Thursday, 14 October 2010

நீர்த்துப்போகும் சுயம்


அவசியமில்லாத போதும் கூட வன்முறையை பிரயோகிக்கும் இனம் மனித இனமாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆறாவது அறிவு என்று மனிதன் சொல்லிக்கொள்வதின் நீட்சியோ? எந்தவொரு மிருகமும் தன் பசிக்கும், பாதுகாப்பிற்கும் தவிர்த்து சக விலங்குகளையோ, மனித இனத்தையோ தாக்குவதோ, கொல்வதோ இல்லையென்றே சொல்லலாம்.

மனிதன் மட்டுமே, தனக்கு ஆறு அறிவு இருப்பதாக (“மனிதன் மட்டும்தான் தனக்கு ஆறு அறிவு என்று சொல்லிக்கொள்கிறான், இது வரை அதை ஒரு நாய் கூட அங்கீகரித்ததில்லை” என பாரதிகிருஷ்ணகுமார் மேடைகளில் சொல்வதுதான் நினைவுக்கு வருகின்றது) தானே சொல்லிக்கொண்டு, அதுவும் அதை பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு தொடர்ந்து தொடர்ந்து சக மனிதனுக்கும், மற்ற விலங்குகளுக்கும் கொடுத்து வரும் தொல்லைகள் பட்டியிலிட்டாலும் அடங்காது.

ஏதேதோ காரணங்களைச் அடுக்கடுக்காய்ச் சொல்லி, விதவிதமாய் விலங்குகளை வைத்து விளையாடும் வக்கிரங்களின் தொடர்ச்சியில், பரிதாபமாக இருப்பது பிரமாண்டமான தோற்றமும், எதையும் விட வலிமையும் கொண்ட யானைகள் தலை தடவி தன் முதலாளிக்காக காசு கேட்கும் யானைகளை பார்க்கும்போதுதான்.


பரந்த காடுகளில் சுதந்திரமாய்ச் சுற்றி திரியவேண்டியவை, குறுகிய பரப்புக்குள் அடங்கிய கொட்டிலிலேயே தீனி தின்று, அங்கேயே சாணி, மூத்திரம் கழித்து, எல்லாச் சுதந்திரத்தையும் முழுக்க முழுக்க இழந்து, குட்டியானையாக இருக்கும் போது தன்னைக் கட்டிப்போட்டதன் மூலம் அடிமைப்படுத்திய சங்கிலிக்கு, இன்றும் மனதிற்குள் பயந்து, ஒவ்வொரு அசைவுக்காவும் அங்குசத்தால் குத்துவாங்கி, யாரோ விழி விரியப் பார்த்து கைகொட்டிச் சிரிக்க, எவனோ தன் வயிற்றையும், குடும்பத்தையும் வளர்க்க பிச்சையெடுப்பதைக் காணும் போது, எல்லாம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை.



தனக்கு சற்றும் பழக்கமில்லாத நகர்ப்புறத்துக் கோவில்களில், இடைவிடாது காதுகளை ஆட்டிக்கொண்டும், விதவிதமாய் அலங்கரிக்கப்பட்டும், ஒற்றைக் காலின் பருமன் கூட இல்லாத பாகனின் அங்குசத்திற்கு அடிமை போல் நின்றிருக்கும் அவலம், அதுவும் கடவுளின் உருவமாக நினைக்கும் நம்பிக்கையுள்ளவர்களே, அதை அதனதன் இடத்தில் இயற்கையாய், சுதந்திரமாக விட்டுவைக்க மனமில்லாத முரண்பட்ட முட்டாள்தனத்தின் பிம்பமாக தெரிவதை கசப்போடு மனம் உள்வாங்குவதை தவிர்க்க முடிவதில்லை.

சாலைகளில் மெதுவாக அசைந்த அசைந்து மணியோடு போகும் யானைகளை ஒரு காலத்தில் ரசித்து வேடிக்கை பார்த்ததுண்டு. அழகாய் ஆடும் சின்ன வாலை தொட்டுப்பார்க்கவும், இறுகிக்கிடக்கும் யானைத்தோலை தீண்டி உணர்ந்து  பார்க்கவும் விரும்பியதுண்டு. வயது கரைந்து போன நிலையில், எங்காவது கோவில்களில், சாலைகளில், ஆடம்பர விழாக்களில் யானைகளைக் காணும் போதெல்லாம், ரசிப்பதைக் காட்டிலும், ” ம்ம்ம்ம்.... எங்கே, எப்படியிருக்க வேண்டியவை” என்ற பரிதாபத்தோடு, வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் சூழ்ந்து கிடக்கும் அமைதி சுமக்கும் இருள் போல் மனதிற்குள் இருள் கவ்வத் தொடங்குவதை உணராமலில்லை.

காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், இதுதான் மிருக குணம் எனப் பட்டியலிட்ட குணங்களை தனக்குள்ளே துளித்துளியாய் சேமித்து, அதை மழுங்கடிக்கப்பட்ட மிருங்களின் மீது பிரயோகிப்பதில் வெற்றியும் ஈட்டுவதின் பின்னணியில் நீர்த்துப்போகும் சுயம் குறித்து மனிதனுக்கு துளியும் அக்கரையில்லை. 

சாலைகளில் மதம் பிடித்த யானை நடத்தும் ருத்ரதாண்டவம் திணிக்கும் பயத்தையும், காடுகளில் தன் உறவை பிரிந்த, தொலைத்த ஒற்றை யானையின் கடுங்குரல் ஊட்டும் வலியையும் ஒருமுறை உணர்ந்து விட்டால், யானைகளை யானைகளாவே விட்டுவைக்கும் பக்குவம் மனிதனுக்குள் துளிர்க்கத் தொடங்கிவிடும்.
________________


30 comments:

  1. யானைப் படங்கள் நன்றி - பதிவர் ராமலட்சுமி, பதிவர் க.பாலாசி

    ReplyDelete
  2. நல்ல கருத்து.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. உங்களுடைய எழுத்து நடை மிகவும் மெருகேரிக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. காட்டு விலங்குகளை தங்கள் நாட்டில் கொண்டு வந்து வளர்த்தால் பிரச்சினைகள் ஏற்படவே செய்யும்..

    அதனதன் இயல்பில் மனிதன் தானும் வாழ்வதில்லை, மற்றவைகளையும் வாழவிடுவதில்லை ...

    ReplyDelete
  5. அவரவர், அவரவர் இடத்துல இருந்துட்டா எல்லாம் செளக்கியமே....

    காடே காணமப் போகுது.... அதுக என்ன செய்யும் பாவம்??

    //அக்கரையில்லை//

    அக்கறை

    ReplyDelete
  6. //ஒற்றைக் காலின் பருமன் கூட இல்லாத பாகனின் அங்குசத்திற்கு அடிமை//


    //பிச்சையெடுப்பதைக் காணும் போது, எல்லாம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை//

    --- நானும் இதை உணர்ந்திருக்கிறேன்...

    ReplyDelete
  7. காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், இதுதான் மிருக குணம் எனப் பட்டியலிட்ட குணங்களை தனக்குள்ளே துளித்துளியாய் சேமித்து, அதை மழுங்கடிக்கப்பட்ட மிருங்களின் மீது பிரயோகிப்பதில் வெற்றியும் ஈட்டுவதின் பின்னணியில் நீர்த்துப்போகும் சுயம் குறித்து மனிதனுக்கு துளியும் அக்கரையில்லை.

    .......உண்மை. இதை பலர் உணர்ந்து கொள்வதில்லை. :-(

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு

    எங்கள் வீட்டின் முன் வரும் அந்த ஜீவனை பற்றி அடிக்கடி நினைப்பேன்.

    ஆறாவது அறிவில் எந்த புண்ணியமும் இல்லை என்பது தான் உண்மை தான்.

    ReplyDelete
  9. அருமையான எழுத்து. விரைவில் வெளிச்சம் கிடைக்கட்டும் உலகில்.

    ReplyDelete
  10. //கடவுளின் உருவமாக நினைக்கும் நம்பிக்கையுள்ளவர்களே, அதை அதனதன் இடத்தில் இயற்கையாய், சுதந்திரமாக விட்டுவைக்க மனமில்லாத முரண்பட்ட முட்டாள்தனத்தின் பிம்பமாக தெரிவதை கசப்போடு மனம் உள்வாங்குவதை தவிர்க்க முடிவதில்லை.//

    மிகச் சரி.

    தொடர்புடையதான இன்னொரு இடுகை இதே நாளில்.. மைசூர் தசராவின் போது யானைகள் படும் பாடு:
    http://shylajan.blogspot.com/2010/10/blog-post_14.html

    ReplyDelete
  11. காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், ..


    .உண்மை. இதை பலர் உணர்ந்து கொள்வதில்லை..

    ReplyDelete
  12. யானை மட்டுமல்ல தல, ஒரு இடத்தில் குதிரையை கட்டி போட்டிருந்தாங்க, சில வீடுகளில் புறாவை கூண்டுக்குள் அடைச்சி வச்சிருக்காங்க. குளத்தில், கடலில் ஜாலியாக திரிய வேண்டிய மீன்களை சின்ன தொட்டிக்குள் அடைச்சு உயிரை வாங்குறாங்க!

    அதையும் நீங்க தான் கேட்கனும், ஏன்னா தமிழ்நாடே உங்களை நம்பியிருக்கு!

    இப்படிக்கு
    ஜெயாடீவி புகழ்,
    ஈரோட்டு மனிதருள் மாணிக்கும்,
    வந்தொருக்கு கூட்டு பொறியல் வாங்கி தராமல் முட்டை பரொட்டா வாங்கி தரும் வள்ளல், அண்ணன் கதிர் நற்பணி மன்றம்

    சூரம்பட்டி கிளை
    தலைவர் ஆருரன்
    செயலாளர் பாலாஜி
    பொருளாலர் கார்திக்
    ஆபிஸ்பாய் வால்பையன்

    ReplyDelete
  13. வாயில்லாத ஒரே காரணத்தால் பூமியில் நமக்கு சம அந்தஸ்து உள்ள விலங்குகளை தின்னும் மனிதர்கள் இந்த பெரிய சீவனை விட்டு வைத்தார்களே அதுவே மிக பெரிய உத்தம காரியம்.

    ReplyDelete
  14. //வால்பையன் said...
    யானை மட்டுமல்ல தல, ஒரு இடத்தில் குதிரையை கட்டி போட்டிருந்தாங்க, சில வீடுகளில் புறாவை கூண்டுக்குள் அடைச்சி வச்சிருக்காங்க. குளத்தில், கடலில் ஜாலியாக திரிய வேண்டிய மீன்களை சின்ன தொட்டிக்குள் அடைச்சு உயிரை வாங்குறாங்க!

    அதையும் நீங்க தான் கேட்கனும், ஏன்னா தமிழ்நாடே உங்களை நம்பியிருக்கு!

    இப்படிக்கு
    ஜெயாடீவி புகழ்,
    ஈரோட்டு மனிதருள் மாணிக்கும்,
    வந்தொருக்கு கூட்டு பொறியல் வாங்கி தராமல் முட்டை பரொட்டா வாங்கி தரும் வள்ளல், அண்ணன் கதிர் நற்பணி மன்றம்

    சூரம்பட்டி கிளை
    தலைவர் ஆருரன்
    செயலாளர் பாலாஜி
    பொருளாலர் கார்திக்
    ஆபிஸ்பாய் வால்பையன்
    //
    என்னை இந்த லிஸ்டில் சேர்க்காதற்கு வன்மையாய் வாலை கண்டிக்கிறேன். பதில் சொல்லுங்க கதிர்...

    பிரபாகர்...

    ReplyDelete
  15. வாஸ்தவந்தான். அதே மாதிரி, ஆடு, கோழி, மாடு எல்லாம் கூட பாவம். :(

    ReplyDelete
  16. //ஆடு, கோழி, மாடு எல்லாம் கூட பாவம்.//

    நாங்கக்கூடத்தான் பாவம், ஆனா யாரு எங்களுக்காக கேக்குற

    என்ன ஒரு விலங்காதிக்க சமூகம் இது, மனிதனுக்கு மரியாதையே இல்லை இங்கே!

    ReplyDelete
  17. ஆபிஸ் பாய் கூட ஒரு விதத்தில் கொத்தடிமை தான் அருண். ;)

    ReplyDelete
  18. அருமையான் பதிவு.

    போயும் போயும் என்னப் போயி சங்கலியிலே கட்டி வெச்சிருக்கானுங்க. ஆனா இந்த மனுசங்க பண்ற அட்டூளியத்தப் பார்த்தா,
    எனக்கு நானே சங்கலி போட்டுக்க வேண்டியது தான்.

    நானே இவங்களுக்கு சோறு போட்டு காப்பாத்துவேன். காப்பாத்திட்டு இருக்கேன். ஆனா இவங்க எனக்கு சோறு போட்டு காப்பாத்தற மாதிரி ஒரு பில்ட் அப். என் கால்ல சங்கலியாம், இவனுக்குப் போட்டு வுட்டுர்க்கிற சங்கிலி தெரியாம!

    எங்கிட்டுப் போய் சிரிக்கிறது!

    ReplyDelete
  19. Its highly disgusting to see even huge animals had fallen in prey to man's arrogance ..and ya its true that the human claim to be six sensed, but in proper does he have a proper sense?..any ways a good article
    And kathir now a days the beggars in the signals had increased in Erode so better spread awareness about that too...

    ReplyDelete
  20. இங்கே மனிதர்கள்தான் வக்கிர மிருகமாக வாழ்கிறார்கள்.மிருகங்கள் அதனதன் இயல்பிலேயே வாழ்கின்றன்.

    நந்தா@வால்பையன் ///யானை மட்டுமல்ல தல, ஒரு இடத்தில் குதிரையை கட்டி போட்டிருந்தாங்க, சில வீடுகளில் புறாவை கூண்டுக்குள் அடைச்சி வச்சிருக்காங்க. குளத்தில், கடலில் ஜாலியாக திரிய வேண்டிய மீன்களை சின்ன தொட்டிக்குள் அடைச்சு உயிரை வாங்குறாங்க!

    அதையும் நீங்க தான் கேட்கனும், ஏன்னா தமிழ்நாடே உங்களை நம்பியிருக்கு!

    இப்படிக்கு
    ஜெயாடீவி புகழ்,
    ஈரோட்டு மனிதருள் மாணிக்கும்,
    வந்தொருக்கு கூட்டு பொறியல் வாங்கி தராமல் முட்டை பரொட்டா வாங்கி தரும் வள்ளல், அண்ணன் கதிர் நற்பணி மன்றம்

    சூரம்பட்டி கிளை
    தலைவர் ஆருரன்
    செயலாளர் பாலாஜி
    பொருளாலர் கார்திக்
    ஆபிஸ்பாய் வால்பையன்///
    தல நம்மளுக்கும் ஒரு போஸ்டிங் வாங்கி குடுங்க.நாங்களும் பம்பராம பணியாற்றுவோம் தல!!!!

    ReplyDelete
  21. Miga arumai Kathir. Arravadhu arivu irrupadhanal dhaan neengal ivvaru yosikka mudinthathu illaya.

    ReplyDelete
  22. வழக்கம் போல் கதிரின் டச் . இந்த முறை விலங்குகளுக்காக .

    ReplyDelete
  23. அருமையான இடுகை கதிர். மிகவும் தேவையான ஒன்று.

    காட்டிலிருந்து யானைகளைப் பிடித்து வைத்து செய்யும் கொடுமை ஒரு புறம் என்றால், காட்டுக்குள்ளேயே சென்று துன்புறுத்துவது அடுத்த விதம்..

    காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டது, குழிக்குள் விழுந்தது என்றெல்லாம் கேட்கும் பொழுது நம் மீது கோபம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  24. //
    காலம் காலமாய் தன் சுயத்தை இழந்து கொண்டேயிருக்கும் மனித சமூகம், இதுதான் மிருக குணம் எனப் பட்டியலிட்ட குணங்களை தனக்குள்ளே துளித்துளியாய் சேமித்து, அதை மழுங்கடிக்கப்பட்ட மிருங்களின் மீது பிரயோகிப்பதில் வெற்றியும் ஈட்டுவதின் பின்னணியில் நீர்த்துப்போகும் சுயம் குறித்து மனிதனுக்கு துளியும் அக்கரையில்லை.
    //

    ம்ம்! தலைப்பே ஆயிரம் சொல்லுது!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. முதல் ரெண்டு பாராவுக்கே உங்களை சூரம்பட்டி முதல்வர் ஆக்கிடலாம்... :-)

    ReplyDelete
  26. என்னத்தைச் சொல்லுறது? உண்மை தான்.. இது போல நிறைய உறுத்தல்கள் உண்டு..

    //வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் சூழ்ந்து கிடக்கும் அமைதி சுமக்கும் இருள் போல் மனதிற்குள் இருள் கவ்வத் தொடங்குவதை உணராமலில்லை..//

    அருமையான உதாரணம்..

    //ஒற்றைக் காலின் பருமன் கூட இல்லாத பாகனின் அங்குசத்திற்கு அடிமை போல் நின்றிருக்கும் அவலம்//

    வலி உருவாக்கும் வரி..

    இது கூட பரவாயில்ல.. உணவுக்குன்னே உயிர்கள உற்பத்தி பண்ணி, கூண்டுல ரொம்ப நெருக்கமா அடைச்சு வச்சு, தீனிய மட்டும் திங்கக் கொடுத்து, சீக்கிரமா வளரதுக்கு ஊக்கமாத்திரையும் கொடுத்து.. ஹூம்.. :(( அதையும் வாங்கித் தின்னுகிட்டுத் தான் இருக்கிறம்..

    ReplyDelete
  27. கண்ணீ ர் கசிய வைத்த எழுத்து. உங்களின் சீவகாருண்யப் பார்வை. மனிதனிடமில்லாத மனிதம் பேசிய விதம். அருமை. அருமை நண்பரே. உலகில் அதனதன் போக்கில் அதை வாழ விட மனித மடையர்களுக்கு ஏனோ மனம் இல்லை. அதனால் அவன் மனிதாய் இல்லை. நல்ல பகிர்வுக்கு நன்றி. வந்து போங்கள். ( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  28. (“மனிதன் மட்டும்தான் தனக்கு ஆறு அறிவு என்று சொல்லிக்கொள்கிறான், இது வரை அதை ஒரு நாய் கூட அங்கீகரித்ததில்லை” என பாரதிகிருஷ்ணகுமார் )
    அருமை அருமை ....
    விலங்கினும் கீழாய் நடப்பவன்.
    தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் வார்த்தை.

    ReplyDelete
  29. ஒவ்வொரு முறையும் கோயில்களில் யானையை பார்க்கும் போதெல்லாம் மனதை உறுத்தும் விஷயம்....நல்ல பதிவு அண்ணா....

    அதுவும் சங்கிலியின் பிணைப்பால் ஏற்பட்ட ரத்த காயத்துடன் அவைகளை நிற்க வைத்து சில்லரைகளுக்காக துன்புறுத்துவது சகிக்க முடியாத ஒன்று...

    ReplyDelete
  30. எல்லாம் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை.
    பரமசிவன் கழுத்துப் பாம்பாக யானைகளைச் சீண்டாமல் அவற்றைக் காடுகளில் விட வேண்டும்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?