகர்ஸ்க்கு தொடர்ந்து கரும்பு அனுப்பும் நண்பர் சொன்னார். அன்சீசனில் பொன்னி சுகர்ஸ் நிறுவனம் 1700 ரூபாய் கொடுத்து வயலிலிருந்தே கொண்டு செல்கிறார்களாம்.

    விலைகள் பற்றி கொஞ்சம் விரிவாக இங்கே..

    http://www.blog.sanjaigandhi.com/2010/05/blog-post_05.html

    எழுத தூண்டிய உங்களுக்கு நன்றி.. :)

    ReplyDelete

இது படிச்சீங்களா?