Monday, 9 August 2010

புத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை


               கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன்

முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே). 

புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். 

எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
 
உரை நிகழ்த்தும் திரு. சகாயம்



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை

நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.

அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.

பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.

தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.

குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.





31 comments:

  1. // மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.//

    எங்களுக்கும்.

    நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. பகிர்விற்கு மிக்க நன்றிங்க கதிர்.

    ReplyDelete
  3. நல்ல விஷயம்... மீண்டும் சகாயம்... :D

    ReplyDelete
  4. சகாயம் எப்போதும் பிரமிக்க வைக்கிறார். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல விஷயம்... மீண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம்...

    திரு.சகாயம் எப்போதும் பிரமிக்க வைக்கிறார்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ||சே.குமார் said...

    நல்ல விஷயம்... மீண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம்...

    திரு.சகாயம் எப்போதும் பிரமிக்க வைக்கிறார்.

    பகிர்வுக்கு நன்றி.||

    ஸ்ஸ்ஸபா.... பின்னூட்டத்தையாவது சொந்தமா எழுதுங்களேன்பா சாமிங்களா... ஒரிஜினாலிட்டி ஒரிஜினாலிட்டின்னு தலைப்பாடா அடிச்சுக்கிறாய்ங்களே... அது என்னன்னாவது பாருங்களேன்... அவ்வ்வ்... அவ்வ்வ்வ்... முடில.... அழுவாச்சியா வருதுங்கோ...

    ReplyDelete
  7. நல்ல அனுபவம் வாய்க்கப்பெற்றது. இப்புத்தகத்திருவிழாவிற்கு நேற்று வருகைபுரிந்த பதிவர்கள் கார்த்திகைப்பாண்டியன், மதுரை சரவணன், முரளிக்குமார் பத்மநாபன் மற்றும் சு.சிவக்குமார் ஆகியோருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  8. //நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.//

    ஸ்வீட் ஸ்டால் போலியை கூட உடனடியாக தடை செய்ய வேண்டும் .....

    ReplyDelete
  9. வலைப்பதிவு மிளிர்கிறது கதிர்......

    ReplyDelete
  10. நல்ல பகிர்வுங்க. புகைப்படம் எல்லாம் நன்றாக உள்ளது.நன்றி.

    ReplyDelete
  11. பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  12. கலக்கல்ஸ்

    புத்தகத்திருவிழா

    +

    பிரபல பதிவர்களின் சந்திப்பு

    திருவிழாவும்

    ReplyDelete
  13. ஆட்சியர் சகாயம் குறித்து தொடர்ந்து அறியப்பெறும் தகவல்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தவண்ணம் உள்ளது. விழா மேடையினருகே இருந்த வேண்டுகோள் பலகை மனதிற்கு இதம்.

    பாலாஜி உட்பட நண்பர்களின் புகைப்படம் பார்த்ததில் பரம சந்தோசம். அவருக்கு அலைபேச இன்னமும் நேரம் கைகூட வில்லை .... எப்போதெல்லாம் பாலாசி அவர்களின் தளத்திற்கு செல்கிறேனோ அப்போதெல்லாம் இங்கு வந்துவிட்ட மழையை நினைத்துக் கொண்டே அவரை புகைப்படத்தில் ரசித்துக் கொண்டிருந்தேன் ... இப்போதும் பெய்ய ஆரம்பித்துவிட்டது வல்லத்தில் மழை...

    பகிர்வுக்கு நன்றி தோழர் ...

    ReplyDelete
  14. நல்லவை தொடரட்டும் கதிர்!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. அரசு அதிகாரி நேர்மையை இருப்பது மாபெரும் விஷயம் .இயற்கை அல்லது கடவுள், அவருக்கு பலமான பாதுகாப்பை
    தரட்டும்.

    ReplyDelete
  16. அருமையான கவனிப்புக்கு நன்றி தல.. நேரமின்மை காரணமாக சகாயம் அவர்களின் பேச்சை கேட்க முடியாமல் போனது.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  17. பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  18. சகாயம் அவர்கள் ஒருவராவது எல்லோராலும் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கிறாரே எனச் சந்தோசப் பட்டுக் கொள்ளவேண்டியது தான். அருமையான உரை .. பதிவுலக மக்களை புகைப்படத்தில் கண்டதும் மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
  19. அன்பின் கதிர்

    நல்லதொரு நிகழ்ச்சியினை விவரித்த விதம் நன்று. ஆனாலும் ஆட்சியரைப் பற்றி திரும்பத் திரும்ப ஒரே செய்திகள் தானே வருகின்றன. பல முறை படித்த நினைவில்லையா ......

    ம்ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள் கதிர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  21. கதிர், ஊரில் தான் இருக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு நாள் முன்பு சென்றிருந்தேன் (ஞானி, சுந்தர ஆவுடையப்பன்). சகாயம் பேசும் நாள் அன்று மீண்டும் வரத் திட்டமிட்டிருந்தேன். முடியவில்லை. உங்கள் இடுகையைப் படித்ததில் நிறைவு.

    ReplyDelete
  22. சகாயம் போன்றவர்கள் நாட்டில் சகாயமானால் நன்றாயிருக்குமே.

    ReplyDelete
  23. அன்று புத்தக திருவிழாவிற்கு நானும் வந்திருந்தேன். திரு.விஜயன் நீங்கள் குறிப்பிட்டதுபோல் சில தவறு செய்திருந்தாலும், சே குவேரா,பகத் சிங், உத்தம் சிங், காந்தி, ஜீவா ஆகியோர் பற்றி சொன்னவை அருமை.

    இங்குள்ள எதாவது ஒரு புத்தகம் உங்கள் வாழ்கையை மற்றும் என்று விஜயன் சொன்னதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு.மருதனின் தமிழாக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தின் சே குவேரா - வேண்டும் விடுதலை என்ற புத்தகமே சே மேல் எனக்கு ஈடுபாட்டையும் போராடவேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டியது.

    திரு.சகாயம் அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி... அவர் வழி நிற்போம்...அவருக்கு ஏதேனும் இடையுறு ஏற்பட்டால் அவருக்காக குரல் கொடுப்போம்.

    சே வியர்...

    ReplyDelete
  24. கட்டுரை வலிமையாக இருக்கிறது.

    அன்று கா.பா என்னை அழைத்திருந்தார். ஆனால் முன்தினமே நான் கண்காட்சிக்குச் சென்று வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் சந்திக்காமல் விட்டேன்.

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  25. நல்ல விசயங்களை பதிவின் முலம் கொண்டு வருவது நன்று....பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  26. எனக்கும் ஆச்சரியம் தான் ... சீருடை அணிந்த அத்தனை குழந்தைக்களும் விடுமுறை நாளில் புத்த்கத்திருவிழாவில் இப்படி புத்தகம் வாங்கும் போது , ஆசிரியனாகிய என் பார்வையில் பழமை பேசிகளாக திரியும் ஆசிரியர்கள் தங்களை புதிப்பிக்க தவறினால் வெளியேற்றப்படுவது உறுதி... வாசிப்பு நேசிப்பாக மாணவர் பருவத்தில் விதைப்பது அருமை. அதற்கு முயற்சி எடுத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ( பல பள்ளி வேன்கள் வந்ததை பார்க்கும் போது மதுரை இன்னும் மாறவேண்டும்... )

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி கதிர்.

    மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி கதிர்.

    மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete

இது படிச்சீங்களா?