Friday, 15 April 2011

மொழிபெயர்த்ததில்...


மௌனத்தை மொழிபெயர்த்ததில்
சம்மதமும் மறுப்பும் கிடைத்தது
அமைதி தொலைந்துபோனது!

பயணத்தை மொழிபெயர்த்ததில்
ரசிப்பும் அலுப்பும் கிடைத்தது
பாதை தொலைந்துபோனது!

காதலை மொழிபெயர்த்ததில்
கணக்குகளும் காமமும் கிடைத்தது
அன்பு தொலைந்துபோனது!

பணத்தை மொழிபெயர்த்ததில்
சொத்தும் கடனும் கிடைத்தது
இலக்கு தொலைந்துபோனது!

வன்மத்தை மொழிபெயர்த்ததில்
பகையும் குரோதமும் கிடைத்தது
உறவு தொலைந்துபோனது!

போரை மொழிபெயர்த்ததில்
வெற்றியும் துரோகமும் கிடைத்தது
மனிதம் தொலைந்து போனது!

இறுதியாய் என்னை மொழிபெயர்த்ததில்
பிம்பமும் முகமூடியும் கிடைத்தது
நான் தொலைந்துபோனேன்!

-0-

17 comments:

  1. அருமை.
    உங்களை மொழிபெயர்த்ததில்
    நட்புக் கிடைத்தது
    பதிவும் நீண்டுகொண்டது.

    ReplyDelete
  2. மொழிபெயர்த்ததில் கிடைத்ததும் தொலைந்து போனதும் மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் கதிர் .. அருமை

    ReplyDelete
  3. நல்ல கவிதை. அருமை.

    ReplyDelete
  4. கடைசி பாரா...க்ளாஸ்...

    ReplyDelete
  5. போரை மொழிபெயர்த்ததில்
    வெற்றியும் துரோகமும் கிடைத்தது
    மனிதம் தொலைந்து போனது!

    இறுதியாய் என்னை மொழிபெயர்த்ததில்
    பிம்பமும் முகமூடியும் கிடைத்தது
    நான் தொலைந்துபோனேன்!


    .....உங்கள் பதிவுகளில், மிகச் சிறந்தவற்றுள் இந்த கவிதையும் ஒன்று. அபாரம்!

    ReplyDelete
  6. //கும்க்கி said...
    கடைசி பாரா...க்ளாஸ்...//

    என்னது, கடைசிப் பத்தி க்ளாசுல ஊத்துனதுக்குப் பின்னாடி எழுதினதுங்ளா??

    ReplyDelete
  7. மாப்பு.,
    இன்னமும் தென்னை மரத்தடிலேயே உக்கோந்திருந்தா எப்புடிங்நா....

    ReplyDelete
  8. அருமை. உங்கள் கவிதை என்னை இப்படி யோசிக்க வைத்தது!
    அமைதி, பாதை, அன்பு, இலக்கு, உறவு, மனிதம்,சுயம்...தொலைந்து போனவை.
    சம்மதமும் மறுப்பும் ,ரசிப்பும் அலுப்பும் , கணக்குகளும் காமமும், சொத்தும் கடனும், பகையும் குரோதமும், வெற்றியும் துரோகமும், பிம்பமும் முகமூடியும் ...கிடைத்தவை.

    கிடைத்தவற்றை துவைத்து காயவைத்து வடிகட்டினால் தொலைந்தவை கிடைத்து விடும் இல்லை?

    ReplyDelete
  9. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

    ReplyDelete
  10. அட! கடைசி வரிகளுக்காக ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து!

    ReplyDelete
  11. நான் இப்படி எடுத்துக்கொண்டேன் கதிர்.

    எதையும் மொழிபெயர்க்காமல் அதனதன் இயல்போடு விட்டுவைக்கும்போதும் பெறாதுபோனாலும் இழக்காது இருக்கக்கூடும்.

    நல்ல அனுபவம் கவிதையாகிவிடுகிறதென்பதற்கு இந்தக் கவிதையும் ஒரு அடையாளம்.

    ReplyDelete
  12. வாழ்வு சொல்கிறது வரிகள் !

    ReplyDelete
  13. மனமும் நானும் பயணப்பட்டு , சில நேரம் பயப்பட்டு, புரியாமல் பாதியில் விட்டு
    இப்படி முடிந்தும் முடியாமலும் கணக்கு போட்டுப் போட்டே ...பாதை நகர்கிறது.
    உண்மை....உங்களின் கவிதை அபாரம். மனதை மனிதனை
    புரட்டி போடும் வரிகள் அழகு.....

    எனக்கு உங்களின் வள தளம் மிகவும் மிகவும் பிடிக்கும். "கோடியில் இருவர்" கட்டுரை அபாரம்.

    ReplyDelete

இது படிச்சீங்களா?