Friday, 8 October 2010

வண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்

தண்ணீரைப் போல் தெளிவானது, சுவையானது, சுகமானது ஏதேனும் உண்டா?. குழந்தைப் பருவத்தில் திணிக்கப்பட்டவை இரண்டு, ஒன்று ”தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்திடும்” மற்றொன்று ”தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!”

ஏதேனும் மரணச் செய்திகளை கேட்கும் போது, உடனே கேட்பது ”இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறமுடியுமா?” அதற்கு ஈடாகா பெறப்படும் பதில், “இல்லீங்க, கேன்சர்ங்க”. அடுத்தடுத்து கேட்கப்படும் மரணச் செய்திகளில், மரணத்திற்கான காரணமாக காட்டப்படுவது புற்றுநோய்.

தற்சமயம் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வட்டத்தில் பெரியப்பா, அத்தை, சின்ன பாட்டி என்பது போன்ற உறவுகளில் புற்று நோயால் மரணத்தை எதிர்நோக்கி வலியோடு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆறு.

ஒரு காலத்தில் புற்று நோய் என்பது ஒட்டு மொத்த உறவுகளில் யாரோ ஒருவருக்கு இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் நமக்குத் தெரிந்தவர் யாரேனும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது “அட… ப்ச்…” என்று கடந்து போகுமளவிற்கு மிகச் சாதாரணமாக விரவிக் கிடக்கிறது.

அதுவும் ஈரோடு பகுதிகளில் புற்று நோய் ஆழ வேரூன்றுவதற்கு முக்கியக் காரணம் விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?
 

தண்ணீர் மாசுக்கெதிராக கண்ணா மூச்சியாடும் அரசாங்கம், எந்த விதத்திலும் சாமானியர்களின் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் சிந்திப்பதாக இல்லை. பவானி, ஈரோடு, பெருந்துறை, சிப்காட், ஊத்துக்குளி, திருப்பூர் இன்ன பிற சுற்று வட்டாரங்களெங்கும் சாயப்பட்டறைகள் துணிகளை வெளுத்து வெளுத்து, வேதிப்பொருட்களை அள்ளிக் கொட்டி, சாயமேற்றிக் கொண்டேயிருக்கின்றன. தங்கள் லாபத்தை அரிக்கும், சுத்திகரிப்பு பணிகளைச் செயல்படுத்த வாய்ப்பின்றி(!), மனமின்றி, போகிற போக்கில் சாயப்பட்டறை முதலாளிகளால் திறந்து விடப்படும் நீர், பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, நொய்யல் ஆறு என எல்லா நீர்த்தடங்களையும் வண்ணம் மாற்றி, விஷமேற்றிக் கொண்டேயிருக்கிறது.

சாயப்பட்டறைகள் தங்கள் தேவைக்கென தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டுகிறது. அதில் தண்ணீர் வந்தால் சந்தோசம், ஒரு வேளை தண்ணீர் வரவில்லை என்றாலும் கவலையில்லை, வெளியேற்ற வேண்டிய சாயக் கழிவு நீரை, தண்ணீர் இல்லாத வெற்று ஆழ்துளைக் கிணறுகளில் பாய்ச்சி விடுகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளில் தஞ்சம் புகுந்த விஷநீர் மண்ணுக்குள் சிலந்திவலையாய் கிடக்கும் நீர்த்தடங்களில் முப்பது, நாற்பது மைல் தூரம் கூட பயணித்து, கிணறுகளிலோ அல்லது மற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இருக்கும் தண்ணீரோடு கலந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.




உதாரணத்திற்கு, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாயப்பட்டறைகளை அனுமதித்த பிறகு, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளின் தண்ணீர், தன் சுயத்தை இழந்து உவர்ப்புத்தன்மை மிகுந்துவிட்டது. நீரின் உண்மையான சுவை, தன்மை, குணம் என எல்லாம் தொலைந்து போய், முழுக்க முழுக்க நச்சுத் தன்மை கூடிக்கொண்டே வருகிறது. இது பற்றிய விழிப்புணர்வேதுமின்றி நமது நாட்கள் வழக்கம் போல், நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளடங்கிய கிராமங்களை விடுத்து, பெரும்பாலான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது, காசு போட்டு வாங்கும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாதாரத்திலேயே பெரும்பாலானோர் இருக்கும் நிலையில், சமையல் செய்ய கிணற்றுத் தண்ணீர் அல்லது குழாய்கள் வழியே வரும் ஆற்று நீரை மட்டுமே பயன்படுத்துகின்றோம். என்னதான் கொதிக்க வைத்தாலும் நீரில் கலந்த விஷம் பிரிந்துவிடவா போகின்றது. உணவகங்களில், விருந்துகளில், திருமணங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இதேதான் நடக்கும்.

அடுத்து, இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன் படுத்தும் பொது, தானியங்கள், காய்கறிகளில் விஷம் சென்று தங்குவதை தடுக்க முடியாது. சாயப்பட்டறை கழிவு நீர் பாயும் விவசாயப் பகுதிகளில் வளரும் தென்னை மரங்கள் தரும் இளநீர் சுவையற்று, சில சமயம் நிறம் மாறி, துர்வாசனையோடு விளைவதை தவிர்க்க முடிவதில்லை.



புற்று நோய், மலட்டுத் தன்மை, குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி, தொடர்ந்து வரும் புதிய புதிய நோய்களின் பின்னணியில், புரிந்தும் புரியாத பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் மிக முக்கியக் காரணமாக இருப்பவை, இயற்கை அள்ளிக்கொடுத்த நீரை, பேராசையின் பொருட்டு,  மாசடைந்த, வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீராக மாற்றிய பாவமும் என்பதை மறுப்பதற்கில்லை.


தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!? எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உடம்பில் வெளியில் தெரியும் நோய்களை வண்ணம் நிறைந்த உடைகள் போட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து வேண்டுமானால் மறைக்கலாம், உள்ளுக்குள் நாமே உருவாக்கிய, நோய் கொடுக்கும் வலியை, அதன் தொடர்ச்சியாய் வரும் இழப்பை எதைக் கொண்டு மறைக்க முடியும்.

_________________________

28 comments:

  1. வலியான விசயங்களை வலிமையோடு பகிர்ந்திருக்கிறீர்கள். நிதர்சன உண்மைகள்....பகிர்வுக்கு நன்றிங்க கதிர்

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு கதிர்.

    "தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!?"

    சாயப் பட்டறை கழிவு மட்டுமல்ல, chemical பாக்டரி கழிவுகளும் அப்படியே ஆற்றிலே கலக்கப் படுது. ரோட்லே நடக்கும் போதே வாசனை தெரியும். அங்க வேலை செய்யறவங்களுக்கும் இதே கான்செர் தான்.

    ReplyDelete
  3. நிச்சயம் ஏதேனும் செய்ய வேண்டும்....

    ReplyDelete
  4. //தண்ணீரைப் பழிக்காதே என்று சொல்லிக் கொடுத்த வளர்ப்பு, தண்ணீரைச் சீரழிக்காதே என்று சொல்ல மறந்து போனதோ!?//

    சுளீர் என்றிருக்கிறது. விழிக்க வேண்டும் விரைவில் நாம்.

    நல்ல இடுகை.

    ReplyDelete
  5. மற்றுமொரு சிறப்பான பதிவு கதிர்.

    இதையெல்லாம் வயிறு வளர்க்கும் முதலாளிகளும், அரசியல்வாதிகளும் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. \\எதையோ நோக்கிய பேராசையில், எல்லாவற்றையும் உதறித் தள்ளுகின்றோம், உதறித் தள்ளியதை இழப்பு எனப் புரியும் பொறுமையின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.\\
    யதார்த்தம்.

    ReplyDelete
  7. சமுதாயம் பாழானாலும் தாங்கள் நன்றாக இருந்தால்போது என எண்ணி மாசுபடுத்தி வாழும் அற்ப ஜந்துக்கள்..., அதற்கு துணைபோகும் அரசாங்கம்!...

    எங்கள் பகுதிகளில்(ஆத்தூர்) மரவள்ளிக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடிந்து கெட்டுக்கிடக்கிறது...புகைப்படங்கள், புகார், பத்திரிக்கை அலுவலகப் படையெடுப்புகள் என எல்லாம் செய்தும் பலன் இல்லை.

    பிரபாகர்...

    ReplyDelete
  8. கோவிச்சுகாதீங்க மாப்பு...

    அமெரிக்க வெள்ளிக்கு ஆசைப்படுறது குறையணும்!!!

    ReplyDelete
  9. மிக அவசியமான பதிவுங்க......சம்பந்தப்பட்டவங்க யோசிக்கவாவது செய்வாங்களா? பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. Super. Whenever i crossed perundurai, I felt this excellent

    ReplyDelete
  11. "கோவிச்சுகாதீங்க மாப்பு...

    அமெரிக்க வெள்ளிக்கு ஆசைப்படுறது குறையணும்!!!"

    ஏங்க! உங்களுக்கு போட்டியா வந்துடுவார்னு பயமோ!

    கதிரு! பழமை நோபெல் பரிசு கொடுக்க ரெடி ஆகிட்டு இருக்காரு. கெட்டியாப் பிடிச்சுங்குங்க.

    ReplyDelete
  12. @@Sethu

    இஃகி... Export.... Export...Exportனு மயங்கினா எப்புடீங்க?

    மனுசனுக்கு வெள்ளி வேணுமா? அப்ப, அந்த மனுசனையே புடிச்சி ஏத்தி, வெளியேத்தி, export... உங்களையும் எனையுமு இங்க கொண்டாந்து தள்ளி வுட்டமாதர தள்ளி வுடுங்கன்னு சொல்ல வந்தேன்... இஃகிஃகி....

    ...அப்பா....

    ReplyDelete
  13. ஒரு காலத்தில் சோறு விற்பவர்களை கேலி செய்து பேசுவார்களாம் நம் தமிழகத்தில், இப்போது தண்ணீரை வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்.. போகப்போக நம் சந்ததிகள் ஆக்சிஜனை வாங்கும் ..

    ReplyDelete
  14. என்ன சொல்ல கதிர்? பேட்டிக்கு பிறகு வந்த பதிவும் உங்கள் சமூக அக்கறையை காட்டுகிறது...அன்பிற்கு நன்றியும் கூட....

    ReplyDelete
  15. "இஃகி... Export.... Export...Exportனு மயங்கினா எப்புடீங்க? "

    உண்மைதாங்க. நல்ல தரம் வாய்ந்த துணிகள் அயல் நாடுகளில் இறக்குதி செய்யப் பட்டு அங்கு ரொம்ப மலிவா கிடைக்குது. ஆனா இத தயாரிக்கும் நாடுகள்ல விலையும் ஜாஸ்தி, விளைநிலமும் நாஸ்தி.

    ReplyDelete
  16. ஒன்னு யோசிச்சிங்களா பழமை. பல வளர்ந்த நாடுகள், தங்கள் விளைநிலம் மற்றும் சுற்றுச் சூழல் கெடாம இருக்க, ஆடை தயாரிப்பு, மற்றும் பழைய கப்பல் உடைப்பு வேலைகளை பின் தங்கிய நாடுகளுக்கு புத்திசாலித்தனமா தள்ளிவிடறாங்க. அதுவும் எல்லாம் குறைந்த விலையிலேயே செஞ்சுக்க முடியும்.

    ReplyDelete
  17. நல்ல இடுகை.

    வறியநாடுகளில் வாழ்வோர்தான் பலிக்கடாக்கள் :(

    ReplyDelete
  18. விஷமாய் மாறிவரும் தண்ணீர். எங்கோ இருக்கும் யாரோ உடையணிய, இங்கு இருக்கும் ஒரு சிலர் கோடிகளில் புரள, அதன் பொருட்டு தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வையே காவு கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஒன்றா இரண்டா?

    பொட்டில் அடிக்கும் உண்மை

    ReplyDelete
  19. இப்படியெல்லாம் பல வியாதிவந்தாலும் மருந்து கண்டுபுடிச்சி நமக்கு குடுத்து சோதிச்சிக்கறாங்கல்ல. ங்கொன்னியா அதயும் லேபிள் இல்லாம மாமன் மச்சான வுட்டு விக்கசொல்லி காசு அடிக்கிறானுவ. தண்ணில குதிச்சி செத்த காலம் போச்சு. குடிச்சி சாவலாம் இப்போ:(

    ReplyDelete
  20. வருத்தப்படக்கூடிய விசயம்.. சம்பந்தபட்ட ஒவ்வொருவரும் உண்ர்ந்து திருந்த வேண்டிய தருணம் இது .. நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  21. எங்கும் அழிக்கப்படுபவர்கள் வறுமைக்கோட்டுக்குள் இருப்பவர்கள்தானே !

    ReplyDelete
  22. அன்பின் கதிர்
    எனக்கு தெரிந்து வேலூர்( ஆம்பூர், வாணியம்பாடி , ராணிப்பேட்டை ) , கடலூர் , ஈரோடு , திண்டுக்கல் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. யாரேனும் ஒரு தன்னார்வல அமைப்பு இறங்கி ஆராய்தால் இதன் கடுமை தெரியும் ;( புற்றுநோயின் வலி எனக்கு கொஞ்சம் தெரியும்.கடந்த 10 அ 15 ஆண்டுகளில் மிக அதிகம். சென்னை , வேலூர் , கோவை மருத்துவமனை டேடா ஒன்றே போதும் நிலைமை அறிய.நமது மருத்துவ பதிவர்கள் இதைப்பற்றி பகிறலாம்.முன்பு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாய் சொல்லப்பட்டது இப்போதோ சுற்றுச்சூழல் கேடே முதல் காரணியாகப்படுகிறது ;(

    ReplyDelete
  23. அழுத்தம் திருத்தமான இடுகைதான்...
    ஆனா என்னத்த சொல்லி என்ன பிரையோசனம்...

    ReplyDelete
  24. நல்ல இடுகை.. என்ன சொல்றதுன்னு தெரியல.. அந்த ஊர்களில லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொழில நம்பி இருக்காங்க.. அவங்களுக்கெல்லாம் மாற்று பிழைப்பு ஏற்பாடு பண்ணிட்டு இதை நிறுத்தணும்..

    ReplyDelete
  25. பதிவைப் படித்தவுடன் பகீர் என வேதனை பற்றிக் கொண்டது.

    யாரை நொந்து கொள்வது?

    ReplyDelete
  26. இதுற்கு நான் என்ன செய்ய...என தம்பி படத்தில் கேட்ட மாதிரி கேட்க தோணுதுங்க..

    ReplyDelete
  27. உங்கள் வலி நிறைந்த பகிர்வை படிக்கும் போது மனதிற்குள் வலி ஏற்படுகின்றது... உண்மையான பகிர்வு யாருக்கு உரைக்கும்?

    ReplyDelete
  28. இன்னொரு பதிலற்ற கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். பெருமூச்சே எழுகிறது.

    ReplyDelete

இது படிச்சீங்களா?