Sunday, 14 November 2010

பூவில் வழிந்த சுடு கண்ணீர்


ஆழித்தீ எரிய ஒரு சொட்டு
நெருப்பு போதாதா?
ஒற்றை வார்த்தையில்
ஆரம்பித்தது யுத்தம்

வார்த்தைகளைத் துப்பித் தீர்த்தது
எலும்பு நரம்பில்லா நாக்கு பீரங்கி
விழுந்த வார்த்தைகள் துள்ளிக்குதித்தன
அறுபட்ட பல்லி வாலாய்

செத்து விழுந்தது
அன்புத் தளிர்கள்
எரிந்து பொசுங்கியது
இதய நரம்புக் கற்றைகள்

தாலிக்கயிற்று பந்தமும்
தாம்பத்திய நூலும்  
நைந்து போனது சிற்சில
வார்த்தைகளின் சூட்டில்

வழக்கமான சண்டையென
டிவியில் நீந்திய குழந்தைக்கு
காதும் மனதும் மட்டும்
களவு போனது யுத்த களத்துக்கு

களவு போன காது
கண்களையும் கூடக் களவாட
உயிரும் உடலும் நகர்ந்தது
யுத்த களத்தின் மையத்திற்கு

சண்டை வேண்டாமென
சமாதானம் தேடிய பூவில்
வழிந்தோடியது கண்ணீர்
வழக்கமில்லா கடும் சூட்டோடு

ஓயாத சண்டை உக்கிரத்தை ட்ட
இரு கை கூப்பி இறுதியாய்ச் சொன்னது
”என்னைக் கொன்னுட்டு எந்தத்
தொந்தரவுமில்லாம சண்ட போடுங்க”

உதிர்ந்த ஒற்றை வரியின்
ஒரு சில வார்த்தைகளில்
ஒப்பந்தம் ஏதுமில்லாமலே
செத்துப்போனது யுத்தம்

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளைப்
பெற்றெடுப்பதாக யார் சொன்னது
பிள்ளைகள் பிரசவிக்கும்
பெற்றோர்கள் ஒன்றா இரண்டா!?

_____________

25 comments:

  1. //பெற்றோர் மட்டுமே பிள்ளைகளைப்
    பெற்றெடுப்பதாக யார் சொன்னது
    பிள்ளைகள் பிரசவிக்கும்
    பெற்றோர்கள் ஒன்றா இரண்டா!?//

    அண்ணா...
    அருமை அண்ணா...
    கடைசிப் பத்தில் மொத்தக் கவிதைக்கான கரு... கரைந்திருக்கிறது...

    ReplyDelete
  2. "ஒரு சொட்டு நெருப்பு" வித்தியாசமான சொல்லாடல்.

    குழந்தைகள் தினக் கவிதை அருமை.

    ReplyDelete
  3. //பிள்ளைகள் பிரசவிக்கும்
    பெற்றோர்கள் ஒன்றா இரண்டா!?/

    குழந்தைகள் தினத்தன்று அவர்களுக்காக ஒரு கவிதை. இது போன்ற பெற்றவர்களை சிந்திக்க வைக்கும்.

    ReplyDelete
  4. //பெற்றோர் மட்டுமே பிள்ளைகளைப்
    பெற்றெடுப்பதாக யார் சொன்னது..?//

    கதிர்,

    கலங்கடிச்சுட்டீங்க சாமீய்....!

    (பெற்றோர்களே (கணவன்,மனைவி) உங்கள் சண்டைகள் ஒருவருக்கும் தெரியாமல் நிகழட்டும். நிகழாமலே தவிர்த்தல்...தளிர்களுக்கும்,குடும்ப மகிழ்விற்கும் சிறப்பு)

    ReplyDelete
  5. கதிர்,

    வடைப்போன வயித்தெரிச்சல் ஒரு பக்கம்!

    ReplyDelete
  6. வார்த்தைகளின் வீரியம் சமயங்களில் நாம் வாழ்வை சிதைத்து விடும்.. அழுத்தமான சிந்தனை..

    //ஒரு சொட்டு நெருப்பு//
    "ஆங்கோர் காட்டினில் பொந்தினில் வைத்தேன்,
    வெந்து தணிந்தது காடு.. "
    பாரதியை இன்னொரு விதமாக பார்க்கிறேன்..

    ReplyDelete
  7. சமாதானம் தேடிய பூவில்
    வழிந்தோடியது கண்ணீர்
    வழக்கமில்லா கடும் சூட்டோடு//

    எனக்குப் பிடிச்சது. நல்லாருக்குங்ணா.

    ReplyDelete
  8. ம்ம்.. சில் நினைவுகள கிளப்பி விட்டுடுச்சு இந்தக் கவிதை..

    ReplyDelete
  9. அழகு கதிர்.
    ஆமா கதிர்.
    எழுத்தில்,பேச்சில்,நட்பில் இருப்பது போல குழந்தைகளிடமும் கற்றுக்கொள்ள ரொம்ப இருக்கு.

    ReplyDelete
  10. sir vanakkam.... ithuve mudhal murai nan ungal kavithai padipadhu... padidha mathirathil en sevvithal uthirtha varthai "SABAASH".... ARUMAI SIR

    ReplyDelete
  11. பெற்றோரின் ஒவ்வொரு சண்டையின் போதும், அவர்களின் பிள்ளைகள் மனதளவில் செத்து தான் பிழைக்கிறார்கள்....! அது அந்த பெற்றோருக்கே தெரிய வாய்ப்பில்லை. பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளின் முன் சண்டை போடகூடாது என்ற முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும்.

    வரிகளில் கலங்க வைத்துவிட்டீர்கள் !!

    ReplyDelete
  12. ஆகா! என்ன அழகு கவிதையில்!

    எல்லா குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. \\Kousalya said...
    பெற்றோரின் ஒவ்வொரு சண்டையின் போதும், அவர்களின் பிள்ளைகள் மனதளவில் செத்து தான் பிழைக்கிறார்கள்....! அது அந்த பெற்றோருக்கே தெரிய வாய்ப்பில்லை\\
    மிகச் சரியான வார்த்தைகள்.
    சுடும் கவிதை.

    ReplyDelete
  14. ரொம்பப் பிடிச்சிருக்கு! அந்தக் குழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு புரியுது..

    ReplyDelete
  15. //
    வழக்கமான சண்டையென
    டிவியில் நீந்திய குழந்தைக்கு
    காதும் மனதும் மட்டும்
    களவு போனது யுத்த களத்துக்கு

    களவு போன காது
    கண்களையும் கூடக் களவாட
    உயிரும் உடலும் நகர்ந்தது
    யுத்த களத்தின் மையத்திற்கு
    //
    பல வீடுகளின் மையத்தை உணர்த்தும் வார்த்தைகள்......

    ReplyDelete
  16. கதிர்.........ம்ம்ம்.......

    மகிழ்ச்சியா இருக்குங்க.......

    ReplyDelete
  17. பல நேரங்களில் அவுங்கதான் சமாதான படுத்தியிருங்காங்க..பலே

    ReplyDelete
  18. //பெற்றோர் மட்டுமே பிள்ளைகளைப்பெற்றெடுப்பதாக யார் சொன்னதுபிள்ளைகள் பிரசவிக்கும்பெற்றோர்கள் ஒன்றா இரண்டா//

    Ultimate !!!

    ReplyDelete
  19. வலிக்கும் உண்மைகள் கொண்ட கவிதை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. இந்த ஆழித்தீயில் வதங்கும் பூக்களும் இருக்கவே செய்கின்றன.

    நல்ல கவிதை...பட்டுத்திருந்த வைத்தியமும் அவர்களே...

    ReplyDelete
  21. //ஓயாத சண்டை உக்கிரத்தை எட்ட
    இரு கை கூப்பி இறுதியாய்ச் சொன்னது
    ”என்னைக் கொன்னுட்டு எந்தத்
    தொந்தரவுமில்லாம சண்ட போடுங்க//

    அருமையான வரிகள்..

    ReplyDelete

இது படிச்சீங்களா?