Friday, 24 June 2011

ஒற்றைப்புள்ளியில் கடக்கும் ஊர்திகள்





பின்னோக்கும் கண்ணாடி வழியே
நான் கண்ட அந்தச் சவஊர்தி
வெள்ளை உடலில் சிவப்பு வரிகளோடு
மெதுவாய்க் கடக்கிறது என்னை…

எத்தனை உடல்களைச் சுமந்திருக்கும்
எனும் வெற்றுப் பிரமிப்போடு
கடக்கும் வண்டியின் திரையில்லா
சன்னல் கண்ணாடியினூடே நோக்குகிறேன்

பசியோடு உணவெடுக்கச் செல்லும்
ஒரு பாம்பாய் வாகனத்தோடு
ஊர்கிறது தூக்குப்படுக்கை…

மரணவாசத்தை மறக்கடித்து
என்னுள் கொஞ்சமாய்ப் படிகிறது
பக்கவாட்டில் பிய்ந்து தொங்கும்
மாலையிலிருக்கும் எஞ்சிய பூவின் வாசம்…

எதிர் திசையிலிருந்து ஓங்கார ஊளையுடன்
எவரையோ சுமந்து கொண்டு
தலையில் நெருப்புக்குழல் சுழல
பறக்கிறது ஒரு அவசர ஊர்தி

ஒற்றைப்புள்ளியில் மிகச்சரியாய் கடக்கும்
அவசர ஊர்தியை அயர்ச்சியாய் நோக்கி
சலிப்போடும் பெருமூச்சோடும்
கொஞ்சம் பின்தங்கிக் கடக்கிறது சவஊர்தி
தனக்கான இரைதேடும் வேட்கையோடு !!

-0-

10 comments:

  1. மாப்பு... அடிக்கடி NH-47ல போய் வர்றீங்க போலிருக்கு.... வேண்டாத நினைப்பெல்லாம் வருது.... குறைச்சுகுங்க.... சிகரத்தை ஆசனூர்க்கு மாத்திடலாம்... முதலாளிகிட்டச் சொன்னா காணி நிலம் புடிச்சுக் குடுக்காமயா போய்டுவாரு??

    //சாளரக் கண்ணாடியினூடே//

    மனுசந்தான் தன்னோட கண்ணுக்கு ஆடி போடுவான்... கண்ணாடின்னு சொல்லிட்டுத் திரியுறான்...

    சாளரத்துக்குமா கண்ணு மொளச்சிருக்கு?! இருக்கும்... இருக்கும்...

    ReplyDelete
  2. தெரிந்தேதான் இருக்கிற நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம், கதிர்.

    என்றைக்கு? எப்போது? எங்கே? என்பது மட்டும் புதிர்!

    ReplyDelete
  3. அருமையாக ஊர்ந்து சென்றன நின் கற்பனை வரிகளும் ஊர்தியுடன் .....

    ReplyDelete
  4. அருமையாக ஊர்ந்து சென்றன நின் கற்பனை வரிகளும் ஊர்தியுடன் .....

    ReplyDelete
  5. நல்ல வரிகள்.

    ReplyDelete
  6. //ஒற்றைப்புள்ளியில் மிகச்சரியாய் கடக்கும்
    அவசர ஊர்தியை அயர்ச்சியாய் நோக்கி
    சலிப்போடும் பெருமூச்சோடும்
    கொஞ்சம் பின்தங்கிக் கடக்கிறது சவஊர்தி
    தனக்கான இரைதேடும் வேட்கையோடு !!
    //

    classic

    ReplyDelete

இது படிச்சீங்களா?