Monday, 21 June 2010

விஷம் சிந்தும் நாக்கு

எதேச்சையாக தொலைக்காட்சியைப் பார்த்தேன், விஜய் தொலைக்காட்சியின் சினிமாவுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியை நீயா...நானா? கோபிநாத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நாடோடிகள் படத்தில் கதாநாயகன் சசிக்குமாருக்கு தங்கையாக நடித்த அபிநயா சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மேடையில் நின்று கொண்டிருந்தார், படம் பார்க்கும் போதே கேள்விப்பட்டிருந்தேன், அவர் காது கேளாத, வாய் பேசமுடியாதவர் என்று. படம் பார்க்கும் போது அப்படியெதுவுமே தெரியாது, மிக நேர்த்தியாகவே நடித்திருந்திருப்பார். நாடோடிகள் படம் மனதிற்கு நினைவு வரும் போதெல்லாம் இந்தப் பெண் பாத்திரமும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்று.

அந்தப் பெண் விருது பெறுவதை பார்க்கும் போது  மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவருக்கு மிகப் பொருத்தமான, அவசியமான விருதும் கூட, அபினயாவின் தந்தை மேடைக்கு அழைக்கப்பட்டார், விருதோடு அந்தப் பெண் தந்தையை கட்டிக் கொண்டது. மகள் சார்பில் தந்தை பேசும் போது, தன் மகள் இந்த விநாடி என்ன மாதிரி உணர்ந்து கொண்டிருப்பாள் என்பதை தெரிவித்து, இது தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றார். இந்தப் பெண் இங்கு நிற்க இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் / நடிகர் சசிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் மூவரும்தான் காரணம் என கண்கலங்கிச் சொன்னார்.

கோபிநாத் இயக்குனர் சமுத்திரக்கனீயிடம் ஏதோ கேட்க அவர் “அபிநயாவை என் மகள் போல் பார்த்துக் கொண்டேன், அவளுடைய தந்தை கண் கலங்கி விட்டார், நான் கண் கலங்காமல் இருக்கிறேன் அவ்வளவுதான்” என்றார்.

இந்நிலையில் அபிநயாவின் வேண்டுகோளையடுத்து நடிகர் சசிக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கதிர் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

கோபிநாத் தன் கேள்விக்கணையை(!) சசிகுமாரிடம் வீசினார். ”இந்தப் பெண் உங்களோடு நடித்த போது உங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லையா” என்பது போல்...

சசிகுமார் “என்னுடைய தங்கையாக சிறப்பாக நடித்தார், அதனால் என்னுடைய அடுத்த படத்தில் அபிநயாவை கதாநாயகியா நடிக்கவைக்கிறேன்” என்ற போது அரங்கமே அதிர்ந்தது...

அந்த நேரத்தில் மிக சப்தமாக, அழுத்தமாக கோபிநாத் கேட்டார் “எந்த நம்பிக்கையில்”.

மிக நிச்சயமாக இதை சசிக்குமார் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். சட்டென தடுமாறினார் சசிக்குமார், குரல் மிக மென்மையாக வந்தது “ம்ம். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு” என்றார்

ஏற்கனவே அந்தப் பெண் அபிநயா தனக்கு உள்ள உடல் குறைபாட்டைத் தாண்டி, தன்னுடைய திறமையை, மிக அழகாக நடிப்பின் மூலம் நாடோடிகள் படம் மூலம் நிரூபித்துள்ளார். அதில் முழு திருப்தியும் அடைந்த பின்பே சசிக்குமார் தன்னுடைய அடுத்த படத்திற்கு அதே பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளார். இந்த நிலையில் கோபிநாத் கேட்ட ”எந்த நம்பிக்கையில்” என்ற கேள்விக்கு யார் என்ன பதில் சொன்னால், கோபிநாத்திற்கு நம்பிக்கைக்கான நியாயம் கிடைக்கும்.

பல ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில், ஒளிபரப்பை லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு விழாவில் தன் குறையை நிறையாக மாற்றி சாதித்திருக்கும் ஒரு திறமைசாலிப் பெண்ணை அடித்து நொறுக்கி அவமானப் படுத்தும் விதமாகவே ”எந்த நம்பிக்கையில் வாய் பேச முடியாத பெண்ணை கதாநாயாகியாக்கினீர்கள்” என்ற உள்ளடக்கதோடு ஒரு வெற்றி பெற்ற இயக்குனரைப் பார்த்து கேட்கும் மன வக்கிரம் எங்கிருந்து வருகிறது இந்த கோபிநாத் போன்றவர்களுக்கு.

உதாரணத்திற்கு இதே கோபிநாத்திற்கு வாய் பேசமுடியாத ஒரு மகள் இருந்து, அந்தப் பெண்ணிற்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்து, இது போல் மேடையேறியிருந்தால், ”எந்த நம்பிக்கையில்” என்ற இதே கேள்வி கோபிநாத்திற்கு வருமா.

கேள்விகள் கேட்பது மட்டுமே புத்திசாலித்தனம் என்ற மூடத்தனம் கோபிநாத்தின் மூளைக்குள் நிரம்பிவிட்டதோ? கேள்விகளை மடக்கி மடக்கி, கேட்டுக் கேட்டு ஒரு புற்று நோய் போல் கோபிநாத்தின் மனதிற்குள் கேள்விகள் வளர்ந்து விட்டது போலும். அந்த நோயின் நீட்சியாகவே விசமத்தனமான, விஷம் தோய்ந்த கேள்வி அவ்வளவு ஆங்காராமாய் கோபிநாத்திடம் இருந்து தெறித்திருக்கிறது. 

அதை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சிக்கும் கண்டனங்கள்

யாகாவராயினும் நாகாக்க..... இனியாவது விஷத் துளிகள் கோபிநாத் நாவில் இருந்து தெறிக்காமல் இருக்கட்டும்.

நடிகை அபிநயாவின் காணொளி

___________________________________

76 comments:

  1. ||அடுத்து கோபிநாத் தன் கேள்விக்கணையை(!) சசிகுமாரிடம் வீசினார். ”இந்தப் பெண் உங்களோடு நடித்த போது உங்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லையா” என்பது போல்...

    சசிகுமார் “என்னுடைய தங்கையாக சிறப்பாக நடித்தார், அதனால் என்னுடைய அடுத்த படத்தில் அபிநயாவை கதாநாயகியா நடிக்கவைக்கிறேன்” என்ற போது அரங்கமே அதிர்ந்தது...

    அந்த நேரத்தில் மிக சப்தமாக, அழுத்தமாக கோபிநாத் கேட்டார் “எந்த நம்பிக்கையில்”.||

    ஓ மை காட்.. இந்த கோபிநாத்துக்கு அறிவு கம்மின்னு அப்பவே நெனச்சேன்.. வேற வேலை ஏதாவது இருந்தா பார்க்கலாம்ல...

    ReplyDelete
  2. ||அதை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சிக்கும் கண்டனங்கள்||

    எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க...

    சசிகுமாருக்கு எதிர்த்து ஒரு கேள்வி கேக்கத் தெரியாதா... என்ன .......... கேள்வி கேக்கறீங்கன்னு..

    ReplyDelete
  3. சுடுச்சொல்... அது மற்றவர்களை சுடும் சொல் என்று... அறியாதவர் போலும்... திரு கோபிநாத்.

    இயக்குனர் திரு சசிகுமார் அவர்களுக்கு என் வணக்கம்.

    அபிநயாவிற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. அவர் காதோரம் வெச்சிருக்கிற மைக் ஹெட்ஃபோன்ல பின்னாடில இருந்து ஒரு பரதேசி கேள்வி சொல்லும்னு எங்கயோ படிச்சேன். மனுசன்னா இந்த கேள்விய கேட்டு உணர எவ்வளவு நேரம் புடிக்கும்? இதுக்கு எடிட்டிங் வேறா:(

    ReplyDelete
  5. நம்மள் பத்தி நாலு பேரு கொஞ்சம் உசத்தி பேசுனா என்ன பேசுறோம் , என்ன கேக்றோம்னு கூட மற்ந்து போயிரும் போல இவனுங்களுக்கு.இதுல இந்த ஆளு விகடன்ல தன்னம்பிக்கை தொடர் வேற எழுதுறாராக்கும்.

    ReplyDelete
  6. அய்யோ மாப்பு,

    உங்களுக்கும் உணர்ச்சி வசப்படுற குறைபாடு வந்திடுச்சா?? இதுக்கு ஒரு இடுகையா??

    ஏன் அவர் அழுத்தம் திருத்தமா, அந்தப் பெண் மீதான திறமையின் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொல்லி இருக்கலாம் இல்லையா??

    விவாதத்துல யார் என்ன பேசுறாங்கன்னே தெரியாதுங்க மாப்பு... சில நேரங்கள்ல மனசுல ஒன்னு நினைப்போம்... வாயில சொல்றது வேற மாதிரி விழும்.... வேகமாவும், உள்ளக்குமுறல், உணர்ச்சிவசம்ன்னி நிறைய சூழல்ல இது போல நடப்பது உண்டு....

    அவரே ஒரு வாய் வளத்தான் பேர்வழி.... நடிகர் ந்டிகைகள் பேட்டி, இந்த மாதிரி பிரசங்கிகள் பேசுறது எல்லாம் கணக்குலயே வைக்கப்படாது சரியா??

    போங்க, போயி நல்லா மோர் ஒரு போத்தல் அடிச்சு...குளுமைக்கு வாங்க மாப்பு.....

    நான் அந்தப் படம் பாக்குறப்பவே அவங்களைப் பத்தி தெரியும்.... she is simply GREAT!!!

    ReplyDelete
  7. நானும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். எரிச்சலும்,ஆத்திரமும் வந்தது.

    ReplyDelete
  8. //வானம்பாடிகள் said...
    அவர் காதோரம் வெச்சிருக்கிற மைக் ஹெட்ஃபோன்ல பின்னாடில இருந்து ஒரு பரதேசி கேள்வி சொல்லும்னு எங்கயோ படிச்சேன்.
    //

    சாரு சார் சொன்னதாப் படிச்சீங்களா பாலாண்ணே? முடியலை பாலாண்ணே, முடியலை!!

    ReplyDelete
  9. நாகாக்க- கோபிநாத்

    ReplyDelete
  10. யாகாவராயினும் நாகாக்க..... இனியாவது விஷத் துளிகள் கோபிநாத் நாவில் இருந்து தெறிக்காமல் இருக்கட்டும்.

    ...... அவர் அதை கடைப்பிடிப்பார் என்று "எந்த நம்பிக்கையில்" சொல்லி இருக்கீங்க? :-(

    ReplyDelete
  11. //Chitra said...
    யாகாவராயினும் நாகாக்க..... இனியாவது விஷத் துளிகள் கோபிநாத் நாவில் இருந்து தெறிக்காமல் இருக்கட்டும்.

    ...... அவர் அதை கடைப்பிடிப்பார் என்று "எந்த நம்பிக்கையில்" சொல்லி இருக்கீங்க? :-(//

    கடவுள் மேல பாரத்தப் போட்டுதான் ஹி ஹி

    ReplyDelete
  12. நிச்சயமாய் சுட்டிகாட்டவேண்டிய கருத்துதான் அண்ணே...அம்மா அடிக்கடி சொல்லுவாங்க...''நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...''

    ReplyDelete
  13. நானும் பார்த்தேன்.
    சந்தோஷமான நேரத்திலும் கலங்க வைத்தது அந்தக் கேள்வி.

    ReplyDelete
  14. மைக் கைல கிடைச்சிட்டா எது வேணும்னாலும் பேசலாம்கிறது தமிழ்நாட்டோட தேசிய வியாதி...

    ReplyDelete
  15. கோபிநாத்-க்கு வாய் கொஞ்சமல்ல, ரொம்பவே நீளம்..

    ReplyDelete
  16. //யாகாவராயினும் நாகாக்க.....//

    நானும் உங்களை வழிமொழிகிறேன்....

    அபிநயாவிற்கு என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. // கலகலப்ரியா said...
    ||அதை நீக்காமல் ஒளிபரப்பிய விஜய் தொலைக்காட்சிக்கும் கண்டனங்கள்||

    எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க...

    சசிகுமாருக்கு எதிர்த்து ஒரு கேள்வி கேக்கத் தெரியாதா... என்ன .......... கேள்வி கேக்கறீங்கன்னு.//

    என் சந்தேகமும் அதுதான்?

    ReplyDelete
  18. உண்மைதான் அண்ணா
    நீங்கள் சொல்வது

    சும்மா மைக்கை பிடித்து பிடித்து கேள்விகள் கேட்டு பித்துபிடித்துவிட்டது கோபிநாத்துக்கு அதுதான் இப்படியெல்லாம்

    ReplyDelete
  19. கதிர்...

    இந்தக்கோபம் மிக மிக நியாயமானது.
    பாலாண்ணா சொன்ன தகவல் கூடுதல் அதிர்ச்சியாயிருக்கு.

    அபிநயாவை வாழ்த்துவோம்.

    ReplyDelete
  20. மனதில் பட்டவுடன் அபிநயாவிற்கு ஆதரவாக எழுத தோன்றியதே, கதிர் தங்களுக்கு அபியின் சார்பில் நன்றி

    ReplyDelete
  21. அது நாக்கா இல்லை கொடுக்கா?

    ReplyDelete
  22. தான் என்ற எண்ணம் தலைக்கேறி விட்டது போல கோபிநாத்துக்கு. இவரைப் போன்றவர்களுக்காகத் தான் வள்ளுவரின் "அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்" குர்ல்.

    ReplyDelete
  23. நீயா நானா நிகழ்ச்சியிலும் இப்படித்தான் இருக்கும் பல சமயங்களில் அவரது கேள்விகளும் ஸ்டேட்மெண்டுகளும்.

    அபிநயாவைப் பாராட்டுவோம்.

    ReplyDelete
  24. இயந்திரமாய் கேள்விகள் மட்டுமே கேட்க மட்டுமே தேரிந்தவர்களுக்கு இதயத்தின் வலி தேரியாது.
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  25. வாய் இருந்தால் என்ன வேண்டும் நாளும் பேசலாம் என்று நினைபவர்கள் இங்கு அதிகம் அதில் கோபியும் ஒருவர் .,.

    ReplyDelete
  26. மிக சரியாக சொன்னீர்கள். பிறரிடம் கேள்விகள் மட்டுமே கேட்டு பழகிவிட்டதால் வந்த ஒரு வித வியாதி தான் இது.நீயா நானா நிகழ்ச்சியிலும் பல சமயங்களில் இதே போல பேசி விடுகிறார்.தமிழ் தொலைகாட்சிகளில் வரும் தொகுப்பாளர்களில் அவர் சற்று பரவாயில்லை ரகம்.இருந்தாலும் சமயத்தில் இது போன்ற கேள்விகள் impulsive ஆக கேட்டு விடுகிறார். இதை புரிந்து கொண்டு அவரும் தன்னை திருத்தி கொள்ள உங்கள் பதிவு பயன்படும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  27. யாகாவராயினும் நாகாக்க.....!

    ReplyDelete
  28. சொல்லி இருக்கணும் 'உங்களுக்கு எந்த நம்பிக்கைல சான்ஸ் கொடுதாங்களோ அதே நம்பிக்கைல தான்னு.'
    உடல் ஊனம் ஊனமன்று!ஆனால் இது...

    ReplyDelete
  29. மனித நேயம் மனசுல வரணும்ங்க ..
    நல்ல இடுகை


    வாழ்த்துக்கள் சார் தமிழ் மாநாட்டில பேசறத்துக்கு.

    ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு

    ReplyDelete
  30. எப்போதும் யோசித்துப் பேச வேண்டும் என்பது உண்மைதான்.. சொல்லிய வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாதுதானே..

    ReplyDelete
  31. நீயா நானா நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, இதுவும் ஒரு நாடகம் என்ற எண்ணமே வருகிறது.

    சரியாகப் பேச வேண்டும், சரியான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

    இங்கே கோபிநாத் கேட்ட கேள்வியும் தவறு. சசிகுமார், "அவர் திறமையின் மீதான நம்பிக்கையில்" என்ற பதிலளித்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  32. பொது மேடையில் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவது எப்போதுமே சிரமம்தான்.

    கோபிநாத், வேண்டுமென்றே அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  33. //ஓ மை காட்.. இந்த கோபிநாத்துக்கு அறிவு கம்மின்னு அப்பவே நெனச்சேன்.. வேற வேலை ஏதாவது இருந்தா பார்க்கலாம்ல..//

    அதாங்க இது!!

    ReplyDelete
  34. இந்த யெழவெல்லாம் பாக்குறதுக்கு பதிலா கம்முன்னு போர்வைய இழுத்துப்போத்திகிட்டு தூங்கிடலாம்...

    முன்னமே கோபிநாத்தின் நாற்ற வாயினைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  35. இந்த மாதிரி ஆளுங்கல்லாம் எப்பத்தான் திருந்துவாங்கலோ?

    ReplyDelete
  36. மேற்கத்திய உலகத்துல handicappedங்ற சொல்லைப் புழக்கத்துல இருந்து ஒழிச்சிட்டு, physically challengedங்ற
    சொல்(மெய்ப்புல அறைகூவலர்) வந்து ரொம்ப நாள் ஆச்சுது.... என்ன காரணம்? எவ்வகையிலும் அனுதாபம் என்பது ஒருவருடைய துணிவை, நம்பிக்கையைக் குறைத்து விடக்கூடாது அப்படிங்றதுதான்....

    இங்க படிச்ச எங்க பாப்பா கூட, எதிர்மறையான கேள்வியில
    double double அடிப்பா... அதைக் கோட்டை விட்ட அவர்தான் வெட்கப்படணும்....

    இந்த வெட்டி நிகழ்ச்சி நடத்துறவங்க பேச்சுல பெரும்பாலான நேரம் எந்தவிதமான தருக்கமும் இருக்காது... நாம எப்படி மொக்கை
    போடுறோமோ அது போல....இதுவும் ஒரு பக்கம் இருக்கு.

    by all means.... no western girl or boy would encourage this kind of post.... and I am
    surprised to see such a tremendous support here...

    I am sorry dear... this shows that
    east and west are still divided deeply...stays apart...we all should be accountable for it! We are to adopt so many bad things very easily from western culture....not the appropriate and needy one....

    I would strongly feel that Gopinath might have asked such question in very good sense in this situtation.... however I would agree that editing could have taken care of this as it turned out to be other way :-0(

    ReplyDelete
  37. கதிர் அவர்களுக்கு,

    இப்பொழுது இருகிற சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில்
    கோபினாத்தும் ஒருவர்.
    மிக நன்றாகவே தொகுத்து வழங்கினார்.
    புகழ் பெற்றவர்களைமட்டுமே அதிகம் பாராட்டி விழா நிகழ்ச்சிகளை
    வெறுப்பேற்றும் பல தொகுப்பாளர்களுக்கு மத்தியில், திறமையான அதே சமயம் வெளியே தெரியாத பல‌
    சாதனையாளர்களை கோபினாத் மிகச்சிறப்பாக மேடையில் பாராட்டி சிறப்பு செய்தார்.

    பழமை பேசி அவர்கள் சொன்ன மாதிரி அந்த கேள்வியை தவறான எண்னத்தில் கேட்டிருக்கமாட்டார் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    மறத்தமிழன்.

    ReplyDelete
  38. வருத்தமாயிருக்கிறது

    உண்மையில் வருத்தம் தெரிவிக்க வேண்டியவர் கோபிநாத்

    ReplyDelete
  39. நல்ல பகிர்வு. நானும் அந்த நிகழ்ச்சியைக் தற்செயலாக கண்டேன். என் மனதிலும் பட்டது இந்த எண்ணம். அந்தப்பெண்ணுக்குதான் எத்தனை கான்பிடெண்ட். அதை அசிங்கப்படுத்துவது போல இருந்தது அந்தக்கேள்வி. ஊவ்வ்வ்.. என்று தன் உற்சாகத்தை, மகிழ்ச்சியை அபிநயா வெளிப்படுத்தியது அழகு.

    ReplyDelete
  40. அதோடு இன்னொரு விஷயம். பழைய கட்டுப்பெட்டிகளும், இசைக்கலைஞர்களும் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கும் 'கடவுளருள்', 'கடவுள் ஆசீர்வாதம்', 'கடவுள் மேல் பாரம்', 'கடவுளுக்கு நன்றி' இதையே இந்த புதிய கும்பலும் கூவுவது கடுப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  41. நானும் பார்த்தேன். இதையே நினைத்தேன்.

    சசிகுமார் பதிலும் அவ்வளவு நிறைவாக இல்லை. திறமை மிக்கவள் அந்தப் பெண் என்று சொல்லாமல், கடவுள் மேல் பாரத்தை என்று சொல்லியதும் தவறு மாதிரி தெரிந்தது. கேள்வியே கேவலமான ஒன்று என்ற போது, பதிலைப் பற்றி யோசிக்க ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  42. கோபிநாத்...! கேள்விகள் ஞாபகத்திற்கு வரவில்லையென்றால் சும்மா மூடிக்கொண்டு இருங்கள் கோபிநாத்!

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. கோபிநாத்தின் கேள்வி எரிச்சலூட்டியது என்னவோ உண்மைதான், அந்த மேடையில் கோபியின் பின்புல அறிவில் நல்ல எண்ணம் இருந்திருந்தாலும் சபையில் செவி கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் வார்த்தைகள்தான் சென்று சேருமேயன்றி கோபியின் எண்ணம் போய் சேராது.

    சாதாரணமாய் எல்லோருக்குள்ளும் இந்த கேள்வி எழும் என்பது அவரவரின் மனசாட்சியோடு அவரவர் நடத்தும் பாஷைக் கச்சேரியில் அவர் அவருக்கே தெரியும்..... கோபியின் வார்த்தை பிரோயகிக்கப்பட களமும் சூழ் நிலையும் பொறுத்தமில்லாதது ....கோபி இந்த நிகழ்விற்கு பின் என்ன செய்தார் என்பது நாம் அறியாத ஒன்று. இதற்கான எனது கண்டனங்களையும் கதிரோரு பகிரும் அதே நேரத்தில்....


    கோபினாத் என்பவர் ஒரு சிறந்த பேச்சாளர், சிந்தனை வாதி....தங்கு தடையின்று சரளமாய் முன்னிறுக்கும் கூட்டத்தை மெய் மறந்து கேட்கச் செய்பவர்....! துபாயில் பல நூறு மக்கள் அமர்ந்திருந்த ஒரு பொது திறந்த மக்கள் அரங்கத்தில் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டது... அதில் கலந்து கொண்டவன் என்ற முறையில் எனக்கும் கோபியோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது......

    தங்கு தடையின்றி சீராய்.. சுமார் 1 மணி நேரம் அவர் நிகழ்த்திய உரையை நள்ளிரவு 1 மணி தாண்டியும் மக்களை கட்டிப்போட்டு உட்காரவைத்த அவருடைய கருத்து செறிந்த சொற்பழிவு அவரின் அறிவு திறனுக்கு ஒரு சான்று....... இது.... நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேருக்கும் தெரியும்.

    சில சறுக்கல்கள் எல்லோருக்கும் ஏற்படும்...கோபிக்கும் ஏற்பட்டது.....! சரியாக அந்த சறுக்கலை சரி செய்யுமாறு கண்டனம் செய்வது பாராட்டுதலுக்குரியது.

    மொத்தமாய் அந்த மனிதரின் சரிதத்தில் களங்கம் கற்பிப்பது ஒரு சரியான ஒரு வழிமுறை அல்ல...அது வேறு ஒரு கலாச்சாரத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும் அபாயம் உள்ளது என்பது எனது அபிப்ராயம்.

    ReplyDelete
  45. //அடுத்த படத்திற்கு அதே பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளார். இந்த நிலையில் கோபிநாத் கேட்ட ”எந்த நம்பிக்கையில்” என்ற கேள்விக்கு யார் என்ன பதில் சொன்னால், கோபிநாத்திற்கு நம்பிக்கைக்கான நியாயம் கிடைக்கும்./

    எனக்கு கோபிநாத்தை ஓங்கி அறையணும் போல இருந்தது

    ReplyDelete
  46. திரு கதிர் அவர்களுக்கு,
    முதல் என் மாற்றுக் கருத்தும், இந்த இடுகைக்கு 100 சதவிகித எதிர்ப்பும்...

    ஏன் எழுத வந்தவுடம் மட்டும் எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் மாற்று சிந்தனை என்ற பெயரில் சிந்தனைகள் மற்றும் அல்லாது என்னங்களும் இல்லாமலேயே போகிறது?

    யாரவது சண்டையிடாத எழுத்தாளர்கள் இங்கு இருக்கிறார்களா?? எதைப்பற்றியாவது நெகடிவ்வாக எழுதாத சொல்லாதவர்கள் இருக்கிறார்களா??? நாளொரு சண்டையும் பொழுதொரு மாற்றுக்(கின்ற) கருத்துமாய்..

    அதையே அப்படியே ஈயடிச்சான் காப்பி போல இங்கு வலைத்தளத்தில் எழுதுபவர்களும் ஏன் தொடருகிறீர்கள்..

    எந்த விசயமானாலும் எதிர்ப்பதம் மட்டுமே தங்களனைவரது முன்னாலும் தெரிகிறது.. அதை மட்டுமே எழுதவேண்டும் என்று எண்ண தோன்றுகிறது??

    உங்களலவில் இது நாள் வரை நான் படித்தது எல்லாம் சமமாய் இருந்தது என்றே இன்று வரை படித்து வருகிறேன்.. ஆனால் தங்களின் இந்த இடுகையும், ஒரு விபத்து குறித்த இடுகையும், ஏனோ அவ்வாறு என்னால் உங்கள் நடு நிலையை எடுத்துகொள்ள முடியவில்லை..

    ஒருவர் ஒரு கேள்வியை - தெரிந்தோ தெரியாமலோ கேட்ட - இரண்டு வரிகளை இருபது வரிகளாக்கி ஒரு பதிவையும் இட்டு.. அதற்கு இவ்வளவு பேரும் உங்கள் எழுத்தை ஆதரிப்பதாய் கோபியை திட்டி எழுதியும்... !! முடியவில்லை...


    நீங்கள் எழுதியதிலிருந்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்..

    சசிகுமார் இந்த பதிலலித்திருந்தால் ..

    “அவரின் நடிப்பிலும் அதை ஆதரித்த, ஆதரிக்கும் ரசிகர்களிடமும்” நம்பிக்கை வைத்து என்று கூறி இருந்தால்? இந்த கேள்வி அபியை மிகவும் உயர்த்தியிருக்கும் தானே??


    அதே போல் சசி குமார் சொன்னதிலும் என்ன தப்பு இருக்கிறது? கடவுள் நம்பிக்கையை தைரியமாக மேடையில் சொன்னால் உங்களுக்கும் பிடிக்கவில்லையா? ஒன்னு கடவுளை நம்பக்கூடாது.. இல்லாவிட்டால் இந்து மதமாக இருக்கக்கூடாது? இது தான் உங்கள் பின் நவீன தத்துவமா??

    கதிர் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது உங்கள் சிந்தனைகளையே.. மற்றவர்களின் கருத்தைக் குறை கூறி எழுதவேண்டிய நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்..??? வேண்டாம் இந்த தற்கால தமிழ் எழுத்தாளர்கள் பானி ..

    நீங்கள் நீங்களாகவே உங்களுக்கானவைகளையே ஒரு பாசிடிவான தன்னம்பிக்கை தருபவைகளாக இருக்கும் பதிவுகளையே இனி படைப்பீர்கள்
    என நம்புகிறேன்..

    வளைத்தளத்தில் வெறும் மொக்கைகள் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?? ஒரு வேளை அதற்க்கு உங்களுக்கு ஆமாம் சாமியும் + வாக்களிக்கும் பாலோவர்ஸ்க்காகவா?

    ஊரே லஞ்சத்தில் மிதக்கும் பொழுது உங்கள் கலெக்டரின் பதிவு எவ்வாறு அனைவரின் மனதில் இருந்ததோ .. அதையே இனிவரும் உங்கள் பதிவுகள் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  47. கோபிநாத்தின் கேள்விகளில் எந்தத் தவறும் இருப்பதாகப் படவில்லையே!

    வேறு ஏதாவது உருப்படியாய் யோசிக்கவும்.

    ReplyDelete
  48. கேள்வி என்பதே தொழிலாக வைத்திருக்கார் கோபி,
    சரி ஏன் சசிகுமாரால் அவர் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என சொல்ல முடியவில்லை!
    சசிக்குமாருக்கு அவரது திறமையை விட அவரது மாற்றுதிறனை விளம்பரமாக பயன்படுத்தி கொள்வதில் தான் நாட்டம் அதிகம் போல!

    கோபிநாத் எதிரின்னா, சசிக்குமார் துரோகி!

    ReplyDelete
  49. கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

    @@ பழமை

    //I would strongly feel that Gopinath might have asked such question in very good sense in this situtation.... //

    அன்பு... மாப்பு

    இது விவாத மேடையில் நடக்கவில்லை என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்

    இன்னும் சில நாட்களில் அந்த விழாவின் காணொளி இணையத்தில் வரலாம் என நினைக்கிறேன், அதைப் பார்க்கும் போது என் வருத்தத்தின் உள்ளடக்கம் புரியும்.


    @@ திங்கள் சத்யா
    || வேறு ஏதாவது உருப்படியாய் யோசிக்கவும். ||

    மதிப்பிற்குரிய திங்கள் சத்யா..

    உங்களுக்கு கோபிநாத்தின் கேள்வியில் குறை தென்படவில்லை என்பது குறித்து எந்த வருத்தமும் இல்லை...

    எப்படி உருப்படியாய் யோசிப்ப்து என்று திட்டம் ஏதேனும் இருப்பின் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவ பணிவோடு வேண்டுகிறேன்..

    ReplyDelete
  50. மாப்பு,

    உங்கள் வருத்தம் புரிகிறது. இங்கு எப்போதுமே, தூக்கலான ஒரு எதிர்மறைக் கேள்வியை வைத்துத்தான் கெளரவிக்கப்படுபவரின் சிறப்பைக் வெளிக்கொணரும் யுக்தி....

    உலக அழகிப் போட்டியாகட்டும், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகட்டும், எதுவாகட்டும்.... இப்படித்தான் ஓரிரு கேள்விகளை வைப்பார்கள். அதற்கான உகந்த விடை வெளிப்படும் போது அரங்கமே அதிரும்....

    அந்தப் பின்னணியில் மேலை நாட்டு மரபுகளை தமிழ்ப்படுத்தும் போதும், இந்தியப்படுத்தும் போதும் இப்படியும் நடந்து விடுகிறது.

    சசி அவர்கள் திறமான விடை அளிக்கும் போது, மூவருக்குமே அது சிறப்பாக அமைந்திருக்கும்.

    இங்கே இது பற்றிய விழிப்புணர்வு துவக்கப்பள்ளியிலேயே கற்பிக்கப்படுகிறது என்பதும் உண்மை. முகுந்த் அம்மா அவர்கள் ஒரு இடுகை இட்டு இருந்தார்கள். விபரம் பின்னர் தருகிறேன்.

    எது எப்படி இருப்பினும், உணர்ச்சி வயப்படும்போது நீங்கள் இடுகை இடாதீர்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்கவும், நேரமின்மை காரணமாக விபரமாக எழுத இயலவில்லை இப்போதைக்கு.

    ReplyDelete
  51. @@ Rithu`s Dad

    மதிப்பிற்குரிய நண்பருக்கு
    நன்றிகளும்... வணக்கங்களும்...


    தெரிந்தோ தெரியாமல் கேட்ட வரியாகத் தெரியவில்லை...
    தன் குறையை நிறையாக மாற்றி சாதித்த ஒருவரை (அபிநயா), அதற்கு உதவியவரை, மேலும் பெரிதும் நம்பிக்கை கொண்டு அடுத்த படத்தில் கதாநாயகி என உயர்த்திவரைப் பார்த்து எந்த நம்பிக்கையில் என்ற கேள்வியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் நண்பரே...

    மிகப் பெரிய நம்பிக்கை வைத்துதானே சசிக்குமார் அவரை கதாநாயகியாக்கியுள்ளார், அண்டஹ் இடத்தில் ”எந்த நம்பிக்கையில்” என்ற கேள்வி அந்தப் பெண்ணின் குறைபாட்டை நினைவு கூர்வதாகத்தானே அமைகிறது


    சசிக்குமார் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு என்று சொன்ன பதிலை நான் ஒரு போதும் குறை சொல்லவில்லை...

    கோபி அந்தக் கேள்வியைக்கேட்ட போது சசிக்குமார் அதிர்ந்தது உண்மை. ஒருகணம் திடுக்கிட்டு தாழ்ந்த குரலில் இந்த பதிலைச் சொன்னார்... என்னுடைய எண்ணப்படி சசிக்குமார் அந்தப் பெண்ணின் திறமை மேல் மதிப்பு வைத்தே அந்த வாய்ப்பை அடுத்த படத்தில் தந்திருக்க வேண்டும்.

    கோபிநாத்தை தனிப்பட்ட முறையில் குறை சொல்ல வேண்டிய எந்த நிர்பந்தமும் எனக்கு இதுவரை ஏற்படவில்லை என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். பிடித்தால் ரசிப்பதும், பிடிக்காமல் போனால் ஒதுங்குவதும் என் இயல்பு... இதில் கோபம் வரக் காரணம் கோபியின் அந்த அர்த்ததில் ஒளிந்திருந்த வக்கிரம்..

    ஒரு வேளை அந்தப் பெண்ணுக்கு காது கேட்கும் திறனிருந்து மேடையில் அது அவர் காதில் விழுந்திருந்தால், அந்தப் பெண்ணின் மனது நொறுங்கிப்போயிருக்காதா?

    என்மேல் கொண்டிருக்கும் உங்கள் நியாயமான எதிர்பார்ப்பிற்கு நன்றி...

    நன்றி தோழரே

    ReplyDelete
  52. //உணர்ச்சி வயப்படும்போது நீங்கள் இடுகை இடாதீர்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். //

    கடையை சாத்துன்னு சொல்லாம சொல்றிங்களா தல!

    ReplyDelete
  53. @@ பழமை
    ||எது எப்படி இருப்பினும், உணர்ச்சி வயப்படும்போது நீங்கள் இடுகை இடாதீர்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்கவும், நேரமின்மை காரணமாக விபரமாக எழுத இயலவில்லை இப்போதைக்கு.||

    மாப்பு, அன்பிற்கு மிக்க நன்றி

    இது குறித்து நேரம் கிடைக்கும் போது பேசுவோம்

    நன்றி

    ReplyDelete
  54. //என்னுடைய எண்ணப்படி சசிக்குமார் அந்தப் பெண்ணின் திறமை மேல் மதிப்பு வைத்தே அந்த வாய்ப்பை அடுத்த படத்தில் தந்திருக்க வேண்டும்.//


    விஜயை வைத்து படமெடுப்பவர்களெல்லாம் விஜயின் திறமையை நம்பி தான் படம் எடுக்கிறார்கள் என சொல்விங்க போல, ஒரு படத்தில் விளம்பரம் வந்துட்டா அடுத்த படத்துக்கு அதையே பயன்படுத்திறது தான் சினிமா! எனக்கு சசிக்குமாரின் மேல் நம்பிக்கை இல்லை, அவ்வளவு நாள் உடனிருந்து பணியாற்றியவர் எப்படி கடவுள் மேல் பாரத்தை போட்டு என சொல்லலாம்!

    அதே கடவுள் மேல் பாரத்தை போட்டு உங்களை கதாநாயனாக்கி ஒரு படம் எடுப்பாரா சசி!

    ReplyDelete
  55. @@ வால்பையன்
    || கடையை சாத்துன்னு சொல்லாம சொல்றிங்களா தல! ||

    காலையில் இருந்தே வால் செம ஃபார்ம்ல இருக்கிற மாதிரி தெரியுதே...


    || அதே கடவுள் மேல் பாரத்தை போட்டு உங்களை கதாநாயனாக்கி ஒரு படம் எடுப்பாரா சசி!||

    இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஏற்கனவே தலை மைதானமாயிடுச்சு

    அதுதான் ஊரே யூத்துனு ஒத்துகலைல... அப்புறம் என்ன கதாநாயகான், சாதாநாயகன்னு சொல்லிட்டு...

    போங்க போய்... நந்துவ / கார்த்திய / பாலாசிய / ராஜாவ மோட்டிவேட் பண்ணுங்க..


    (இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால், வால் என்ன சொன்னாலும், சொல்ல வந்தாலும் அதுக்கு இன்னிக்கு மாட்டும் நான் சரண்டர்..... )

    ReplyDelete
  56. விஷம் சிந்துவது கோபிநாத்தின் நாக்கு மட்டுமல்ல; விஜய் டி.வி.-யின் நிகழ்ச்சிகளே அப்படித்தான் இருக்கும். கூர்ந்து பாருங்கள் புரியும்.

    ReplyDelete
  57. //சிகுமார், "அவர் திறமையின் மீதான நம்பிக்கையில்" என்ற பதிலளித்திருக்கவேண்டும்.\\

    //என்மேல் கொண்டிருக்கும் உங்கள் நியாயமான எதிர்பார்ப்பிற்கு நன்றி..\\

    ReplyDelete
  58. கொடுஞ்சொல்...

    மாற்றுத்திறனாளிகள் மீது கொண்டிருக்கும் ஏளன வக்கிரத்ததை எடுத்துரைக்கும் பாணியில் இருக்கிறது அவர் கேள்வி...

    ReplyDelete
  59. நிச்சயமாக தப்புதான்.
    சாருநிவேதிதாக்கூட அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  60. சசிக் குமார் தன் பதிலால் அந்த கேள்வியை முனை மளுங்க செய்திருக்கலாம்..

    ReplyDelete
  61. சில சறுக்கல்கள் எல்லோருக்கும் ஏற்படும்...கோபிக்கும் ஏற்பட்டது.....! சரியாக அந்த சறுக்கலை சரி செய்யுமாறு கண்டனம் செய்வது பாராட்டுதலுக்குரியது.

    மொத்தமாய் அந்த மனிதரின் சரிதத்தில் களங்கம் கற்பிப்பது ஒரு சரியான ஒரு வழிமுறை அல்ல...அது வேறு ஒரு கலாச்சாரத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும் அபாயம் உள்ளது என்பது எனது அபிப்ராயம்.

    ReplyDelete
  62. க‌மிரா வெளிச்ச‌த்தில், த‌ன்பிம்ப‌ம் அதிக‌ம் க‌ண்ட‌ பின்
    அன‌வ‌ரும் உருவ‌கிக்கும் 'ஒளிவ‌ட்ட‌ம்'.
    அத‌னால் த‌ன் ஐம்ப‌து ப‌ட‌ம் நடித்த‌வுட‌ன்
    முத‌ல்வ‌ர் க‌ன‌வு, முத‌‌ல்வ‌ருக்கோ ராஜா க‌ன‌வு.
    க‌ண்ணாடியில் த‌ன்பிம்ப‌ம் க‌ண்ட‌தும் நாமே
    கொஞ்ச‌ம் இளித்துக் கொள்ளும் போது,
    கோபி, ஸ்டார் டீவியில் ஒரும‌ணி நேர‌ம்
    க‌லாய்த்து க‌ல‌ந்துரையாடுவ‌தாலும், விக‌டனில்,
    மூன்று ப‌க்க‌ம் எழதும், எஸ்ராவுக்கு ப‌ட‌மில்லை,
    ஒன்ற‌ரைப் ப‌க்க‌ம் எழுதும் இவ‌ருக்கு மினிம‌ம் கியார‌ண்டி
    அரைப்ப‌க்க‌ போஸ்ட‌ர் எனில் அது அதிக‌ம் இருக்கும்தானே! இவ‌ர்க‌ளின் அங்கீகார‌த்திற்காக‌
    ஏன், ச‌முத்திர‌க‌னி போன்ற‌வ‌ர்க‌ள் போகிறீர்க‌ள்?

    ReplyDelete
  63. 'எந்த நம்பிக்கையில்' என்பதான கேள்வியை மற்றொரு கோணத்தில் கூட பார்க்கலாமே. அபிநயாவின் திறமையை அங்கு எல்லோருக்கும் தெரியும் விதமாக பாராட்டி சசிக்குமார் பேச வேண்டுமென்கிற நோக்கத்தில் கூட அந்த கேள்வியை கோபிநாத் கேட்டிருக்கலாம் இல்லையா...? எனகென்னவோ அப்படித் தான் பட்டது. நீங்கள் சொன்ன நோக்கத்தில் கோபிநாத் அந்த கேள்வியை கேட்டிருந்தாரென்றால் நிச்சயமாக எனது கண்டனங்களும்.. ஆனால் எனக்கென்னவோ நீங்கள் எடுத்துக் கொண்ட நோக்கத்தில் அப்படி அவர் கேட்டிருப்பார் என்று தோன்றவில்லை. சில நேரங்களில் பாராட்டுகளையும் ஒருவருடைய வியக்கத்தகு ஆற்றல்களையும் பற்றி மற்றவர்களை பேச வைப்பதற்காக கேள்விகளை உபயோகிப்பதென்பது ஒரு அணுகுமுறை. அப்படியே நான் அதை பார்க்கிறேன். கோபிநாத் அப்படி அழுத்தமாக அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம் அழுத்தமான அங்கீகரிக்க கூடிய ஒரு பதில் சசிக்குமாரிடம் இருந்து வரும் என்பதை எதிர்பார்த்து தான். அதனால் அரங்கம் இன்னும் கைத்தட்டல்களால் அதிரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். எல்லாவற்றிற்குமே மாறுபட்ட கோணங்கள் என்று ஒன்று உண்டு..

    என்னை கேட்டால் சசிக்குமார் தான் குழப்பி விட்டார். "ம்ம்.. கடவுள் மேல் பாரத்தை போட்டு..." என்பதான சசிக்குமாரின் பதில் தான் உண்மையில் அந்த பெண் மனதை புண்படுத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது. உண்மையில் சசிக்குமாருடைய பதில், "இந்த நம்பிக்கையில் தான்.." என்று அபிநயாவினுடைய விருதை கைக் காட்டி கூறியிருக்க வேண்டும். 'இவ்வளவு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி அங்கீகாரம் பெற்றிருக்கிறாரே, இந்த நம்பிக்கையில் தான்' என்பதாகவே சசிக்குமாரின் பதில் இருந்திருக்க வேண்டுமேயொழிய 'கடவுள் மேல் பாரத்தை போட்டு' என்பதாக அல்ல.


    நான் கோபிநாத்தை ஆதரித்து இங்கு பேசவில்லை. நிச்சயமாக நானொன்றும் அவரது விசிறியல்ல. உங்கள் பதிவை படித்த போது எனக்குள் எழுந்த எண்ணங்களை இங்கு எழுதுகிறேன். மீண்டும் சொல்கிறேன்.. நீங்கள் சொன்ன நோக்கத்தில் கோபிநாத் அந்த கேள்வியை கேட்டிருந்தாரென்றால் நிச்சயமாக எனது கடுமையான கண்டனங்கள்.

    ReplyDelete
  64. @ பால்

    முற்றிலுமாக வழிமொழிகிறேன்!

    சசிக்குமாரிடம் தான் தெளிவு இல்லை என்பதே என் கருத்து!

    ReplyDelete
  65. > கோபிநாத், வேண்டுமென்றே அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார் என்று
    > நம்புகிறேன்.

    > by all means.... no western girl or boy would encourage this kind of
    > post.... and I am
    > surprised to see such a tremendous support here...
    >
    > I am sorry dear... this shows that
    > east and west are still divided deeply...stays apart...we all should be
    > accountable for it! We are to adopt so many bad things very easily from
    > western culture....not the appropriate and needy one....
    >
    > I would strongly feel that Gopinath might have asked such question in very
    > good sense in this situtation....


    -------------------------------------------------------

    I agree with this ...

    ReplyDelete
  66. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொது எனக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்த பொது
    பெருமையாக இருந்தது.. ஆனால் என் அம்மா சமையலறையில் இருந்து சொன்ன
    வார்த்தைகள் என் மனதை ஆழமாகப் பாதித்தது..

    அதாவது, அந்தப் பெண் அழகாக இருந்த ஒரு காரணம் மட்டுமே அந்த இயக்குனர்களை
    ஈர்த்திருக்கிறது.. நாட்டில் எத்தனையோ கண் தெரியாத, வாய் பேச முடியாத,
    காது கேளாதோர் இருந்திருக்கிறார்கள். இந்தப் பெண் திரையில் நடிக்க பூரண
    தகுதியுள்ள அழகான பெண்.. காது கேளாத காரணத்தினால், வார்த்தையை எப்படி
    உச்சரிப்பது என்பது அவருக்கு தெரியாது. உதடு அசைவைக் கற்றுக் கொள்ளும்
    திறன் படைத்தவள். எனவே, எந்த உதவி இயக்குனருக்கும் மிகுந்த சிரமம்
    இருந்திருக்காது. எனவே, ஒருவரின் திறமையை அவர்கள் உபயோகப்
    படுத்தியுள்ளார்கள். இதனால், அந்த இயக்குனர் ஒன்றும் கடவுளும் இல்லை.
    அந்த அளவுக்கு அவர்கள் உழைக்கவும் இல்லை. காந்திபுரம் நகர பேருந்து
    நிலையம் முன் சாமிப் படம் வரைந்து யாசகம் பெரும் அந்த ஊனப்பட்ட சிறுவனின்
    திறமையை வெளிக்கொணர யாரும் இல்லை. சன் தொலைக்காட்சியில் வெளிக்கொணரப்
    பட்ட பின், இவர்கள், அந்தப் பெண்ணை உபயோகப் படுத்திக் கொண்டனர். மேடை
    என்றால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுகிறார்கள். ஊனத்தை பெரிது
    படுத்திப் பேசி,பேசி , மேலும் மேலும் அவர்களை ஊனப் படுத்தி விடுவது,
    நாங்கள் அவர்களுக்கு எப்போதும் ஒருபடி மேல், என்ற செருக்கையே
    வெளிக்காட்டி இருக்கிறது. கோபிநாத்தைப் பற்றி கருத்து சொல்ல ஒன்றும்
    இல்லை. எல்லாம் விஜய் டிவியின் செயல். சிறிய குழந்தைகள் ஆடும் ஆட்டத்தைக்
    கூட எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்..


    இரண்டாவது அந்தப் பெண்ணின் அப்பா....
    அதாவது, இந்தப் பெண்ணுக்கு ஒரு முக்கிய மருத்துவத் தேவைக்காக உதவி தேவைப்
    பட்ட பொது, அதை கண்டு அந்தப் பெண்ணுக்கு உதவ அவளை சன் டிவிக்கு அழைத்து
    வந்து அந்தப் பெண்ணின் திறமையை உலகிற்கு உணர்த்தியவர் "ராகவேந்திரா
    லாரன்ஸ்"... அப்போது அவரின் அப்பா கண்ணில் நீர் வழிய நன்றி
    தெரிவித்தார்..

    இந்த மேடையில் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு மேல், அந்தப் பெண்ணுக்கு
    உதவிய, நன்றியை எதிர்பாராத ஒரு நல்ல உள்ளத்தைப் பற்றி அந்த மேடையில் ஒரு
    வார்த்தையாவது சொல்லி இருந்தால், அவர் நன்றி மறவாதவர் என்று சொல்லலாம்..
    அவர் ஒரு வார்த்தை கூட சொல்லாதது கூட பரவா இல்லை... அனால் தன மகளின்
    வளர்ச்சிக்கு காரணமே அவர்கள் மூன்று பேர் தான் என்று மேடையில்
    இருப்பவர்களைக் கை காட்டியது எனக்கும் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது...
    அடுத்த படம் வெளிவந்ததும், சமுத்திரக் கனியை மறந்து விடாமல்
    இருக்கட்டும்...

    அமாம் நான் ஒன்று கேட்கிறேன், சினிமா, பாட்டு, இவை மட்டும் தான் கலையா..?
    மற்ற கலைகளின் வித்தகர்களுக்கு யாருக்கும் இப்படிப் பட்ட புகழும்
    விருதுகளும், பல வருடங்கள் உழைத்த பின்னும் கூட கிட்டுவதில்லையே..
    ஏன்....? கலை மாமணி கூட மற்ற கலைக் கலைஞர்களுக்கு கிடைப்பது குதிரைக்
    கொம்பே...

    அந்தப் பெண்ணின் திறமையை மற்ற கலைஞர்களைப் போன்றே மதிப்போம்... அவரின்
    குறையை ஒவ்வொரு முறையும் குத்திக் காட்டி, அவர்களைப் பாராட்டுவது அவர்களை
    அவமதிப்பதே ஆகும்..

    நன்றி..

    ReplyDelete
  67. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி, உங்களது எண்ணங்களை நான் மிகவும் ஆதரிக்கிறேன். அந்த நிகழ்ச்சியை பார்த்த போது இத்தகைய எண்ணங்கள் எனக்குள்ளும் எழுந்தன. மிகவும் உண்மை.

    குறிப்பாக, அபிநயாவோ அல்லது அவரது தந்தையோ 'ராகவேந்திரா லாரன்ஸ்'ஐ பற்றி அங்கே ஒரு வார்த்தையாவது கூறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். உங்கள் மனதிலெழுந்த அதே வருத்தம் எனக்குள்ளும் எழுந்தது. உங்கள் அம்மா சொன்ன வார்த்தைகளில் உண்மை இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது.

    ReplyDelete
  68. முதலில் இந்த இடுகைக்கு நன்றி சொல்லி விடுகிறேன் கதிர் உங்களுக்கு
    நானும் உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்

    வாய் பேச முடியும் என்பதால் எதையாவது பேசி விடுவதா

    அந்த பேச்சுத்திறன் இல்லாமல் சாதனை படைத்திருக்கும் அபிநயா பாராட்டுக்குரியவர் வாழ்த்துதலுக்கு உரியவர்
    சமுத்திர கனி ,சசிகுமார் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  69. சிலபேர் இப்படித்தான் ,அடுத்தவர் மனதை ஈட்டி கொண்டு தாக்குவது போல் பேசுவதில் ஒரு வக்கிரமான உக்கிரமான சந்தோஷம் காணுவர்

    ReplyDelete
  70. பழமைபேசி, பால்

    கருத்துக்களை வழிமொழிகிறேன்.

    கோபிநாத்தின் கேள்வியில் எனக்கு தவறு தெரியவில்லை. சசிகுமாரின் பதில் தான் தவறு.

    அபிநயாவின் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  71. பார்க்காதவர்களுக்கு சுட்டி இதோ

    http://www.youtube.com/watch?v=F0vHsj0Y4pw&feature=related

    ReplyDelete
  72. Gopinath made every1 to stand and salute her. He never spoke anything like, may bcoz of luck she got it. You are pulling one line out of context and trying to make a story out of it.

    I have read many of your posts and have liked it also. But this one is totally wrong.

    First time, negative vote. Sorry about that and sorry about typing this in Tamil.

    ReplyDelete
  73. அப்படி கேட்டிருக்ககூடாது தான்...சொல்லின் அர்த்தம் சொல்லில் அல்ல..இடத்தில் என்பது மிகவும் பொருந்திவிட்டது இங்கு...ஆனால் கண்ட்ப்பாக கோபியின் நோக்கம் அபிநயாவை இழிவுபடுத்துவதற்க்காக இருந்திருக்கமுடியாது என்றே தோன்றுகிறது....ஆனால் விஜய் டிவி எடிட் பண்ணியிருந்திருக்கலாம்......

    ReplyDelete

இது படிச்சீங்களா?