Tuesday, 11 May 2010

விபத்துகளும், விளங்காத பாடங்களும்


ரவு ஒன்பதரை மணி, அடங்காத நகரத்தைக் கடந்து, அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்தேன். அந்தக் குறிப்பிட்ட ஊரைத் தாண்டி சில நூறு அடிகள் கடந்திருப்பேன், சாலையின் இடது பாதியில், வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் தேங்கிக் கிடந்தன, வாகனம் எதுவுமில்லாமல் வலது பக்க சாலை காலியாக இருக்க, நான்கைந்து வாகனங்களைக் கடந்த போது அந்த நகரப் பேருந்து ஒரு பக்கமாக திரும்பி, தாறுமாறாக நின்று கொண்டிருந்தது.

வலது பக்க இருளில் பரபரப்பான மக்கள் கூட்டம், கடக்கும் போது “ஓய்எனக் கூச்சல், வேகத்தை முற்றிலும் மட்டுப்படுத்தி என்ன ஆச்சு என்று கேட்க, பேருந்து மோதியதில் பைக்கில் வந்த இருவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். விபத்து நடந்து ஓரிரு நிமிடங்கள்தான் இருக்க வேண்டும். அடிபட்டவர்கள் தெரிந்தவர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தில் வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி வந்தேன்.

கொதிப்போடு ஒரு கூட்டம், பேருந்து ஓட்டுனரை உலகத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் திட்டிக் கொண்டிருந்தது. பேருந்து காலியாக இருந்தது. நடத்துனர்கள் இருவரையும், பயணிகளையும் காணவில்லை. ஓட்டுனர் மட்டும் பதட்டத்தோடு, ஸ்டியரிங்கை இறுகப் பற்றி வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அருகில் உள்ள குடியிருப்பைச் சார்ந்த இளைஞர் படை நிறைய மதுவாசனையோடு ஓட்டுனரை டேய் இறங்குடா கீழே உன்னைக் கொல்லாம விடப்போறதில்லைஎன உருட்டி மிரட்டி கீழே இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. ஓட்டுனர் பக்க கதவை தட்டுவதும், கல்லை எடுத்து பக்கவாட்டு கண்ணாடிகளில் குத்துவதுமாக தறிகெட்டுப்போயிருந்தது கூட்டம். அந்த கூட்டத்தில் பெரும்பாலான நபர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிலை புரியாத போதையில் இருப்பதையும் உணர முடிந்தது.

அதற்குள் அருகிலிருந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வர, அடிபட்டுக் கிடந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சி செய்யும் போதுதான் தெரிந்தது, இரண்டு பேரிடமும் லேசான அசைவு இருப்பது. மனது திக்கென்றது. அடிபட்டுக் கிடந்தவர்களை இறந்துவிட்டதாக சட்டென முடிவு செய்து, உயிர் இருக்கின்றதா என பரிசோதித்து தூக்குவதற்குக் கூட முயற்சி செய்யாத கும்பல் பேருந்து ஓட்டுனரை தாக்குவதில்தான் கவனம் செலுத்தியது. அடிபட்ட நபர்கள் யாரென்று தெரியுமா என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.

ஆம்புலன்ஸ் சென்ற பின், மொத்தக் கூட்டமும் மீண்டும் ஓட்டுனர் பக்கம் திரும்பியது. ஓட்டுனரை கீழே இறங்கச் சொல்லி தொடர்ந்து கூச்சலிட்டது. ஓட்டுனர் கீழே இறங்கினால் எலும்புகூட மிஞ்சாது என்று அனைவருக்கும் தெரியும். என்ன கூச்சலிட்டும் இறங்காத ஓட்டுனர் மேல் சில வீரர்களுக்கு(!!!) கோவம் பொங்கி வர பேருந்திற்குள் ஏறி அடிக்கத் துவங்கினர். ஒருவன் உதைத்ததில் முன்பக்க கண்ணாடி முழுதாக கழன்று கீழே விழுந்து நொறுங்கியது. அருகிலிருந்த குடியிருப்பு பெண்கள் ஓடிவந்து “போக்கத்த நாயே போலுசு வந்தா, தெண்டமழுவறது ஆரு என்று தங்கள் கணவன், பிள்ளைகளைத் திட்டி வீட்டுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்தனர்.

அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வர கூட்டம் அங்கே திரும்பி, அவசரம்னு கூப்பிட்டா செத்த பொறவுதான் வருவியாடா என அந்த ஓட்டுனரிடம் சண்டை போட ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் ஏய்... போலீஸ்டோய் என்ற குரல் வர, வீரர் மறவர் கூட்டம் வழக்கம்போல் இருந்த இடம் தெரியவில்லை.

*****

விபத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும், அது முழுக்க முழுக்க, பேருந்தின் கட்டுக்கடங்கா வேகத்தின் காரணமாக நிகழ்ந்திருக்கிறதென்று. இது போல் தினம் தினம் சாலைகள் தோறும் தவறாமல் விபத்துகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

நெருங்கிய வட்டத்தில் நிகழும் இழப்பு மட்டும் இழப்பாகத் தோன்றுவதும், நமக்குத் தொடர்பில்லாத நபர்கள் சந்திக்கும் விபத்துகள் வெறும் செய்தியாக மட்டுமே நமக்குப் படுவதும் இயல்பாகிப் போய் விட்டது. விபத்தில் மரணங்களின் எண்ணைக்கையில் சுவாரசியம் கூடவோ குறையவோ செய்வதைத் தவிர அந்த செய்திகள் எந்தவொரு படிப்பினையும் கொடுக்கவில்லை.

அந்த விபத்தில், அடிபட்ட இரண்டு மனிதர்களின் குடும்பங்களையும் நினைக்கும் போது, ஒரு கனம் மனம் ஆடிப்போகின்றது. ஒருவேளை அந்த நபர்கள் இறந்து போகும் பட்சத்தில், அதுவரை இயல்பாக போய்க்கொண்டிருந்த அந்த குடும்பம் சிதைந்து சீரழிந்து மீண்டு வருவதே பெரும்பாடாகப் போய்விடும். இறந்தவர்களின் இழப்பை எதைக் கொண்டு நிரப்ப முடியும். இறந்தவர்கள்தான் குடும்பத்தின் பொருளாதார ஊற்றாக இருந்தால், அடுத்த மாத செலவுகளை அந்த குடும்பம் எப்படி சமாளிக்கும் என எண்ணற்ற கேள்விகள் மனதிற்குள் குடைய ஆரம்பித்தன.

*****

விபத்து நடந்த இடத்தில், முழுக்க முழுக்க பேருந்து ஓட்டுனரை மட்டுமே குறை சொல்லி தாக்க முற்பட்ட வீரம் மிகுந்த அந்தக் குழுவிற்கு, இரண்டு பேர் அடிபட்டுவிட்டார்களே என்ற கவலை பெரிதும் காரணமாக இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு முன், தாங்கள் கை காட்டியபோது நிற்காமல் போன பேருந்து, சில்லறை இல்லாததிற்கு திட்டிய நடத்துனர், சாலைகளில் மோதுவது போல் உரசிச் சென்ற பேருந்து என சில பல காரணங்கள் ஒன்று கூடி ஒரு வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்த தூண்டியிருக்கிருக்கலாம். ஓட்டுனரை அடிக்க துடித்த, பேருந்து கண்ணாடியை கல்லில் அடித்த ஒருவன் கூட அடிபட்டுக் கிடந்தவன் என்ன நிலையில் கிடக்கிறான் என்று பார்க்க தயாரில்லை. தன்னுடைய எதிர்ப்பை மட்டுமே காட்ட நினைத்து, அடிப்படை மனித நேயத்தைக் காட்ட மறந்து போனான்.

*****

கர்புறங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் கணிசமான விபத்துக்களை ஏற்படுத்துவது தனியார் பேருந்துகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதே சமயம் அந்த ஓட்டுநர்களின் பாவப்பட்ட பிழைப்பின் மறுபக்கம் பரிதாபமானதுதான்.

எல்லாப் பேருந்துகளுக்கும் ஒரு இடத்தில் புறப்பட்டு மற்ற இடத்தை அடைய குறிப்பிட்ட நேரக் கெடு இருப்பதை அறிவோம். இந்தப் பயண நேரம் நிர்ணயிக்கப்பட்டது, குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து 18 கிலோமீட்டர் கொண்ட இரு நகரங்களுக்கான பயண நேரம் 60 நிமிடங்கள். இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அந்தப் பேருந்து நின்று சென்ற, பேருந்து நிறுத்தங்கள் பத்துகூட இருந்திருக்காது. ஆனால் தற்பொழுது அதே நகரப் பேருந்து, குறைந்த பட்சம் முப்பது இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருக்கிறது. முப்பது வருடங்களுக்கும் முன்பு பயண நேரம் நிர்ணயித்த காலத்தில் இருந்த வாகனங்களைவிட, இன்று சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும், நெரிசலும் பல மடங்கு அதிகம்.

ஒருவகையில் பேருந்துகளின் தரம் மேம்படுத்தப் பட்டிருப்பதால், நிறுத்தங்களில் செலவிடும் நேரத்தை வேகத்தின் மூலம் சரிகட்டுகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு வசூல் பற்றிய அழுத்தம் இல்லாததால் அவை மிதமான வேகத்தில் சில நிறுத்தங்களில் நிறுத்தாமல் கூட சென்றுவிட முடிகிறது. தனியார் பேருந்துகளில் நிலவும் போட்டியும், வசூல் குறையும் பட்சத்தில் முதலாளிகளின் விரட்டலும், ஒரு பேருந்து ஓட்டுனரை தறிகெட்டு ஓட்ட வைக்கிறது. எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நகரப் பேருந்தைப் பற்றிச் சொல்லும் போது “அந்த வண்டிக்கு ட்ரைவரா போயிட்டா ஒன்னுக்கிருக்கக்கூட நேரம் கிடைக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த தறிகெட்ட வேகம் குறித்து, தனியார் பேருந்து முதலாளிகளுக்கு சற்றும் கவலையில்லை, உயிரைப் பணயம் வைத்து, பலசமயம் உயிரைப் பறித்து தினம்தினம் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓ(ட்)டிக் கொண்டேயிருப்பவர்கள் ஓட்டுனர்கள்தான். பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பேருந்து ஓட்டுனர் அடிக்கடி வண்டியில ஏறின பிறகு, இறங்கி வந்தாத்தான் நிஜம் என்பார்.

*****

வீறு கொண்டு பேருந்தையும், ஓட்டுனரையும் தாக்கியவர்களின் கோபம் அடுத்த சில மணி நேரங்களில் அடங்கிப்போய் விட்டது, அடுத்த ஓரிரு நாளில் அந்தப் பேருந்து புதிதாய் கண்ணாடி அணிந்து கொண்டு மாற்று ஓட்டுனரோடு தன் பயணத்தைத் துவங்கிவிட்டது. அன்று அடிக்கத் துடித்த வீரர் படை அதே பேருந்தில், படியில் தொங்கிக் கொண்டு, புதுப்பாட்டு போடுங்கண்ணா என்ற கூச்சலோடு, ஓடும் பாட்டுக்கு ஏற்றார் போல தலையசைத்துக் கொண்டு தன் வழியில் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறது.
 
எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட.




*****

56 comments:

  1. எப்புடி மொத இடத்தை புடிச்சிட்டொம்ல.. படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  2. / Baiju said...
    எப்புடி மொத இடத்தை புடிச்சிட்டொம்ல.. படிச்சிட்டு வரேன்
    /

    இது போங்காட்டம்.:))

    ReplyDelete
  3. மிக அறிவார்ந்த அலசல்.....


    வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete
  4. //ஒருவகையில் பேருந்துகளின் தரம் மேம்படுத்தப் பட்டிருப்பதால், நிறுத்தங்களில் செலவிடும் நேரத்தை வேகத்தின் மூலம் சரிகட்டுகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு வசூல் பற்றிய அழுத்தம் இல்லாததால் அவை மிதமான வேகத்தில் சில நிறுத்தங்களில் நிறுத்தாமல் கூட சென்றுவிட முடிகிறது. தனியார் பேருந்துகளில் நிலவும் போட்டியும், வசூல் குறையும் பட்சத்தில் முதலாளிகளின் விரட்டலும், ஒரு பேருந்து ஓட்டுனரை தறிகெட்டு ஓட்ட வைக்கிறது.//-well said, nambalum fasta pora pvt bus thannane prefer pandrom , always the fault lies with us

    ReplyDelete
  5. விபத்தில் மரணங்களின் எண்ணைக்கையில் சுவாரசியம் கூடவோ குறையவோ செய்வதைத் தவிர அந்த செய்திகள் எந்தவொரு படிப்பினையும் கொடுக்கவில்லை.//

    ஒரு முறை மின்சார ரயிலில் ஏறப்போய் ப்ளாட்ஃபார்முக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்துவிட்டார் ஒருவர். எப்படியோ இடுக்கில் சிக்கி அடி படாமல் ரயில் நகர்ந்ததும் தானே எழுந்து வந்தவரை நோக்கிய ஒரு கும்பலில் உயர்த்து ஒலித்தது ஒரு குரல். ‘பாருப்பா போய்ட்டான்னு நினைச்சா கீறல் கூட இல்லாம எழுந்து வரான்’ என்று. கொஞ்சமும் ஏமாற்றம் கலந்தாற்போல் கூட தோன்றியது.

    /எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது./

    சிலபஸ் மாறிட்டே இருக்குன்னு படிக்கறதில்லையோ:(

    ReplyDelete
  6. நல்ல அலசல்...

    //எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட.//

    அப்பட்டமான உண்மை...

    புரிந்து கொள்ளத்தான் யாரும் முயல்வதில்லை...

    ReplyDelete
  7. //.. nambalum fasta pora pvt bus thannane prefer pandrom..//

    என்னங்க பண்ணுறது சீக்கிரம் ஊருக்கு அல்லது அலுவலகம் போகணுமேன்னு கவலை..

    15-20 வருசத்துக்கு முன்னாடி கோபிய தாண்டி போறது பெரிய விசயம், இன்னைக்கு ஒரே நாள்ல ஊர சுத்த ஆசைப்படறோம்..
    பொழுதோட கெளம்புனா காத்தாலைக்கு சென்னைலையோ, பெங்களூர்லையோ இருக்கணும்னு நினைக்கறோம்.. :-(

    ReplyDelete
  8. வளைகுடாவுக்கு வரும் பேருந்து வாகன ஓட்டிகள் நன்றாகவே ஓட்டுகிறார்கள்.இதுவரை பேருந்து விபத்துக்கள் என பார்த்ததேயில்லை.

    முதல் வேலையா இருபுறா ஒரு வழிப்பாதை என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்.
    இலவசங்களையெல்லாம் விட்டு விட்டு இந்தக் கட்டமைப்புக்களை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே மக்கள் வாழ்வுக்கு பயன், உலகச்சந்தை போன்றவைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  9. தன்னுடைய எதிர்ப்பை மட்டுமே காட்ட நினைத்து, அடிப்படை மனித நேயத்தைக் காட்ட மறந்து போனான்//

    நினைவில் கொள்ளவேண்டிய கருத்து!!

    ReplyDelete
  10. சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கதிர்! கலெக்சனுக்கு ஆசைப்பட்டு எல்லோரும் அதிக இடங்களில் நிறுத்தி, அதிவேகத்தில் செல்வது, இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாய் செல்வது... எல்லோரும் திருந்த வேண்டும் கதிர்!

    பிரபாகர்...

    ReplyDelete
  11. கதிர் அண்ணா... ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருக்கீங்க...இது எப்பவும் யாருக்கும் உறைக்க போறது இல்ல...:(

    ReplyDelete
  12. அனைவரும் சிந்திக்க வேண்டிய... அலசல்....


    ஆனா.... எப்படி திருத்துவது என்று தெரியவில்லை, எப்படிதிருந்தும் என்றும் தெரியவில்லை.

    அந்த நேரத்தில் யாராவது ஆக்கப்பூர்வமாக செயல்பட்டாலும்... அவர்களிடமும் தன் “வீரத்தை” காட்டும்.... அந்த கூட்டம். அதனால் சிலர் விலகிசெல்லும் யதார்த்தமும் நிகழும்.... என்ன செய்ய...???

    ReplyDelete
  13. ஈரோட்டு காரங்க எல்லாம் ஒரே சமயத்துல பதிவு போடுவாங்களோ?

    ரொம்ப நல்லா அலசி ஆராய்ஞ்சு பதிஞ்சு இருக்கீங்க .
    என்ன சொல்லி என்னனு கூட சில சமயம் தோணுது .
    ஆனா சொல்லிட்டே இருந்தா ஒரு நாள் மாறுதல் வரும்ன்னு நம்பிக்கையும் இருக்கு
    பல கோணங்களிலே விபத்தை பாத்துருகீங்க . சரியான பார்வை .
    நல்ல writeup

    ReplyDelete
  14. விபத்து நடந்த இடத்தில், முழுக்க முழுக்க பேருந்து ஓட்டுனரை மட்டுமே குறை சொல்லி தாக்க முற்பட்ட வீரம் மிகுந்த அந்தக் குழுவிற்கு, இரண்டு பேர் அடிபட்டுவிட்டார்களே என்ற கவலை பெரிதும் காரணமாக இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு முன், தாங்கள் கை காட்டியபோது நிற்காமல் போன பேருந்து, சில்லறை இல்லாததிற்கு திட்டிய நடத்துனர், சாலைகளில் மோதுவது போல் உரசிச் சென்ற பேருந்து என சில பல காரணங்கள் ஒன்று கூடி ஒரு வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்த தூண்டியிருக்கிருக்கலாம். ஓட்டுனரை அடிக்க துடித்த, பேருந்து கண்ணாடியை கல்லில் அடித்த ஒருவன் கூட அடிபட்டுக் கிடந்தவன் என்ன நிலையில் கிடக்கிறான் என்று பார்க்க தயாரில்லை. தன்னுடைய எதிர்ப்பை மட்டுமே காட்ட நினைத்து, அடிப்படை மனித நேயத்தைக் காட்ட மறந்து போனான்.


    ........ நாட்டு நடப்பை அப்படியே புட்டு புட்டு வச்சிட்டீங்க.....

    ReplyDelete
  15. //எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது.//

    சமூக அக்கறை என்பதெல்லாம் வெறும் பேச்சுதான். நல்லதொரு அருமையான இடுகை.

    ReplyDelete
  16. மீண்டும் ஒரு அருமையான பதிவு கதிர்.

    பலவற்றையும் நன்றாக அலசியிருக்கீங்க கதிர்.

    நீங்க சொல்லியிருக்கற மாதிரி.. நம் போக்குவரத்துக் கட்டமைப்பு போதாது என்று கூறும் வேளையில் நம் சாலை விதிகள் எவ்வாறு உள்ளது?

    பாதசாரிகளுக்கு, இரு சக்கர வாகனங்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது நம் சாலைகளில்?

    இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் ஏழை நாடு.. காசில்லை என்று கூறப்போகிறோம்?

    கொடுமைங்க!!

    ReplyDelete
  17. என்ன சொல்றதுன்னு தெரியலைங்க... இப்ப ஊருக்குப்போனப்ப கும்பகோணத்துக்கு பக்கத்துல காத்தாலையே ஒரு ஆக்ஸிடன்ட்.. நீங்க சொன்னமாதிரி... எல்லாரும் ட்ரைவர் கண்டக்கடருக்கிட்ட சண்டபோட்டுகிட்டு நிக்கானுவோலே ஒழிய ஒருப்பயலும் அடிப்பட்வங்களுக்கு முதலுதவி செய்யணும்னு செய்யல.. ரெத்தம் ஒழுக ஒழுக அந்த ஜீவன்கள் ரோட்டுல உட்காந்திருந்தாங்க... அப்பறம் ஆம்லன்ஸ் வந்துதான் அழச்சிட்டு போனாங்க... பாருங்க கிராமத்து மனுசனுக்குள்ள இருந்த மனிதாபிமானமும் இப்ப இல்லாமப்போச்சு....

    ஈரோட்டு பஸ்டான்டுல அடிக்கடி சேலம் ரேக்ல பார்க்கலாம்... இப்டி பிரைவேட் பஸ்காரங்க... வேகமா வந்து திருப்புறத... மக்களாப்பாத்து பயந்து ஓடினாத்தான் உண்டு.... பஸ்டாண்டுலையே இப்டின்னா...மத்த இடங்கள்ல சொல்லவாவேணும்....

    நல்ல இடுகை...அக்கரையும்கூட....

    ReplyDelete
  18. //எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட. //

    நச்....

    ReplyDelete
  19. க.பாலாசி said...

    /ஈரோட்டு பஸ்டான்டுல அடிக்கடி சேலம் ரேக்ல பார்க்கலாம்... /

    பஸ்ஸ்டேண்டே பழியா கெடக்கறன்னு என்னா கும்மினாலும் எப்புடி கண்ணு வலிக்காத மாதிரியே இப்புடி:))

    ReplyDelete
  20. விபத்து நடக்கும் இடங்களில் தங்கள் ஹீரோயிசத்தை நிரூபிக்க முயல்பவர்கள் தான் அதிகம்..




    பேருந்து விபத்துக்களை பயண நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் குறைக்கலாம்ன்னு ஏன் யாரும் யோசிக்க மாட்டேங்கிறாங்க‌:-(

    ReplyDelete
  21. நா சொல்ல வந்தத நீங்க சொல்லிடீங்க வானம்பாடிகள் .பையன் பஸ் ஸ்டாண்ட் புள்ளி விபரம் எப்பிடி கைல வச்சு இருக்காரு பாத்தீங்களா .பாலாசி கொஞ்சம் ஆபீசும் போங்க

    ReplyDelete
  22. //ஈரோட்டு பஸ்டான்டுல அடிக்கடி சேலம் ரேக்ல பார்க்கலாம்//

    Very dangerous zone is this only:-((

    ReplyDelete
  23. இது போன்ற சம்பவங்களின் போது, கூட்டம் சேர்த்து வன்முறையில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணம், தனிமனிதனின் மனதின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கிற கையாலாகாத கோபமும் விரக்தியும் தான்!

    இந்த மிருகவெளிப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கில்லை எனினும், நிஜத்தில் இக்கோபங்களின் மையத்தை கூர்ந்து கவனித்தால் அதில் தோற்றுத் தோற்று மண்டிக்கிடக்கிற இயலாமையின் பாசி படிந்திருப்பதைப் பார்க்கலாம்.

    நல்ல பகிர்வு!

    ReplyDelete
  24. @@ Baiju

    @@ வானம்பாடிகள்

    @@ ஆரூரன்

    @@ ரோகிணிசிவா

    @@ அகல்விளக்கு

    @@ திருஞானசம்பத்.மா.

    @@ ராஜ நடராஜன்

    @@ தேவன் மாயம்

    @@ பிரபாகர்

    @@ நிஜமா நல்லவன்

    @@ T.V.ராதாகிருஷ்ணன்

    @@ சி. கருணாகரசு

    @@ padma

    @@ Jags

    @@ Chitra

    @@ இராமசாமி கண்ணண்

    @@ V.Radhakrishnan

    @@ ச.செந்தில்வேலன்

    @@ க.பாலாசி

    @@ *இயற்கை ராஜி*

    @@ சேட்டைக்காரன்

    வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  25. அருமையான பதிவு கதிர்.

    ReplyDelete
  26. சட்டங்களைக் கடுமையாக்கணும்..தண்டனைகளையும்.

    ReplyDelete
  27. /எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது./
    இங்கு தன் வீட்டில் இழப்பு என்ற நிலையில் மட்டுமே பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  28. அவினாசி சாலையில் பேருந்தில் ஏறி ஊர் போய் சேர்ந்தாத்தான் நிஜம்:( காலையில் ஈரோட்டில் இருந்து வரும் பாஸஞ்சர் ட்ரெயின் இங்கு சும்மாதான் மாலை 6 வரை நிற்குது. இடையில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்கினால் நிறைய்ய கூட்டம் குறைய வாய்ப்புண்டு. யாரு சொல்லுவது... மனிதனைவிட மொழி முக்கியம்

    ReplyDelete
  29. என்னாத்த சொல்லி... என்னாத்த... ம்ம்.. இப்டி சலிச்சுக்கிட்டா கோச்சுக்க மாட்டியளே..

    ReplyDelete
  30. எனக்குத் தெரிந்து 18 கிலோமீட்டர் கொண்ட இரு நகரங்களுக்கான பயண நேரம் 60 நிமிடங்கள். இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அந்தப் பேருந்து நின்று சென்ற, பேருந்து நிறுத்தங்கள் பத்துகூட இருந்திருக்காது. ஆனால் தற்பொழுது அதே நகரப் பேருந்து, குறைந்த பட்சம் முப்பது இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருக்கிறது. //

    தவறான தகவலாக தோன்றுகிறது. கட்டுரையின் மிகச்சில பகுதிகளில் கேள்விகள் இருந்தாலும்...

    தேவையான பகிர்வு, சிறப்பான பகிர்வு. பணி தொடரட்டும். இதைப்படிப்பவர்கள் இந்தச்சூழலில் சிக்க நேர்கையில் ஒரு உருப்படியான காரியத்தையாவது செய்வார் என்ற நம்பிக்கையோடு.. இந்தப்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.!!

    ReplyDelete
  31. ஒரு விபத்தை பல கோணங்களில் அலசி படிப்பினை இடுக்கை தந்ததிற்கு உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் கதிர் அண்ணே...

    ReplyDelete
  32. அண்ணே ஒரு விபத்தை வைத்து இவ்வளவு விஷயம் எழுதி அசத்திடிங்க..

    ReplyDelete
  33. நல்லதொரு சமூகச் சிந்தனையும் செய்தியும் கதிர்.எங்கள் நாடுகள் இந்த வகையில் முன்னேற இன்னும் நிறையக் காலம் தேவை !
    அதுவரை ?

    ReplyDelete
  34. //நெருங்கிய வட்டத்தில் நிகழும் இழப்பு மட்டும் இழப்பாகத் தோன்றுவதும், நமக்குத் தொடர்பில்லாத நபர்கள் சந்திக்கும் விபத்துகள் வெறும் செய்தியாக மட்டுமே நமக்குப் படுவதும் இயல்பாகிப் போய் விட்டது.//

    நியாயமான கோபம் கதிர்...திருந்தா ஜென்மமாய் மாறிப் போயிருக்கிறது மனிதமற்ற மனிததைனம்.

    ReplyDelete
  35. @@ பாலகுமார்

    @@ முகிலன்

    @@ அன்புடன் அருணா

    @@ கலகலப்ரியா

    @@ seemangani

    @@ ~~Romeo~~

    @@ ஹேமா

    @@ புலவன் புலிகேசி

    வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  36. @@ மயில்
    //இடையில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்கினால் நிறைய்ய கூட்டம் குறைய வாய்ப்புண்டு.//

    விஜி... அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளின் ஆதிக்க உள்குத்தே தொடர்வண்டி இயக்கப்படாததிற்கு காரணம்.

    ReplyDelete
  37. நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்

    //தவறான தகவலாக தோன்றுகிறது. //

    நான் எழுதிய தகவலின் மூலம் பவானி பேருந்து நிலையத்திலிருந்து, ஈரோடு சூரம்பட்டி வலசு வரை இயக்கப்படும் 5ம் எண் பேருந்தை அடிப்படையாகக் கொண்டது.

    பயணத் தூரம் கிட்டத்தட்ட 18 கி.மீ. பயண நேரம் 60 நிமிடங்கள். இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்ட வருடம் எது என்று யாருக்கும் தெரியவில்லை.

    ஆனால் கடந்த 20 வருடங்களில் ஈரோடு மற்றும் பவானி பேருந்து நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

    குறிப்பாக பவானி பேருந்து நிலையம் 3 கி.மீ தொலைவிற்கு தள்ளப்பட்டு, அதனால் மட்டுமே புதிதாக 4 நிறுத்தங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன,

    1980களின் இறுதியில் இருந்த சுமார் 10 பேருந்து நிறுத்தங்கள் இப்போது 31 நிறுத்தங்களாக மாறியிருக்கின்றன.

    அடுத்து வயல் வெளியாக இருந்த பவானி, ஈரோட்டை இணைக்கும் அக்ரஹார வழி, இன்று வீடுகளாலும், கட்டிடங்களாலும் இரு நகரங்களையும் 90% தூரம் இணைந்துவிட, நெரிசல் மிக அதிகமாக மாறிவிட்டது.

    //கட்டுரையின் மிகச்சில பகுதிகளில் கேள்விகள் இருந்தாலும்...//

    உங்களிடம் இருக்கும் கேள்விகளை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள். தெரிந்தவற்றிற்கு விடை பகிர்கிறேன், தெரியாதவற்றிற்கு விடை தேடலாம்..

    மீண்டும் நன்றி ஆதி

    ReplyDelete
  38. அருமையான அலசல்

    ReplyDelete
  39. //எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட.//

    கதிர்,

    நம் தேசத்தில் உள்ள ஒவ்வொருவனுக்கும் ‘தன்னை’ச் சார்ந்தவர்களின் மேல் அக்கறை வந்துவிட்டாலே போதும்.... மிகப்பெரும் மாற்றத்தைக் கண்டுவிடும் இந்த மனித சமூகம்.

    சமூகத்தின் மீதான உங்கள் பார்வை எப்போதும் என்னை வியக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete
  40. ஆரூரன் விசுவநாதன் said...
    மிக அறிவார்ந்த அலசல்.....

    வேறென்ன சொல்ல....

    ReplyDelete
  41. நாம கவனமாக போனாலும் எதிர்க்க வருகிறவன் எமனாவுள்ள வருகிறான்.. பார்த்து சூதானமாக போங்க.. அப்படியே பாலாசியையும் பார்த்துங்க..

    ReplyDelete
  42. எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட

    உண்மை உண்மை

    விபத்து நடந்த இடத்தை கடந்து செல்லும் எப்பொழுதும் என் மனது பதை பதைக்கும் நல்ல அலசல் கதிர்

    ReplyDelete
  43. @@ Cable Sankar

    @@ ’மனவிழி’சத்ரியன்

    @@ பிரேமா மகள்

    @@ தமிழரசி

    @@ தாராபுரத்தான்
    //அப்படியே பாலாசியையும் பார்த்துங்க..//

    பாலாசியக் கண்ட பஸ்ஸே ஒதுங்கி நிக்குதுங்க... கலரக் கண்டா நம்ம பய வுடறதேயில்லீங்

    @@ r.v.saravanan

    வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  44. அன்பின் கதிர்

    இஅயலாமையின் உச்சகட்டத்தில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு இவ்விடுகை. உண்மை நிலையை அப்படியே படம் படித்துக் காட்டுகிறது.
    எங்கு எவ்விபத்து நேர்ந்தாலும் பேருந்தின் ஓட்டுனரே குறை வைத்துத் தாக்கப்படுவார். காரணமே தேவை இல்லை - சிந்திக்க மனம் வராது - கதாநாயகனாக வேண்டும் என்ற அடி மனத்து ஆசை ஒவ்வொரு இளைஞனையும் மாற்றி விடும் - அவன் தெரிந்து செய்யும் தவறல்ல அது - இடுகையில் குறிப்பிட்ட பல் காரணங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    விபத்தில் அடிபட்டவர்களை கவனிக்கவும் ஒரு சிலரும் உண்டு என்பதை மறுக்க இயலாது கதிர்.

    போலீஸூக்குப் பயப்படும் மக்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன ? நேற்று முன் தினம் .... ஏடிஎம் செண்டரில் பலியான இன்ஸ் பெக்டரின் நிலை என்ன ?

    கிராமம் நகரம் எல்லாம் ஒரே மாதிரி தான்.

    கண்கள் பார்த்தன - மனம் அழுதது - கைகள் இடுகை இட்டன் - அழகான ஒரு இடுகை வெளி வந்தது.

    நல்வாழ்த்துகள் கதிர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  45. //எதிலிருந்தும் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்திற்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. சாலைகள் தோறும் எமன் அடங்காப் பசியோடு அமர்ந்து கொண்டிருப்பது உட்பட. //

    உண்மைதான் கதிர் அண்ணா.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  46. தமிழகமெங்கும் இதே நிலை தான்,சாலை வழி பயணப்பாதுகாப்பு இங்கு யாருக்கும் உத்தரவாதமில்லை.

    ReplyDelete
  47. அடி பட்டவருக்கு உதவுவதில் இன்னும் என்னைப் போன்றோருக்கு இருக்கும் தயக்கமும் பயமும் இந்த இடுகையைப் படித்தவுடன் வெட்கமுறச் செய்கிறது கதிர்

    ReplyDelete
  48. "அவினாசி சாலையில் பேருந்தில் ஏறி ஊர் போய் சேர்ந்தாத்தான் நிஜம்:( காலையில் ஈரோட்டில் இருந்து வரும் பாஸஞ்சர் ட்ரெயின் இங்கு சும்மாதான் மாலை 6 வரை நிற்குது. இடையில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இயங்கினால் நிறைய்ய கூட்டம் குறைய வாய்ப்புண்டு. யாரு சொல்லுவது... மனிதனைவிட மொழி முக்கியம்"

    விஜி... அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளின் ஆதிக்க உள்குத்தே தொடர்வண்டி இயக்கப்படாததிற்கு காரணம்.

    உள் குத்து , வெளிக்குத்து எதுவும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பு 28 நாட்கள் காலை 10.15 கோவையில் எடுத்து மதியம் 2.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வராது. அதுக்கப்புறம் நிறுத்திட்டாங்க. மக்களும் யாரும் ஒண்ணும் கேக்கலை. அதும் போக இப்ப பட்ஜெட்டில் ஈரோடு கோவை ஒரு ரெயில் உடறதா சொல்லியிருக்காங்க. ஆனா அது அந்த கடவுளுக்கே "சாரி பாலக்காட்டு மாதவங்களுக்கே" வெளிச்சம்.

    தமிழனுக்குத்தான் ஏர் பஸ் உட்டு இருக்காங்களே , அதனால வருத்தப்படாதீங்க.

    ReplyDelete
  49. கதிர்,

    "இதற்கு முன், தாங்கள் கை காட்டியபோது நிற்காமல் போன பேருந்து, சில்லறை இல்லாததிற்கு திட்டிய நடத்துனர், சாலைகளில் மோதுவது போல் உரசிச் சென்ற பேருந்து என சில பல காரணங்கள் ஒன்று கூடி ஒரு வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்த தூண்டியிருக்கிருக்கலாம்."

    எதிர்வினை என்பது குறித்த அச்செயலிலிருந்து மட்டும் எழுவதன்று. மனிதனின் உள்மனசுக்குள் படிந்திருக்கும் ஞாபகங்களிலிருந்தும் வருவது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பொறுப்பற்ற வேகத்தைத் தணிக்க எத்தனை வாசகங்களைத்தான் வீதிகளில் எழுதிவைத்திருந்தென்ன...

    அண்மையில் ஒரு புத்திசாலித்தனமான அறிவுரை விளம்பரம் பார்த்தேன். கைத்தொலைபேசி உபயோகிப்பதனால் நிகழும் விபத்துக்களைக் குறித்த எச்சரிக்கை அது.

    காலில்லாத ஒருவரின் புகைப்படத்தைப் போட்டு
    MOBILE
    IMMOBILE

    என்ன விளம்பரம் செய்து என்ன?

    ReplyDelete
  50. இதுமாதிரியான சூழல்களில் மனிதர்களின் கவனம் எங்கு இருக்க வேண்டுமென்பதை உணர்த்தும் மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  51. தமிழகத்தில் சில ஆம்னி பஸ்கள் ஒரு பெரிமிட்டை வைத்துக்கொண்டு பல வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகின்றனர் என்று கேள்விப்பட்டேன். அர்சுக்கு ஒருபுறம் வருவாய் இழப்பு.மறுபுறம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பை நிறைகிறது.

    லாபம் ஒன்றை மட்டும் நோக்கமாக செயல்பட இவர்களுக்கு எப்படி முடிகிறது.

    ReplyDelete
  52. Kathir - Adipattavargal nilamai tharpodhu enna enru theriyuma?

    ReplyDelete
  53. @@ வெங்கட்

    வெங்கட்...

    அது குறித்துத் தெரியவில்லை.... மிக மிக மோசமான அடிதான்

    அந்த ஆம்புலன்ஸ் எந்த மருத்துவமனைக்கு சென்றது என்பது பற்றியும் தெரியவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் பத்திரிக்கைகளைத் தேடினேன் ஒரு தகவலும் இல்லை....

    ReplyDelete

இது படிச்சீங்களா?