Thursday, 6 January 2011

அதன் பொருட்டு


படம் உதவி : www.harrybliss.com

சிலந்தி வலையாய்
இழுத்துப் பிணைக்கும் இணையமும்
கண்கள் காதுகள் வழியே மனதிலும்
மாயவர்ணத்தை நிரப்பும் தொ(ல்)லைக்காட்சியும்
திணறத் திணறத் திணிக்கும்
இனம் புரியாச் சுவையில் நிறைந்து…

வெட்டி வைத்த மாங்காய் துண்டில்
பூத்து நிற்கும் புளிப்புச் சுவையையும்
தட்டில் மல்லாந்து திமிறும்
உப்பு மிளகாய்தூளின் உன்னதச் சுவையையும்
ருசிக்க மறந்த மறத்த உள்நாக்கு போல்…

நீள மறுக்கும் கைகளால்
வாசனை தீராப் புத்தகங்கள்
சீந்தப்படாமல், தீண்டப்படாமல்
ஒட்டடைக் கம்பிகளில் சிறைபட்டு
கொஞ்சம் கூடுதலாய்
விசும்பிக் கொண்டேயிருக்கிறது.

-0-



27 comments:

  1. இது நிறைய பேருக்கு பொருந்தும்... (எனக்கும்...)...

    நல்ல கவிதை அண்ணா...

    ReplyDelete
  2. அதென்னமோ சரிதானுங்க.. நேத்துதான் புத்தகத்துமேலருந்த ஒட்டடையெல்லாம் துடைச்சிவிட்டேன்.. இந்த சிலந்திகளத்தான் என்ன பண்றதுன்னு தெரியல...

    ReplyDelete
  3. நீள மறுக்கும் கைகளால்

    --- உண்மை தான்.. இந்த ஊடகங்களின் ஆதிக்கத்தை மீறி வருவதென்பது சிரம்மாகவே இருக்கின்றது...

    ReplyDelete
  4. நல்ல கவிதை.

    //நீள மறுக்கும் கைகளால்
    வாசனை தீராப் புத்தகங்கள்
    சீந்தப்படாமல், தீண்டப்படாமல்
    ஒட்டடைக் கம்பிகளில் சிறைபட்டு
    கொஞ்சம் கூடுதலாய்
    விசும்பிக் கொண்டேயிருக்கிறது.//

    பலருக்கும் பொருந்தும் என்னையும் சேர்த்து. ஆனா இப்படிதான் எதையாவது சொல்லித் தப்பித்தபடி அந்தப் பலரும்..:(!!

    :)!

    ReplyDelete
  5. அன்பின் கதிர் - உண்மை நிலை இதுதான் - ஊடகங்கள் - இணையம் இவை நமது வாசிக்கும் பழக்கததை அழிக்க வந்தவைதான். இதில் ஐயமே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அட போங்க. அந்த காலத்துல வள்ளுவரு ஓலையில ஆணியில எழுதினாரு. விஞ்ஞான வளர்ச்சின்னு ஸ்மார்ட் ஃபோன்ல ஆணிலதான் எழுதுறான். புக்கு வாங்கி படிக்கறது அந்தக்காலம். இப்ப ஈ.புக்கு. அத படிக்க ஒரு மிசினு. ஒட்டடையே படியாது. ஒரு லைப்ரரியே உள்ளடக்கலாம். மாப்பு வரப்ப வாங்கி வைங்க:)

    ReplyDelete
  7. அய்யா சொல்றது சரிதான். வாங்கி வெச்ச புத்தகத்தை விட இ-புக் தான் நம்மகிட்ட நிறைய இருக்கு...

    பிரபாகர்...

    ReplyDelete
  8. அருமையான, எளிமையான ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள நல்ல கவிதை.
    மிக்க நன்றி.
    வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வரும் பொங்கல், புத்தாண்டு விழாவில் கவிஞர் அசன் புகாரி தலைமையில் "கற்க கற்க நற்றமிழ்! காக்க காக்க தமிழினம்"
    என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைக்கவிருக்கிறது.
    புதிய இளங்கவிஞர்களுக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா?

    அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

    ReplyDelete
  9. சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் . எத்தனை வாசிப்பு இருந்தது. இப்போ போயே போச்சு.

    ReplyDelete
  10. ஆன்லைன்ல புத்தகங்கள் கிடைத்தாலும், ஏனோ அமர்ந்து வாசிக்க தோன்றாது... வீட்டில் இருப்பவையும் - காத்து கொண்டு இருக்கின்றன.... ம்ம்ம்ம்......

    ReplyDelete
  11. நல்ல கவிதை அண்ணா...

    ReplyDelete
  12. thosi padintha puthagangal tharum unaivu, inayathil puthagam padikkumpothu illai..
    (sorry for the comment in thanglish)

    ReplyDelete
  13. என்னிடமே அப்பாவின் நிறைய புத்தகங்கள் இன்னும் விசும்பியடியே இருக்கின்றன. கரையான் கடித்த வலி தாங்காமல்.
    நினைவுகளையும் வலியையும் கிளறிய வரிகள்.

    ReplyDelete
  14. எவன் சுருட்டு’ன்னு எதிர் கவிதை எழுதினேன். நேரமில்லாததால பாதியில நிறுத்திட்டேன். அதனால இங்கேயே.

    ----------------------------
    சீந்தப்படாமல், தீண்டப்படாமல் இருக்கும்
    சரக்கு போத்தல்களில் சிலந்தி வலை
    ”ஆமா, சொட்டு கூட மிச்சம் வெக்காம
    காலி பண்ணின பாட்டில்ல
    ராடியாவா வீடு கட்டுவாங்க?”

    ReplyDelete
  15. நல்ல கவிதை கதிர்.

    ReplyDelete
  16. சரியான கவிதை..

    புத்தகத் திருவிழாக்கள் சீசனில் ....

    ReplyDelete
  17. உண்மை

    நல்லாயிருக்குங்க கதிர்

    ReplyDelete
  18. வானம்பாடி ப‌டி இ.புத்த‌க‌ம் ப‌டித்தால் இ.க‌திர் தாக்க‌ம்.
    வ‌ழ‌மையா வாங்கின புத்த‌க‌ம் ப‌டிச்ச‌ அது ஈ.க‌திர் தாக்க‌ம்.

    ReplyDelete
  19. உண்மைதான்ன்னு தலயாட்டிவிட்டுப் போகிறேன் கதிர் !

    ReplyDelete
  20. படிக்கவே முடிவதில்லைதான்..

    ReplyDelete
  21. வணக்கம் கதிர். புத்தாண்டுவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. //வெட்டி வைத்த மாங்காய் துண்டில்
    பூத்து நிற்கும் புளிப்புச் சுவையையும்
    தட்டில் மல்லாந்து திமிறும்
    உப்பு மிளகாய்தூளின் உன்னதச் சுவையையும்
    ருசிக்க மறந்த மறத்த உள்நாக்கு போல்…
    //

    இது நல்லா இருக்கு அண்ணா ., உண்மைலேயே இத கற்பனை பண்ணிப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊருகிறது!

    ReplyDelete
  23. //ஒட்டடைக் கம்பிகளில் சிறைபட்டு
    கொஞ்சம் கூடுதலாய்
    விசும்பிக் கொண்டேயிருக்கிறது.
    /

    உண்மைதான் அண்ணா !

    ReplyDelete
  24. விசும்பும் புத்தகங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். போதாதற்கு கூட சேர்ந்து விசும்ப இன்னும் புத்தகங்கள் வேறு சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். தவிர்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  25. ருசிக்க மறந்த மறத்த உள்நாக்கு //
    இந்த உவமை புதுமையா நல்லாருக்கு.

    ReplyDelete

இது படிச்சீங்களா?