Friday, 9 April 2010

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

கோடியில் ஓருவர் 1
ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரேஎன்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்கஎன்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார். 

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து,  முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது  ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.
ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.
பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.
ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.
காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

கோடியில் ஒருவர் 2
சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்களஅய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!...

“இந்த மரம் வளர்த்துறாரே என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்

ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.
எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்கஎன்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.

ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.


முதல் கட்டமாக அவர்களை நான் சார்ந்திருக்கும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது. அடுத்து, வரும் ஜூலை மாதம் பதவியேற்கும் எங்கள் அரிமா சங்க புதிய தலைவர் அரிமா. வீ.குருசாமி (94429-83559) அவர்கள், வரும் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதை முக்கியத் திட்டமாக மனதில் வைத்துள்ளார். மழைக்காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.
__________________________________________________

125 comments:

  1. கோடி வணக்கங்கள் கதிர் சார். பெய்யெனப் பெய்யும் மழை.

    ReplyDelete
  2. உடம்பெல்லாம் சிலிர்க்குது கதிர்
    இந்த மனுஷங்களைப் பத்தி படிக்கும்போதே ...

    அவுங்களை கவுரவிக்க நினைக்குற உங்களுக்கு என் நன்றிகள்

    எத்தனை கோடி மரங்கள் வைத்தாய் இறைவா !

    ReplyDelete
  3. செறிவான இடுகையும், தகவலும்... அரியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. நல்ல அழுத்தமான பதிவுங்க திரு.கதிர்...என் மனத மேன்மையா பாதிச்சுடுச்சு...இந்த இரு மனிதர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. அக்கறை மிளிரும் பதிவுகளும், செய்திகளும்.

    தொடருங்கள்!

    ReplyDelete
  6. //ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது//

    சரியாய் சொன்னீங்க அண்ணே...அற்புதமான கோடிகளில் ஒரு பதிவு...

    ReplyDelete
  7. இருவரும் மகாத்மாக்கள் கதிர் சார். நன்றி.

    ReplyDelete
  8. ஆக அற்புதம் !! நம்மலும் ஏதாவது செய்யணும் !!
    - செந்தில்
    தாராபுரம்

    ReplyDelete
  9. உங்க சமுதாய அக்கறைக்கு என் பாராடுக்கள். மேலும்,தொடர்க......

    ReplyDelete
  10. போற்றப் பட வேண்டிய மாமனிதர்கள் கதிர். உங்கள் பதிவு அதற்காண முதல் வித்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஓட்டுப்போட்டாச்சுங்க மாப்பு..

    பல கோடியில் இருவருக்கு..

    ReplyDelete
  12. சிலிர்க்க வைத்த கோடைத்தென்றல் இந்தப்பதிவு கதிர்.

    பச்சை மனிதர்கள், ஐயா நகராஜனுக்கும் பெரியவர் அய்யாச்சாமிக்கும்
    செவ்வணக்கம் கதிர்.
    இந்த தகிக்கும் வெயிலைத் தன்னந்தனியாராய்
    எதிர்க்கும் இவர்கள்
    நீடூழி வாழ்க.

    ReplyDelete
  13. அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

    அன்புடன்
    சிங்கை நாதன்

    ReplyDelete
  14. குறைந்த செலவில் தெய்வங்கள் தரிசனம்.வளர்க.

    ReplyDelete
  15. அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    ReplyDelete
  16. ஏதாவது செய்யனும் பாஸ்....

    ReplyDelete
  17. உலகில் எத்தனை மா மனிதர்களை! அவர்களுக்கு எல்லாம் வணக்கம்.

    நன்றி.

    ReplyDelete
  18. இரு மனிதர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்...

    அவர்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
  19. நல்ல மனிதர்கள். இவர்களுக்குக் கோடி வணக்கங்கள்.

    கதிர் சார், நானும் எதாவது செய்ய நினைக்கிறேன். இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது பொருளுதவி மட்டுமே. மாதா மாதம் ஒரு சிறு தொகை அனுப்பினால் என் சார்பிலும் மரம் நட்டு வளர்க்க முடியுமா?

    ReplyDelete
  20. அவர்களை மீண்டும் உங்களோடு சந்திக்கவேண்டும் கதிர். என இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் அவர்களுக்கு, வெளிக்கொணர்ந்த என் அன்பு கதிருக்கு...

    பிரபாகர்...

    ReplyDelete
  21. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.

    .....இவர்களின் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன். இவர்களை அடையாளம் காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  22. அருமைங்க கதிர்.

    //ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம்.//

    அடுத்த அமோக பிஸினஸ் இதுதாங்க. மொத்த மரத்துக்கும் பேடண்ட் வாங்கி சாவ உடப்போறானுங்க. வீட்டிற்கு ஒரு மரம்னு வாக்குறுதி வரும்.:(

    --
    சிங்கை கேமராவா படங்கள்?? அருமை.

    ReplyDelete
  23. ஏதாவது செய்யணும் பாஸ்...

    மே மாசம் இந்தியா வரும்போது கூப்பிடுறேன்.. இதுபத்தி இன்னும் பேசலாம்.

    ReplyDelete
  24. மிகப் பயனுள்ள செய்திகள், அருமையான அறிமுகங்கள், நல்ல தொடக்கம்.

    உங்கள் பணி செவ்வனே நடக்க வாழ்த்துகள். கோடிகளில் இருவருக்கும் என் வணக்கங்கள்!!

    ReplyDelete
  25. இதே போன்று கோவையிலும் ஒரு பஸ் கண்டக்டர் பல மரங்களை வளர்த்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அதுவும் வலைப்பதிவுகளில் கண்டதுதான். இதே போன்றதொரு இடுகையை சென்னை நண்பர் ஒருவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் அளித்திருந்தார்.

    மரம் நடுபவர்களை வணங்குவோம், மரங்கள் இல்லாததின் விளைவுகளை நாம் இந்த கோடையில் அனுபவிக்கத்தொடங்கியுள்ளோம்.

    உங்கள் ரோட்டரி கிளப் மூலமாக மரம் நடும் திட்டம் இருந்தால் எங்கள் ஊரைச் சுற்றி இருக்கும் (வாய்ப்பாடி‍‍ விஜயமங்கலம்) அரசன்னாமலை, கொமரமலை போன்ற மலைக்காடுகளில் வளர்க்க திட்டமிடலாமே. எதிர்காலத்தில் விவசாய நிலங்களில் நிழல் அடிக்கும், ரோடு விரிவாக்கத்திற்க்கு தேவை, கரண்ட் கம்பி முட்டும் போன்ற பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாமே !

    இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஈரோடு மாவட்ட வன அலுவலரை அணுகினால் போதுமானது. (DFO) .

    வன அலுவர்களும் மரங்களை வைத்துப் பார்த்தனர் , ஆனால் மழை இல்லாததால் சில செடிகள் இந்த ஆண்டு பட்டுப்போயுள்ளது.

    முயற்சி செய்யுங்களேன் , காலம் உங்களை , உங்கள் சந்ததியினை வளர்க்கும்.

    ReplyDelete
  26. வள்ளுவர் இருந்திருந்தா

    நல்லோர் ”இருவர்” உலரேல் அவர் பொருட்டு எல்லோர்கும் பெய்யும் மழை

    அப்படினு குறலை மாத்தி எழுதி இருப்பார். சிலிர்க வைத்த பதிவு.

    ReplyDelete
  27. பத்மஸ்ரீ,ஆஸ்கர்,பத்மபூஸன் எல்லாம் இவங்களுக்குதாங்க கொடுக்கணும்

    ReplyDelete
  28. பயனுள்ள பதிவு! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கதிர்!

    எங்கள் குழுமத்தில் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன் தங்கள் அனுமதியோடு!

    ReplyDelete
  29. அம்மனிதர்களுக்கும் பதிவிட்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  30. ஆச்சரியத்தில் உறைந்து நிற்கிறேன் கதிர்,என்ன ஒரு அழகான "களப்பதிவு",வாழ்த்துகள் கதிர்.அந்த ஆவணப்படத்தை ஆவலோடு எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  31. பிரதிபலன் பாராமல் இது போன்ற தியாகங்கள் செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்களை பற்றி தெரியும் போதுதான் நாம் வாழ்கையின் அர்த்தங்களை தெரிந்து கொள்கின்றோம்.நம்மால் முடிந்தவரை மரங்களை நட்டு வளர்ப்போம் அடுத்து வரும் சந்ததிக்காக...

    ReplyDelete
  32. அருமையான காலத்திற்கேற்ற பதிவு.....

    ReplyDelete
  33. வணக்கம் அம் மாமனிதர்களுக்கும் அறிமுகப் படுத்திய உங்களுக்கும். அருமையான படங்களுக்கு நன்றி!

    /ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் வரும் ஏப்ரல் 15ம் தேதி என் மனம் கவர்ந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை சிறப்பு விருந்தினராக வைத்து ஒரு பாராட்டு விழாவை நடத்த இருக்கிறது./

    அரிமா சங்கத்துக்கு பெருமை.

    /விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை/

    ஜனாதிபதி பரிசு பெற இவர்கள் என்ன ஹைசொசைட்டிக்கான பள்ளியா நடத்துகிறார்கள். என் தொகுதியில் இந்த இரண்டு ரத்தினங்கள் இருக்கின்றன என்று பாராளுமன்றம் வரையில் மார்தட்டக்கூட மனமற்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை உங்களை மாதிரி யாராவது இவர்களின் தியாகத்தை வெளிக்காட்டினால்தான் உண்டு.

    ReplyDelete
  34. நண்பர் முரளிக்குமார் இரண்டாமவரைப்பற்றி எழுதியபோதே எனக்குள் ஒரு சிலிர்ப்புணர்ச்சி ஏற்பட்டது. அதுவேதான் இப்பொழுதும். இந்த சூழலில் அவர்கள் செய்வது எவ்வளவு மகத்தான காரியம். என்காலமும் அவருக்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறது... நாமும் முடிந்ததை செய்வோம்....

    குறைந்தது நம்மாள் முடிந்தவரை நம் வீட்டு வாசலிலாவது ஒரு மரக்கன்றினை நட்டு பராமரிப்போம்...

    ReplyDelete
  35. அட ஈரோட்டுக்கு பக்கத்துலயே ரெண்டு கடவுள் இருக்காங்களா!?

    ReplyDelete
  36. இவர்களைப் பற்றி பசுமை விகடனில் படித்திருக்கிறேன்...... சமுதாயத்திற்கு மிக அவசியமானவர்கள்... சொல்லப் போனால் நம்ம ஹீரோக்கள்... எல்லோரும் எழுந்து நின்னு கைத்தட்டுங்கப்பா..

    ReplyDelete
  37. முரளியின் பதிவில் முன்பே படித்திருக்கிறேன்.

    பதிவோடு நிற்காமல் அதையும் தாண்டி செய்ய வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு நன்றி என்பது சிறிய வார்த்தை.


    சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பித்து அதுவும் எல்லையற்று நீண்டு வளரட்டும்.

    மிக மிக மகிழ்ச்சியாக உணருகிறேன்.

    வாழ்த்துகள் கதிர்.

    ReplyDelete
  38. இம்மாமனிதர்களால் இன்னும் மழை பெய்கிறது.
    மாமனிதர்களுக்கு வணக்கங்கள்.
    அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  39. திரு அய்யாசாமி நாகராஜனின் முயற்சிகளுக்கு வாழ்த்துச் சொல்லி முடித்துவிட முடியுமா என்ன? உங்கள் அன்பும் அதற்கு ஈடானதே ...வாழ்த்துக்கள் கதிர் ..!!இவர்களை முன்னிலைப்படுத்தியமைக்கு

    ReplyDelete
  40. கதிர் சார்... .உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன்...ஆனால் பின்னூட்டமிடுவது இதுதான் முதல் முறை. உங்கள் எழுத்துக்களில் ஒரு அழுத்தமும்...ஒரு சமுதாய கோபமும் இருப்பதை மறுப்பதற்கில்லை...!

    சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த உங்களைப் போன்ற ஊடகவியாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போதே சக்தி பிறக்கிறது, மனம் சந்தோசம் கொள்கிறது. மிக்க நன்றி சார் .....பயனுள்ள பதிவுகளின் தோப்பு உங்களின் வலைப்பக்கம். உங்களின் மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுங்க....கதிர்....

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. தள்ளாத வயதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் தலை மகன்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. அருமையான பதிவு நண்பரே....



    //ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது//

    இன்றைய உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். இப்படி கண்டுகொள்ளப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

    ReplyDelete
  43. மனம் நெகிழ்ந்துப்போனேன் கதிர். இதுதான் மனிதம்! அந்த நல்ல மனித உள்ளங்களை வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன். திசைக் காண்பித்த உங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  44. :)தொழ வேண்டியவர்கள்... ம்ம்... ஏதாவது செய்யணும் இவங்களுக்கு...

    ReplyDelete
  45. நன்றி கதிர்
    இவர்களின் வாழ்க்கையை பள்ளி படங்களில் சேர்க்க வேண்டும் வளரும் மாணவ பருவத்திலேயே நல்ல விதைகளை பதிய செய்ய வேண்டும்.

    பச்சை மீது இச்சை கொண்ட
    வாழும் தெய்வங்களுக்கு வணக்கங்கள்
    சிலர் வாழ்க்கைதான் வரலாறு ஆகும் - ஐயா ஆனால்
    அந்த வரலாறே உங்கள் காலடி தேடி வர ஆசைப்படும்.
    ஆண்டுகள் பல கடந்தாலும் - ஐயா
    பறவை இனம் தினமும் உங்கள் புகழ்பாடும்.

    ReplyDelete
  46. சிலிர்த்து நிற்கிறது மனம்....

    நிச்சயம் நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுத்தியிருக்கிறார்கள்...

    ReplyDelete
  47. தன்னலமற்ற மனிதர்கள்.
    வாழ்த்துவோம்.வணங்குவோம்.

    ReplyDelete
  48. பாராட்டுக்கு மட்டுமல்ல; வணக்கத்திற்குரியவர்கள் அவர்கள்.
    தொடருங்கள்.. வாழ்த்துகள்!

    ReplyDelete
  49. enna comment podrathu
    avanglapathu ai paravai ilaiyae nu solra yogithikooda illa,1000 pesalaam eluthalam aana oru chedi kooda valathama , unga oorla land cent enna villai kekra ennaiyum sertha palar mun ivarkal, i m sry but i sud admit i m ashamed even to call i m educated and i do share social responsibilites!!!!

    ReplyDelete
  50. கதிர் ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க!

    மரங்களின் முக்கியத்துவத்தை பலர் உணராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவர்களை போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மரங்களை அதிகம் நேசிக்கும் எனக்கு இதைபோன்ற செய்திகளை படிக்கும் போது நிறைவாக உள்ளது.

    ReplyDelete
  51. //ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது//

    well said

    very good post.

    ReplyDelete
  52. எதைச் செய்தாலும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர உலகம் இது. எந்த பிரதி பலனையும் எதிர்பாராது இந்த இருவரும் செய்திருப்பது போற்றுதலுக்குறியது. இவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய உங்கள் செயல் பாராட்டுக்குறியது.
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  53. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்கால சந்ததிகளுக்காக இப்பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சேவைக்கு சிரம் தாழ்த்துவோம்.

    அதை வெளிக்கொண்ர்ந்து சிறப்பாக பதிவாக்கியிருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  54. இவர்களைப் பற்றி நினைக்க நினைக்க உடல் சிலிர்க்கின்றது.

    நாமும் எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது.

    ReplyDelete
  55. இரு மனிதர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  56. நிச்சயமாக பாராட்டுக்கும்,வணக்கத்துக்கும் உரியவர்கள்.எதிர்கால சந்ததியினருக்காக பிரதிபலன் பாராத இவர்கள் கண்டிப்பாக நினைவில் நிறுத்தப்படவேண்டும்.

    ReplyDelete
  57. பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது//

    நல்ல விசயம்.. பலமுறை பல இடங்களில் இவர்களைப்பற்றி பதிந்து வைப்பது மிகத்தேவையான ஒன்றே..

    ReplyDelete
  58. அருமைங்க! இவுங்களை மாதிரி பெரியவங்களாலதானுங்க இந்த ஊருல மழை பெய்யுது.

    பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.

    ReplyDelete
  59. //எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.//

    பாசத்துக்காக போராடும் வயதில் இவர்கள்
    பசுமைக்காக உழைக்கிறார்கள்...

    வரும் காலங்களில் அவற்றில் தவழும் தென்றல் இவர்கள் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்.

    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பெரியவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

    ReplyDelete
  60. மனிதர்கள் கடவுளாக மாற முடியும் என்று இந்த இருவர் நிரூபித்திருக்கிறார்கள். அருமையான பகிர்வு. நன்றி

    ReplyDelete
  61. "விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை."

    அசத்தி விட்டீர்கள். இதுபோன்ற சமூக அக்கரையுள்ள பதிவுகள் நிச்சயம் பதிவுலகை ஆரோக்கியமான நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்லும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. கதிர் சார், வணக்கம். அருமையான, நம் நாட்டிற்கு தேவையான, மிக முக்கியமான பதிவு. இந்த இரு மா மனிதர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கும், அவர்களை கவுரவிக்க முயற்சி செய்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... நன்றி.
    -அருள்குமார், படப்பை

    ReplyDelete
  63. அந்த காலத்தில அங்கே இருந்த வெள்ளைகாரத் தொரை காலையில வாக்கிங் போகும்போது நிறைய மர விதைகளும் கூடவே எடுத்து போவாராம். வாக்கிங் ஸ்டிக்கால குழி தோண்டி ஒரு விதை போட்டு மண்ணால மூடிடுவாராம்.அப்படியே செஞ்சு உருவானதுதான் ஆணைமலைன்னு ஒருக்கா தியோடர் பேசிக்கிட்டிருகும்போது சொன்னாரு.உங்க பதிவு படிச்சவுடனே அந்த ஞாபகம் வந்தது...நல்லவர்கள் இருவர்.

    ReplyDelete
  64. நல்லோர் ஒருவர் உளரேல்னாலே மழை பொழியும்.இங்கோ இருவர்.இந்த எளிய மனிதர்களின் இமாலய சாதனைக்கு என் வந்தனங்கள்.

    ReplyDelete
  65. கதிர் அண்ணா,
    உங்க அலைபேசி எண் எனக்கு மெயில் அனுப்புங்க.

    இது குறித்து விரிவா பேசுவோம்.

    ReplyDelete
  66. :)) என்னன்னு பாராட்ட இவங்கள? மேன்மக்கள்..

    ReplyDelete
  67. அற்புதம் கதிர்!

    // அட ஈரோட்டுக்கு பக்கத்துitலயே ரெண்டு கடவுள் இருக்காங்களா!?//

    மிக அருமையான,நெகிழ்வான கமென்ட் இது.

    கடவுள் எதிர்ப்பாளரிடமிருந்து,கிடைத்த காம்ப்ளிமென்ட்!

    தன்னையறியாது ஆச்சர்ய குறி வேறு (பிறகு தன்னையறிந்த கேள்வி குறி,இல்லையா அருண்? :-)

    கடவுள் இவர்கள்தானே!(மீண்டும்,இல்லையா அருண்? :-)

    இந்த கட்டுரையின் வெற்றி இதுவும்தான் கதிர்!

    ReplyDelete
  68. இவர்களது தோலில் மட்டுமே சுருக்கங்கள்... மனதிலும் செயலிலும் இல்லை. வணங்குகிறேன் இந்த வனப்பாதுகவல் தெய்வங்களை.

    உங்களுக்கும், அரிமா சங்கத்திற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  69. அருமையான பதிவு. இவர்களப் போன்றோர் தான் உலகத்தையே வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும். மர நிழல் படுகிறது என்று மரத்தை வெட்டுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

    மரங்கள் இருக்கும் பகுதியில் 10 டிகிரி வரை வெப்பம் குறைவாக இருக்கும். முடிந்த வரை மரங்களை நட வேண்டும். மேலும் பசுமையான சுற்றுச் சூழல் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    ReplyDelete
  70. கோடியில் இருவருக்கு
    ஆயிரத்தில் ஒருவனின்
    பணிவான வணக்கங்கள்....

    ReplyDelete
  71. இந்த பசுமை மனிதர்களுக்கு அல்லவோ பாராட்டுவிழா நடத்த வேண்டும். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    regards
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  72. கதிர் இவர்கள் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு என் நன்றிகள்...

    உன்னால் முடியும் தம்பி படத்தில் இது போல ஒரு கேரக்டர் இருக்கும்...

    ReplyDelete
  73. கதிர் அண்ணா,

    அவர்களின் அர்ப்பணிப்பை பதிவாக்கியதற்கு வாழ்த்துகள் உங்களுக்கு.

    அந்த மாமனிதர்களின் காலைத்தொட்டு வணங்கி ஆசி பெறவேணும் போல் ஆசையாய் உள்ளது.

    ReplyDelete
  74. ivargal than unmaiyana sathanaiyalargal, parattukkuriyavargal

    ReplyDelete
  75. பதிவின் தலைப்போ கோடியில் இருவர் பதிவின் தரமோ கோடியில் ஒன்று. வாழ்த்துக்கள்.
    இத்தகைய எளியோரின் சாதனைகளை நம்மைப் போன்றோரே வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.

    ReplyDelete
  76. மநதுக்கு ரொம்ப மகிழ்வான பதிவு. நிஜமாகவே இவர்கள் காலில் விழுந்து வணங்கவேண்டும்.

    ReplyDelete
  77. ஆக இவர்களின் எதிரிகள் என்று பார்த்தால் , டாக்டர் ஐயா குரூப்பாக தான் இருக்கும். சரிதானே

    ReplyDelete
  78. சமூக அக்கறை உள்ள மிகவும் சிறப்பான பதிவு ..

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  79. பலரும் எழுதியதுபோல இதைப் படிக்கும்போது மனம் நெகிழ்ந்துபோயிற்று. இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் மழை பொழிகிறது என்பது மிகையன்று... ஏனெனில், அவர்கள் வைத்த மரங்களால் மழைபொழிகிறது.

    ReplyDelete
  80. ஐம்பதாவது ஓட்டு நம்மளுது தானுங்க

    ReplyDelete
  81. அற்புதமான மனிதர்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
  82. நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  83. இவர்களால்தான் உலகத்தில் மழையே பெய்கிறது..!

    ReplyDelete
  84. ஆஹா !
    அருமையான பதிவு!!

    ReplyDelete
  85. Romba santhosam. Intha irruvarumm mihha vyurtha ullamm kondavargall.Vaztha vayathu illai...vannanaguu kereen.

    ReplyDelete
  86. மீ த தொண்ணூறு

    ReplyDelete
  87. இந்த இரண்டு மகா விருட்சங்களின் விதையை
    இளம் மாணவ சமுதாயத்தின் மனதில்
    விதைக்க வேண்டியது நமது கடமை கதிர்.
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  88. நேசமித்ரன் said...
    உடம்பெல்லாம் சிலிர்க்குது கதிர்
    இந்த மனுஷங்களைப் பத்தி படிக்கும்போதே ...

    அவுங்களை கவுரவிக்க நினைக்குற உங்களுக்கு என் நன்றிகள்

    எத்தனை கோடி மரங்கள் வைத்தாய் இறைவா !

    இதைத் தான் நானும் சொல்லிக்கிறேன்

    இதற்கு கருத்து சொல்லும் தகுதியும் எனக்கில்லை...பாடம் படித்தேன்..மனித வடிவில் தெய்வங்கள் இருக்கத்தான் செய்கின்றன...

    ReplyDelete
  89. கோடியில் இருவர்

    பசுமையின் ஆர்வலர்

    வாழ்த்துக்கள் என்றென்றும்

    அவர்களுக்கும்

    பதிவிட்ட
    உங்களுக்கும்

    ReplyDelete
  90. you can start propogating forward mails having this as a content so that you can have max reach amidst all web crawlers

    ReplyDelete
  91. இந்த​மேஜை எந்தக் காடு - என்பதிலிருந்து ஒவ்வொன்றிலும் மரங்களின் ரேகையும் காட்டின் அடையாளமும் காணமுடிகிறது.

    எல்லாம் அழித்துப் படைக்கப்படும் ​பொருட்கள்.

    இவர்களே உண்மையான படைப்பாளிகள்!

    இவர்களை லைம்லைட்டிற்கு ​கொண்டுவருதல் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  92. கோடியில் இருவருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  93. வாழும் தெய்வங்கள் இருவருக்கும் எனது வணக்கங்களும் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  94. இவர் கோடி மக்களில் ஒருவர் ..
    ஆனால் கோடி முதலைகலீல் ஒருவர் நம் தமிழ்நாடு முதல்வர்கள்..
    ஒன்னும் பண்ண முடியாது

    ReplyDelete
  95. மீ த 270 .
    நெகிழ்ச்சியான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  96. We salute you. Because of people like you we have some rain at least.

    ReplyDelete
  97. தலை வணங்குகிறேன் நண்பரே... தமிழகத்தில் மனிதர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்று புரிய வைத்தமைக்காக!!

    ReplyDelete
  98. அவர்கள் பாராட்டுக்காக இதை செய்வதில்லை, அவர்கள் நமக்கு முன்னோடிகள் ! நாம் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்து செல்வதோடு, நாமும் நம் பங்கிற்கு மற்றும் நம் எதிர்கால சந்ததியர்க்காக நான்கு மற கன்றுகலவது நட்டு நீரூற்றி வளர்க்க வேண்டும் என்று உறுதி கொள்வோம் !

    ReplyDelete
  99. அவர்கள் பாராட்டுக்காக இதை செய்வதில்லை, அவர்கள் நமக்கு முன்னோடிகள் ! நாம் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்து செல்வதோடு, நாமும் நம் பங்கிற்கு மற்றும் நம் எதிர்கால சந்ததியர்க்காக நான்கு மற கன்றுகலவது நட்டு நீரூற்றி வளர்க்க வேண்டும் என்று உறுதி கொள்வோம் !

    து. ஜெகதீஷ்

    ReplyDelete
  100. உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.

    இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

    இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

    ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?

    ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?

    தொடரும் ஊழல்கள் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் ?

    ReplyDelete
  101. Hi Kathir,

    Please take it to Dy CM or CM immediately...

    can it be translated in English as well please?

    Saravanan
    umarss2000@gmail.com
    Kiev, Ukraine

    ReplyDelete
  102. Intha Manithargal (Kadavul) iruppathanal Ulagathil Malai peigirathu

    ReplyDelete
  103. Good day Mr.kathir.its realy wonder to hear these kind of news.thanx.best wishes for you.

    ReplyDelete
  104. K.Venkataramani, Chennai

    ReplyDelete
  105. K.Venkataramani, Chennai

    Kaliyugathilum ippadi patta nalla ullangal.

    ReplyDelete
  106. INTHA MAHA MANITHARKAL VAAZHA PALLANDU THANKS FOR YOUR VERY GOOD POST NADESAN DUBAI

    ReplyDelete
  107. இது போன்ற மனிதர்களை உலகுக்கு அறிமுகபடுத்தி பிறறையும் எதாவது செய்ய வேண்டும் தூண்ட வைக்கும் உங்களுக்கு நன்றி

    // இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.
    //

    இதை விட சிறந்த சமூக பணி எதுவுமே இருக்க முடியாது

    ReplyDelete
  108. இப்போதும் மழை பெய்வது இவர்களால் தான்.
    வாழும் தெய்வங்கள்.

    ReplyDelete
  109. உண்மயான கதாநாயகர்கள் வாழ்த்துவோம் மதிப்போம்
    போலியான கதாநாயகர்கள் ஒடுங்கட்டும்.

    அன்புள்ள மனிதர்களை கவுரவிக்க நினைக்குற உங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  110. Real heroes..., thanks Mr.Kathir

    ReplyDelete
  111. தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  112. சிறப்பான படைப்பும், சிறப்பான விருதும். வாழ்த்துகள் கதிர்.

    ReplyDelete
  113. I will show this post as an example of What is Citizen Journalism is all about ! Well done Kathir ! Amazing work ! Cheers!

    ReplyDelete
  114. sir now(20.05.2011)only study the kodiel iruvar i really thanks u go to that place and take interview with that green mans. we also follow that manner in the city side also.
    thanks once again for such activites apart from ur busy schedule sir
    keep going sir
    all the best

    ReplyDelete
  115. நெகிழ்ச்சி!!.. கோடியில் இருவரையும் வெளிகொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி!!
    // ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். //

    இயற்கையின் செல்வங்களை மனிதன் படைத்த ரூபாயை கொண்டு நிச்சயமாக அளவிடமுடியாது. இந்த ரூபாயை உருவாக்க கூட மரத்தை வெட்டுகிறான் இந்த மனிதன்

    ReplyDelete
  116. manapoorvaman valthukal. Naa Erode la iruka perumapada innum kaaranam iruku. naa innum oru chedu kuuda nadala. asingama iruku sollave.

    ReplyDelete
  117. This comment has been removed by the author.

    ReplyDelete
  118. nalla pathivu anna
    paaratukkal
    kodi vannakam avarkaluku

    ReplyDelete
  119. மாந்த நேயம் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் மரத்தை நேசிக்கும் இருவருக்கும் வணக்கங்கள்

    ReplyDelete
  120. Respectable persons. hats off to them.. God Bless their efforts. Hope others should arise to do the same..Good should not only be read and commented, its appreciable if its followed..

    ReplyDelete
  121. Thanks for sharing this.. :) it is need for the hour..

    ReplyDelete

இது படிச்சீங்களா?